சென்னை, ஜூலை 16- தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரகால நிலை அமல்படுத்தப்பட்டிருக்கிறதா என எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 15, 16 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பின ர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து போராட்டம் நடத்த, எதிர்ப்புகளைத் தெரிவிக்க, விமர்சனங்களை முன்வைப்பதற்கான உரிமை கள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சி தவிர அநேகமாக மற்ற கட்சிகள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காவல் துறையிடம் அனுமதி பெறவே போராட வேண்டி யிருக்கிறது. உயர் அதிகாரிகளை சந்தித்தோ அல்லது நீதிமன்றத்தை அணுகியோ தான் அனுமதி பெற வேண்டியிருக்கிறது அல்லது மக்கள் நடமாட்டமே இல்லாத இடங்களுக்கு அமைப்புகளைத் தள்ளுவது, சில குறிப்பிட்ட விஷயங்களை பேசக்கூடாது என்று நிபந்தனை விதிப்பது, கூட்டப்பொருளை மாற்றி எழுதித் தர வற்புறுத்துவது போன்ற செயல்பாடு கள் காவல்துறை தரப்பில் அதிகரித்து வருகின்றன. தர்ணா போன்ற இயக்கங்களுக்கு சில தருணங்களில் அனுமதி கொடுத்துவிட்டு பந்தல், நாற்காலிகளைப் போடக்கூடாது என்று கட்டுப்படுத்தப்படுகிறது.
அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு எதிராக மாற்றுக் கருத்து சொல்லக்கூடாது என்று சட்டவிரோதமாக காவல்துறை தடுக் கிறது. 8 வழிச் சுங்கச்சாலை, கோவை யில் குடிநீர் விநியோகத்தை பன்னாட்டு நிறு வனமான சூயசுக்கு கொடுப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை மூடல் உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்துச் சொல்ல வும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவும் தடை போடப்பட்டு கைது செய்வது - வழக்குப் போடுவது - சிறையிலடைப்பது - தேசத்துரோகப் பிரிவை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது அறிவிக்கப்படாத அவசர கால நிலையாக தெரிகிறது. இந்நிலை ஜனநாயகத்திற்கும், சட்டவிதி களுக்கும் முற்றிலும் புறம்பானது. எதிர்வரும் விமர்சனங்களுக்கு பதில் கூற இயலாத போதாமையையும், மக்கள் விரோத கொள்கை களையும் மூடி மறைக்க மத்திய, மாநில அரசுகள் கருத்துரிமை பறிப்பை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகின்றன. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கு வதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இந்தியாவில் கொண்டு வரப்பட்டது தான் தேசத்துரோக குற்றம். சுதந்திர இந்தியாவில் இ.பி.கோ. 124 ஏ பிரிவாக அது தொடர்வது காலனிய தொடர்ச்சியாகும். இப்பிரிவு உடனடி யாக ரத்து செய்யப்பட வேண்டுமென்றும், ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும், பொதுமக்களும் குரலெழுப்ப முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூலை 23ல் பேரணி - சிபிஐ(எம்) ஆதரவு
மீத்தேன், ஷேல்கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் 2019 ஜூலை 23ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள பேரணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. தமிழக அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது. ஆனால், மத்திய பாஜக அரசு தொடர்ந்து வேதாந்தா, ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் காவிரி படுகை பாலை வனமாகி விடுமோ என்ற அச்சம் தொடர்கிறது. எனவே, காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேற்கண்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், கடலூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஜூலை 23ம் தேதி காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெறவுள்ள பேரணியை வெற்றிகரமாக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பதுடன் இந்தப் பேரணியில் அனைத்து கட்சிகளும், மக்கள் அமைப்புகளும் பங்கேற்க வேண்டுமென மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.