சென்னை, செப். 23- ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், பணியாளர் சீர்திருத்த துறை டி. ஜெயக்குமார் ஆகியோரை ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.அன்பரசு, மாயவன், ஆ.செல்வம், க.மீனாட்சி சுந்தரம், இரா.மோசஸ், ஜி.வெங்கடேசன், கே.பி.ஓ.சுரேஷ் உள்ளிட்டோர் சென்னை தலைமை செயலகத்தில் திங்களன்று (செப். 23) சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தனது 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வகையில் ஜனநாயக முறையில் போராடியது. ஆனாலும், தீர்வு எட்டப்படாத நிலையில், தமிழக முதலமைச்சரின் கவனத்தினை ஈர்த்திட கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டோம்.
தமிழக அரசு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை களை என்றுமே புறந்தள்ளியதில்லை. அதன் அடிப்படையில், அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டோம். பொதுமக்கள், மாணவர் நலன் கருதி வேலை நிறுத்தத்தை கைவிட்டு ஜனவரி 30 அன்று பணிக்கு திரும்பி னோம். ஆனால், 5,400 பேர் பணிநீக்கம், பணிமாற்றம் என அரசால் பழி வாங்கப்பட்டுள்ளனர். எனவே, போராட்ட காலத்தில் ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீதான நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், 9 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சர்களிடம் தெரிவித்தோம். அமைச்சர்களும் முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்ப தாக தெரிவித்துள்ளார். அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று செவ்வாய்க்கிழமை (செப். 24) அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவிருந்த உண்ணாநிலை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.