tamilnadu

img

குப்பைமேனி

அதிகாலை நடைபயிற்சியை முடித்துவிட்டு, கை நிறைய பசுமையான சின்னஞ் சிறு செடிகளுடன் வீட்டுக்குள் வந்தான் வரதராஜன். “இந்த மனுசன் எதுக்கு செடிகளப் பிடிங்கிட்டு வந்திருக்காரு..” என்று எண்ணியவாறு கணவன் கையில் இருந்த செடிகளைக் கூர்ந்து பார்த்தாள் கவிதா. “என்ன பாக்குற… இதுக்குப் பேரு குப்பை மேனிச் செடி.. ஒரு வாரமா கால்ல ஒரே அரிப்பா இருக்கு… இத அம்மியில வச்சு அரச்சு.. அத அரிக்கிற எடத்தில அழுத்தித் தடவிட்டுக் குளிச்சா அரிப்பு காணாமப் போயிடும்” 

“அப்படியா…? எனக்கும் வலது கால்ல அடிக்கடி அரிக்கிதுங்க…”“அப்ப நாளைக்கி வாக்கிங் போயிட்டு வரும்போது குப்ப மேனியப் பிடிங்கிட்டு வர்றேன்.. நீயும் அரச்சு தேயி… சரியாப் போயிடும்…”“ம்… கூம்… எனக்கு இந்த பைத்தியக்கார வைத்யமெல்லாம் ஒத்து வராது… நான் ஸ்கின் ஸ்பெசலிஸ்ட்டுகிட்ட போய்க்கிடுறேன்… என்னத்தயாவது தேச்சு… ஏடாகூடாமா எதாவது ஒடம்புக்கு வந்திடப் போகிது…”“இல்ல கவிதா… சின்னப் பையனா இருக்கும் போதே எனக்கு அரிப்பு வந்தா எங்கம்மா குப்பமேனி இலையைத்தான் அரச்சுத் தேய்ப்பாங்க… அன்னைக்கே சரியாப் போயிடும்..”“இவரு இப்பிடித்தான்… எதுக்கெடுத்தாலும் எங்கம்மா சின்னப் பிள்ளையில அதப் பண்ணினாங்க…. எங்க தாத்தா எண்ண தேச்சுக் குளிப்பாட்டி விட்டாருன்னு ஆரம்பிச்சிடுவாரு…”“காசு இல்லாத வைத்தியம்… கணப்பொழுதுல சரியாப் போயிடும்… விருப்பமின்னா செய்யி… இல்ல ஆஸ்பத்திரிக்கிப் போயி பணத்தக் கொட்டு..”

“தோல் டாக்டர்கிட்டத்தான் நான் போகப் போறேன்… நீங்க குப்பமேனியத் தேய்ங்க… இல்ல கொடுக்காப் புளி இலையத் தேய்ங்க… என்னய ஆள விடுங்க…”வேண்டா வெறுப்பாக குப்பைமேனிச் செடிகளில் இருந்த இலைகளை ஆய்ந்து… அரைத்து காலியான தேங்காய் சிரட்டையில் போட்டுக் கொடுத்தாள் கவிதா. அதனை அரிக்கும் கால் பகுதியில் மட்டுமின்றி, உடல் முழுதும் தேய்த்து, உற்சாகமாய் குளித்தான் வரதராஜன். குளியலறையை விட்டு வெளியேறும் போது அரிப்பு போய்விட்டது போன்ற உணர்வு உருவாயிற்று. அந்த சின்ன நகரத்தில் தோல் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர் ஒருவர் மட்டுமே இருந்தார். அதனால் எப்போது பார்த்தாலும், அவரிடம் கூட்டம் அலை மோதும். எனவே முன் கூட்டியே அப்பாய்ண்மெண்ட்டு வாங்கி விட்டு வரவேண்டும் என்கிற நடைமுறையை அவர் அமல்படுத்தினார். அதன்படி அந்த டாக்டரைப் பார்க்க மறுநாள் பத்து மணிக்கு கவிதாவிற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. வரதராஜன், ஆபீசு விட்டு வந்த நேரங்களில் அவனுடன் இரு சக்கர வாகனத்தில் ஆஸ்பத்திரி, சாப்பிங், கோயில் என்று சுற்றி வருவது கவிதாவின் வழக்கம். வரதராஜனின் அலுவலக நேரம் காலைப் பத்து மணிக்கு ஆரம்பித்து மாலை ஐந்தரைக்கு முடியும். அதனால் இந்த ஸ்கின் டாக்டர் அப்பாய்ட்மெண்ட் கொடுத்திருந்த காலைப் பத்து மணிக்கு கவிதாவால் கணவருடன் போக இயலவில்லை. எனவே ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்குச் சென்றாள். அங்கு சென்றடைந்த ஐந்தாறு நிமிடங்களில் டாக்டரால் அழைக்கப் பட்டாள். அரிப்பு எடுக்கும் காலினை மேலோட்டமாகப் பார்த்த டாக்டர், பிறகு கேள்வி மேல் கேள்வியாய்க் கேட்டார்.

