ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, மே 5- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கொரோனா மூன்றாம் நிலை என்று சொல்லக்கூடிய சமூக பரவலுக்கு உள்ளாகியுள்ள இக்காலகட்டத்தில் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதிலும் மதுபானக் கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. செவ்வாயன்று மதுபானக் கடைகளை திறந்த தில்லி, மஹாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தனிமனித இடைவெளி பராமரிக்கப்படாமல் பல கிலோ மீட்டர் தூரம் குடிகாரர்கள் மதுக்கடைகளை திறக்குமுன்னரே வரிசையில் நின்று இருக்கின்றார்கள். பல இடங்களில் காவல் துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளது. இத்தகைய மோசமான முன்னுதாரணத்தை பிறமாநிலங்களில் பார்த்த பின்பும் தமிழக அரசு வருகின்ற ஏழாம் தேதி டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அறிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அருகில் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து இருப்பதாகவும், தமிழக மக்கள் பக்கத்து மாநிலத்திற்கு எல்லை தாண்டி போய் மது வாங்கி வருவதாகவும் எல்லையில் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை; எனவே தமிழகத்தில் மதுபான கடைகளை திறப்பதாகவும் அரசு அறிவித்திருப்பது கேலிக்கூத்தானது. மாநில எல்லை தாண்டுபவர்களை கட்டுப்படுத்த முடியாதஅரசு தமிழகத்திலுள்ள 7000 டாஸ்மாக்கடைகளில் எப்படி சமூக இடைவெளியை பாதுகாக்கும்?
40 நாட்களாக எந்த தொழிற்சாலைகளும் திறக்கப்படவில்லை. பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கிறது. சாதாரண ஏழை எளிய கூலித் தொழிலாளிகள் வேலை கிடைக்காமல் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சாதாரண ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க வேண்டிய தமிழக அரசோ அதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் டாஸ்மாக் கடைகளை திறப்பதில் இவ்வளவு வேகம் காட்டுவது ஏன்?
ஊரடங்கு காலத்தில் குடும்பங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பதாக தேசிய மகளிர் ஆணையமும் மாநில மகளிர் ஆணையமும் அறிக்கை வெளியிட்டிருந்தன. மதுபானம் கிடைக்காமலேயே இத்தனை வன்முறைகளை எதிர்கொண்ட பெண்கள் டாஸ்மாக் கடைகள் திறப்பதால் இன்னும் பல மடங்கு குடும்ப வன்முறைகளை சந்திக்க நேரிடும் என்பதை ஜனநாயக மாதர் சங்கம் சுட்டி காட்டுகிறது.
எனவே தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக் கடைகளை திறப்பதை இச்சமூக நலன் கருதி நிறுத்தி வைக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது. மேலும் கொரோனா சமூகப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் இந்த சமூக பரவல் அதிகமாவதற்கான வாய்ப்புகளுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் தமிழக அரசு கவனத்தில் எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.