ஈரோடு,மே 29-ஈரோடு மாவட்டம் கோபி அருகே செவ்வாயன்று சூறைக் காற்றுடன் பெய்த மழையால் அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்து வைத்திருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின.கோபி அருகே கூகலூரில் செயல்பட்டு வரும் அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விற்பனைக் காக, நெல்மூட்டைகளை கொண்டு வந்து அடுக்கி வைத்திருந்தனர். இதனிடையே அப்பகுதிகளில் செவ்வாயன்று மாலை சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் நனைந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமாகின.அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய தாமதப் படுத்துவதால், மழையில் நனைந்து நெல்மூட்டைகள் சேத மடைந்துள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். நனைந்த நெல்மூட்டைகளை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.