வேலூர்,ஆக.9 வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீழ்த்தினார். ஆகஸ்ட் 9 அன்று ராணிப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன. காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. ஆரம்பத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார். அடுத்த சில நிமிடங்களில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முந்தினார்.
இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது. காலை 11 மணி வரைக்கும் திமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 13250 வாக்கு கள் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருந்தார். இதனால், சென்னை அதிமுக அலு வலகத்திலும் வாக்கு எண்ணும் மையத்திற்கும் அதிமுகவின் படையெடுத்தனர். ஆனால், அந்த உற்சாகம் சிறிது நேரமே நீடித்தது. அதன் பின்னர், அடுத்தடுத்த சுற்று முடிவுகளில், வாக்கு வித்தியாசம் படிப்படியாக குறைந்து. 11.45 மணிக்கு கதிர் ஆனந்தின் கை ஓங்கியது. அதிமுகவின் வாக்கு வித்தியாசம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.
11.50 மணிக்கு அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளிய கதிர் ஆனந்த் 7,500 வாக்குகள் முன்னிலை பெற்றார். ஒரு கட்டத்தில் 17 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார் திமுக வேட்பாளர். பிறகு, 1.30 மணி நிலவரப்படி 11 ஆயிரத்து 644 வாக்குகள் முன்னிலை பெற்ற கதிர் ஆனந்த் 4 லட்சத்து 68 ஆயிரத்து 870 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 226 வாக்கு களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 25 ஆயிரத்து 953 வாக்குகளும் பெற்றிருந்தனர். இறுதி நான்கு சுற்றுகளில் ஏ.சி.சண்முகத்தின் வாக்குகள் சற்று அதிகரித்தாலும் கதிர் ஆனந்தின் வெற்றியை தடுக்க முடியவில்லை. திமுகவின் முன்னிலை நீடித்துக்கொண்டே இருந்தது. இறுதிச் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4 லட்சத்து 85 ஆயி ரத்து 340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தோல்வியடைந்த ஏ.சி.சண்முகத்துக்கு 4,77,199 வாக்குகள் கிடைத்தது. 8,241 வாக்குகள் அதிகம் பெற்று திமுக கைப்பற்றியது.