மதுரை, ஜூன் 19 - அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கவும், பயன்படுத்திய நாப்கின்களை மறுசுழற்சி செய்வதற்கான இயந்திரங்களை வைக்கக் கோரிய மனு மீதான விசாரணையில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் ஆனந்தவல்லி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் “ தமிழகத்தில் உட்கிரமங்கள் முதல் நகரங்கள் வரை அரசுப் பள்ளிகள் உள்ளன. பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஒட்டுமொத்த ஆண்கள், பெண்களின் படிப்பறிவு சதவீதமும் அதிகரித்துள்ளது. பருவம் எய்திய மாணவிகள் மாத விடாய் காலத்தில் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதைத் தவிர்க்கும் வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும். பயன்படுத்திய நாப்கின்களை மறுசுழற்சி செய்வதற்கான இயந்திரங்களை வைக்க வேண்டும், இதை நடைமுறைப்படுத்த அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனு புதனன்று நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதை நடைமுறைப்படுத்த அரசு தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரினார். இதையடுத்து நீதிபதிகள் மனு குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.