1929 - 30ஆம் ஆண்டு உலகில் பொருளாதாரப் பெருமந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளில் முரண்பாடுகள் முற்றி, பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த கால கட்டத்தில்தான் - 1933ஆம் ஆண்டு - ஹிட்லர் ஜெர்மன் நாட்டின் அதிபராகப் பதவியேற்றார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே இரண்டாம் உலகப் போர் மேகங்கள் சூழ்ந்து வந்தன. இந்த சூழலில் இந்தியாவில் செயல்பட்ட கம்யூனிஸ்டுகள் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தேச விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் செயல்பட்ட கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர். அதேசமயம், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள், தொழிலாளர்களைச் சங்கமாக அணிதிரட்டி அவர்களுக்குத் தலைமை ஏற்று வீறுகொண்ட வர்க்கப் போராட்டங்களை நடத்தினர். இப்படியாக நாட்டு விடுதலை என்பது உழைக்கும் மக்களின் விடுதலையை உள்ளடக்கமாகக் கொண்டது என்ற தெளிவுடன் செயல்பட்டனர். எனவே 1930 – 40 காலகட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் பேராதரவுடன் புதிய உத்வேகம் பெற்று கம்யூனிஸ்ட் இயக்கம் எழுச்சியுடன் வளர்ந்தது. தமிழகத்திலும் சென்னை, மதுரை, கோவை என முக்கிய நகரங்களில் ஆலைத் தொழிலாளர்கள் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் போராட்டக் களத்திற்கு வந்தனர். இன்று இடதுசாரி இயக்கம் அப்பகுதிகளில் ஆழமாக வேரூன்றி இருப்பதற்கு அக்காலத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களின் மூலமே வித்திடப்பட்டது என்றால் மிகையல்ல. 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் (சென்னை மாகாணம்) காங்கிரஸ் அமைச்சரவை பதவிக்கு வந்தது. கொத்தடிமைத்தனமான அடக்குமுறை, சுரண்டலில் சிக்கி இருந்த தொழிலாளர்கள், மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி ஏற்பட்ட நிலையில் பெரும் நம்பிக்கையுடன் தங்கள் உரிமைப் போராட்டத்தைத் தொடங்கினர். கோவை பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில்லில் வேலை செய்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைப் போராட்டத்தைத் தொடங்கினர். ஒருபுறம் முதலாளிகளின் ஏவல் ரௌடிகளின் தாக்குதல், மறுபுறம் போலீசின் அடக்குமுறை என இரண்டையும் எதிர்த்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சரியான தலைமை இல்லாமல் தொழிலாளர்களின் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது என்பதை உணர்ந்த கே.ரமணி உள்ளிட்ட முன்னணி தொழிற்சங்க களப் போராளிகள், சென்னை பிராட்வேயில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குச் சென்று பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்ற தலைவர்களை லட்சுமி மில் தொழிலாளர் போராட்டத்துக்கு வழிகாட்டி தலைமை ஏற்கும்படி கேட்டுக் கொண்டனர். கோவை தொழிலாளர் தூதுக்குழுவினரின் வேண்டுகோளை ஏற்று ஜீவா கோவைக்கு அனுப்பப்பட்டார். லட்சுமி மில் தொழிலாளர்களின் இந்த போராட்டத்தில்தான் கோவை ராமதாஸின் “காலுக்குச் செருப்புமில்லை, கால்வயிற்றுக் கூழுமில்லை! பாழுக்கு உழைத்தோமடா, தோழனே! பசையற்றுப் போனோமடா!!” என்ற பாடலை சிம்ம கர்ஜனைக் குரலில் ஜீவா உணர்ச்சிப் பெருக்குடன் பாடுவார். தொழிலாளர் கோரிக்கைகளை கிஞ்சிற்றும் மதிக்காத லட்சுமி மில் நிர்வாகம் அவர்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில், மில்லைத் திறந்து கருங்காலிகளை உள்ளே அனுப்ப முயன்றது. ஆனால் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தாரும் மறியல் செய்து அம்முயற்சியை முறியடித்தனர். அப்போது பாப்பநாயக்கன்பாளையம் பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. அதேசமயம் பி.