tamilnadu

img

கௌரி கொலை குறித்து மக்கள் பேச வேண்டும் - பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. பத்திரிகையாளர், சமூகச் செயற்பாட்டாளர் என்பதையெல்லாம் தாண்டி, ‘தொடர்ந்து இந்துத்துவத்துக்கு எதிராகப் பேசினார் என்ற காரணத்தால் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானார் கௌரி லங்கேஷ்’ எனக் குற்றம்சாட்டி தொடர் போராட்டங்கள் நடந்தன. ஆனாலும், கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்புடையவர்கள் இதுவரை சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை. கன்னட வார இதழான ‘லங்கேஷ்’ பத்திரிகையின் ஆசிரியராக  இருந்தவர் கௌரி லங்கேஷ். கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பசவன்குடி பகுதியிலுள்ள அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்றார். அங்கு இரண்டு மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கௌரி லங்கேஷின் மார்பு, கழுத்து, வயிறு ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தன. சமூக செயற்பாட்டாளர்கள் தபோல்கர், கல்புர்கியைச் சுட்டுக் கொன்றதைப் போன்றே கௌரி லங்கேஷும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதை சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தினர். பல மாதங்கள் நடந்த விசாரணையையடுத்து இந்த வழக்கில் பரசுராம் வாக்மோர், பிரவீன்குமார், நவீன்குமார் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தது காவல்துறை.

கல்புர்கி கொலைக்கு முன்னதாக, கோலாபூரில் தங்கள் குடியிருப்புக்கு அருகே காலை நேர நடைபயிற்சி மேற்கொண்டிருந்த சமூகச் சீர்திருத்தவாதி கோவிந்த் பன்சாரேவும் அவரின் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2011 ஆகஸ்ட் 30ம் தேதியன்று, நரேந்திர தபோல்கர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இவர்களைப் போலவே கௌரியும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்துத்துவ எதிர்ப்புக் கொள்கை என்பதே இந்த நான்கு கொலைச் சம்பவங்களின் மையப்புள்ளியாக இருக்கிறது. கௌரி லங்கேஷ் கொலை வழக்கில், வெடிபொருட்களை விநியோகம் செய்தவர்கள் மற்றும் சாத்தியமான சதிகாரர்கள் யார் என்பதை மட்டுமே இதுவரை நடைபெற்ற விசாரணைகள் காட்டுகின்றன. ஆனால் இந்தக் கொலைகளுக்கான காரண கர்த்தா யார், திட்டமிட்டுச் செயல்படுத்தியவர்கள் யார் என்பது போன்ற முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

தபோல்கர், பன்சாரே, கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோரின் மரணத்துக்குப் பின்னால் இந்துத்துவ அமைப்புகள் இருக்கின்றன எனக் குற்றம்சாட்டுகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்குப் பிறகு, இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார். இந்தக் கொலை வழக்கின் விசாரணை குறித்து அவரிடம் பேசினோம். “கௌரியின் கொலைக்கு யார் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். இந்துத்துவத்துக்கு எதிராகப் பேசிய நான்கு பேர், தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொலையாளிகள் மக்கள் முன் அடையாளப்படுத்தப்பட வேண்டும். ஆனால், கொலையாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள். கௌரி, தன்னுடைய சொந்தக் காரணங்களுக்காகவா கொல்லப்பட்டார்? சமத்துவம் நிலவிய மண்ணில் இந்துத்துவ வெறியுடன் நடந்து கொண்டதை எதிர்த்துப் பேசினார். கேள்விகள் கேட்டார். அதற்காகவே கொல்லப்பட்டார்.

கெளிர கொலை குறித்து மக்கள் பேச வேண்டும். அப்போதுதான் ஆளும் அரசு கொஞ்சமாவது அசைந்துகொடுக்கும். இந்த வழக்கில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. ஆனால், உண்மையான குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படவில்லை. ஆசிரியர் தின நாளில்தான் கௌரி கொலை செய்யப்பட்டார். எங்களில் பலருக்கும் கௌரிதான் ஆசிரியர். அவர் விட்டுச் சென்ற பணியை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். கௌரி கொலை வழக்கில் உண்மை ஒரு நாள் வெளிவரும். நீதி வென்றே தீரும். இன்னொரு கௌரி கொல்லப்படுவதற்கு முன், மக்கள் விழிப்படைய வேண்டும்” என்றார். கௌரி லங்கேஷ் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம், பெங்களூரில் செப்டம்பர் 5ம்தேதி நடைபெற்றது. ‘இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும். குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கௌரி லங்கேஷ் நினைவு அறக்கட்டளை சார்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சமூக செயற்பாட்டாளர்கள் கொலைகளில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

இ.லோகேஷ்வரி, நன்றி : ஜுனியர் விகடன் (15.9.19)