தமிழகத்திற்கு எந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். இதை ஒருபோதும் பாஜக அனு மதிக்காது என்று தமிழிசை சவுந்தரராஜன் திங்க ளன்று ஆணவத்தோடு கூறியுள்ளார். தமிழகத்திற்கு பாஜக அரசு எந்த நல்ல திட்டத்தை கொண்டு வந்தது. அதை தமிழக மக்கள் எதிர்க்கின்றனர் என்று தமிழிசை கூறுகிறார். மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு இழைப்ப தெல்லாம் அநீதியைத் தானே தவிர மருந்துக்கும் நல்லது என்று சொல்வதற்கு ஒரு திட்டம் கூட இல்லை என்பதை தமிழிசை வசதியாக மறந்து விடுகிறார். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்கு நீட் தேர்வி லிருந்து விலக்களிக்க முடியாது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நாடாளுமன்றத்தில் திங்களன்று எழுத்து மூலமாக அளித்த பதில் ஒன்றில் கூறி யிருக்கிறார். இதுதான் பாஜக அரசு தமிழகத்திற்கு செய்யும் நன்மையா?
தேசிய கல்விக் கொள்கை குறித்து எதிர்க் கருத்து தெரிவித்தால் அவர்களை வன்முறையை தூண்டுகிறார்கள் என்று வன்முறையை தூண்டு வதற்காகவே வாயைத் திறக்கிற எச்.ராஜா போன்ற பாஜக தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை காமராஜரின் கனவு என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறுவதோடு தமிழ் எங்கேயும் புறக்கணிக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார். காமராஜர் எப்போதும் மொழியை எதிர்த்தவர் அல்ல என்று தங்களது இந்தித் திணிப்பு முயற்சிக்கு சப்பைக்கட்டு கட்டு கிறார் தமிழிசை.
தேசிய கல்விக்கொள்கையில் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழியை கற்க வேண்டும் என்று திருத்தியது அல்லாமல் இந்தியை திணிக்கும் முயற்சியில் அவர்கள் பின்வாங்கவே இல்லை என்பதை மறைக்க முயல்கிறார். ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் திறந்தவர் காமராஜர். அவரது கனவுத் திட்டம் என்று கூறும் தமிழிசை அருகமை பள்ளிகளை திறக்கும் திட்டம் பற்றி வாய்திறக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர தமிழ்நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு வது பற்றியோ பிற மாநில அணுக் கழிவுகளையும் கூடங்குளத்தில் கொண்டு வந்து கொட்டும் திட்டத்தை கைவிடுவது பற்றியோ நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை கைவிடுவது பற்றியோ தமி ழிசை உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் மவுனமே சாதிக்கின்றனர் என்பது தமிழகம் அறிந்ததே.
தமிழக மக்களுக்கு பாதகமான பல்வேறு திட்டங்களையும் மத்திய அரசு கைவிட வேண்டு மென அழுத்தம் கொடுத்து நிறுத்துவதற்கு தைரி யம் இல்லாத மாநில அதிமுக அரசும் வெறும் வாய் வார்த்தைகளையே அள்ளி வீசி சமாளித்துக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி, எட்டு வழிச்சாலை, உயர் மின் கோபுரங்கள் அமைத்தல் போன்ற திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள். அவற்றை கட்டாயம் நிறைவேற்றியே தீர வேண்டு மென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசுவது தமிழக நலனுக்கு உகந்தது அல்ல.