ராமமூர்த்தி சென்னையில் தொழிலாளர் நல அமைச்சர் வி.வி.கிரியை (முன்னாள் ஜனாதிபதி) சந்தித்துப் பேசி லட்சுமி மில் போராட்டத்தில் மாநில அரசு தலையிட்டு உடன்பாடு ஏற்படச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். இதை ஏற்று அமைச்சர் வி.வி.கிரி கோவைக்கு வந்து பி.ராமமூர்த்தி உடனிருந்து தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இது பஞ்சாலைத் தொழிலாளர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். அந்த வெற்றியின் உந்துதலுடன் ஓராண்டு காலத்திற்குள், கோவை மாவட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள் பெருமளவு வளர்ந்தோங்கின. அதன் விளைவாக, தொழிலாளர் பிரச்சனைகளைத் தீர்க்க, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எம்.வெங்கட்ராமையாவை கொண்ட ஒரு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது. தமிழ்நாட்டில் அதுதான் முதல் விசாரணைக் குழுவாகும். கோவை மில் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பி.ராமமூர்த்தி இந்த விசாரணைக் குழுவின் முன் ஆஜராகி வாதிட்டார். அக்காலத்தில் சிறைக் கைதிகளுக்குக் கொடுக்கப்படும் உணவின் மதிப்பைக் கணக்குப் போட்டுக் காட்டிய பி.ராமமூர்த்தி, பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் ரூ.7 முதல் ரூ.14 வரையிலான மாதச்சம்பளம் அதைக் காட்டிலும் குறைவு என்பதை புள்ளி விபரத்துடன் விளக்கினார். தொழிலாளர் வீட்டு வாடகை, குழந்தைகள் படிப்புச் செலவு உள்ளிட்ட அவசியத் தேவைகளைச் சுட்டிக் காட்டினார். அத்துடன், கோவையில் இருந்த சத்துணவு ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராக இருந்த டாக்டர் ஐக்கிராய்ட், நகர்ப்புறத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2800 கலோரி உணவு அவசியம் என்று கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டி, ஒரு தொழிலாளிக்கு இதை ஈடுகட்ட மாதம் ரூ.36 குறைந்தபட்ச சம்பளம் தேவை என வாதிட்டார். இந்த ஆணித்தரமான வாதத்தை ஏற்ற நீதிபதி வெங்கட்ராமையா, உலகில் மிகப்பெரும் பொருளாதார மந்தத்திலும்கூட கோவை மில்கள் அசாதாரண லாபத்தில் ஓடின என்பதைச் சுட்டிக்காட்டி குறைந்தபட்ச சம்பளத்தை ஓரளவு அதிகமாக நிர்ணயித்தார். மில் முதலாளிகள் இதை ஏற்கவில்லை. மீண்டும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஸ்ட்ராட்டி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அங்கு காரசாரமான வாதங்களுக்குப் பிறகு கூடுதல் சம்பள உயர்வு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் வேலைநீக்கம் செய்யப்பட்ட பல தொழிலாளர்கள் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அப்போதுதான் தோழர் கே.ரமணி தொழிற்சங்க முழுநேர ஊழியரானார். கோவை பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில் தொழிலாளர் போராட்டத்துக்கு சுற்று வட்டார மில் தொழிலாளர்களும் ஆதரவளித்து உதவி செய்தனர். இப்போராட்டத்தின் வெற்றி செங்கொடி தலைமையிலான தொழிற்சங்கத்தின் மகத்துவத்தை தொழிலாளர்களுக்கு உணர்த்தியது. அந்த வட்டாரம் முழுவதும் செங்கொடி இயக்கத்தின் கோட்டையாக மாறியது.