“எவ்வளவு நாளா அரிக்கிது…?”

“என்ன சோப்பு போட்டுக் குளிக்கிறிங்க..?”

“கத்திரிக்கா கருவாடு அதிகமாச் சாப்பிடுவிங்களா…?’

“ஒங்க அப்பா அம்மாவுக்கு இந்தத் தொந்தரவு இருந்திச்சா..?”

இத்தனை கேள்விகளுக்கும் கவிதாவிடம் பதில்களைப் பெற்ற பிறகு, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு சீட்டு எழுதிக் கொடுத்தார்.

“இப்போதைக்கு ஆயின்மெண்ட்டு ஒண்ணு தர்றேன்…. அத அரிக்கிற பகுதியில அப்ளைப் பண்ணுங்க.. நாளைக்கி டெஸ்ட் ரிப்போர்ட்டோட வாங்க… ரிப்போர்ட்டப் பாத்திட்டு என்ன ட்ரிட்மெண்ட் எடுக்கலாம்னு முடிவு பண்ணுவோம்…” என்று கூறி கவிதாவிற்கு விடைகொடுத்தார் ஸ்கின் ஸ்பெசலிஸ்ட்டு

ஆஸ்பத்திரிக் கவுண்ட்டரில் ஆயின்மெண்ட், கன்ஸல்டிங் பீஸ் ஆகியனவற்றிற்கு கேட்ட பணத்தைச் செலுத்தி விட்டு, பரிசோதனை நிலையம் போய் ரத்தம், யூரின் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தாள். ஆட்டோ சார்ஜோடு செலவைக் கூட்டிப் பார்த்தால் அது ஆயிரம் ரூபாயைத் தொட்டது. மறுநாள் பரிசோதனை நிலையத்திற்கு வரதராஜனை அனுப்பி ரிப்போர்ட்டைப் பெற்ற பிறகு டாக்டருக்கு ஃபோன் செய்தாள். காலை பதினோரு மணிக்கு டாக்டரைச் சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் தரப்பட்டது. ரத்தம், யூரின் பரிசோதனை ரிப்போட்டைப் பேருக்குப் பார்த்துவிட்டு அலர்ஜிதான்… வேறொன்றுமில்லை என்றபடி, ஊசி போட்டுவிட்டு மாத்திரைகள் எழுதித் தர்றேன் ரெண்டு நாளைக்குச் சாப்பிடுங்கள் சரியாப் போய்டும் என்றார். ஆட்டோ கட்டணத்தோடு அன்றைய மருத்துவச் செலவு ஐநூறு ஆயிற்று. ஆக சாதாரண அரிப்புக்காக ஆயிரத்தி ஐநூறு ரூபா செலவாகி… அந்த மாதத்தின் பட்ஜெட்டை பள்ளமாக்கியது. அதன் பிறகு அஞ்சலக சேமிப்பில் பணம் எடுத்து விழுந்து பள்ளத்தை சரி செய்தார்கள். வரதராஜனுக்கு இருந்த அரிப்பு ஒரே நாள் குப்பைமேனித் தேய்ப்பால் ஓடிவிட்டது. 

கவிதாவின் நிலைமை அது மாதிரி இல்லை. ஊசி போட்டு… மாத்திரை விழுங்கி.. ஆயிண்மெண்ட் தடவி… இவ்வளவு பண்ணியும் எந்த மாற்றமும் ஏற்படக் காணோம். வேறு வழி தெரியாமல் குப்பைமேனிச் செடியை பிடிங்கி வரச்சொல்லி ரெண்டு நாட்கள் தேய்த்தாள். அவ்வளவுதான்….. அரிப்பு போன திக்குத் தெரியவில்லை.“டாக்டர் ஆலோசனை இல்லாமல் மருந்துக் கடையில், தலைவலி, காய்ச்சல், தடுமன்னு சொல்லி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது தப்பு… பழைய மருந்துச் சீட்டுல எழுதின மாத்திரையை இன்னைக்கி வயித்த வலிக்கிதுன்னு வாங்கிச் விழுங்குவது அதிகப் பிரசங்கித்தனம்…. பல் வலிக்கு விக்ஸ் போடுறது முட்டாள்தனம்… அதுக்காக எதுக்கெடுத்தாலும் டாக்டர்கிட்ட போய் நிக்கிறது சரியில்ல… அரிப்புக்கு குப்பமேனிய அரச்சுத் தேய்க்கலாம்… சளிக்கி துளசி கசாயம் தயாரிச்சுக் குடிக்கலாம்… இருமலுக்கு முள்ளு முருங்கக் கீரையை அடை பண்ணிச் சாப்பிடலாம்…” என்கிற வகையில் வரதராஜன் அடுக்கிக் கொண்டே போனான். எப்பொழுதும் அவனின் சொல்லிற்கு எதிர்ச்சொல் சொல்லி ஏளனமாய் கிண்டலடிக்கும் கவிதா, இன்று ஏனோ அமைதியாகச் கேட்டுக் கொண்டிருந்தாள்.