சென்னை, நவ. 21- புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக தலைமை தகவல் ஆணையர் ராஜகோபாலுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக பணியாற்றி வந்த ராஜகோபால், அண்மையில் தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ராஜ்பவனில் வியாழனன்று(நவ.21) நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஐஏஎஸ் அதிகாரியான ராஜகோபால், கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், உள்துறை செயலாளராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். தற்போது தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.