tamilnadu

img

முடிந்த சாலைகளுக்கு மீண்டும் டெண்டர்... ரூ.1300 கோடி சுருட்ட மெகா திட்டம்

கொரோனா வைரஸ் பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அளவிட முடியாத வகையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவ வசதிகளுக்கு கூட பணம் இல்லாமல் தமிழக அரசு தள்ளாடுவதாக கூறுகிறது. அத்தியாவசியச் செலவுகளுக்காக அரசு கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது.ஆனால், இந்த பேரிடரின் போதும் அரசின் பல துறைகள் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான வேலைகளுக்கு டெண்டர் விடுகின்றன.

இந்த ஊரடங்கு காலத்திலும் ரூ. 3,300 கோடிக்கு 43 டெண்டர் கோரப்பட்டுள்ளது. இவற்றில் தஞ்சாவூர் கட்டுமானம், பராமரிப்பு கோட்டத்தில் மட்டும் ரூ.1827 கோடிக்கு இரண்டு டெண்டர் கோரியுள்ளது முதலமைச்சர் பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத்துறை.தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு 59,405 கி.மீ நீளமுள்ள சாலையை பராமரித்து வருகிறது. கடந்த 15 வருடங்களாக ஒருங்கிணைந்த சாலைகள் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் (சிஆர்ஐடிபி) கீழ் ஒவ்வொரு வருடமும் சில சாலைகளைத் தேர்ந்தெடுத்து அகலப்படுத்தல், வலுப்படுத்துதல், குறுக்கு வடிகால் பணிகள், சாலைப் பாதுகாப்பு, பாதசாரி வசதி போன்ற பணிகளை மேற்கொண்டு முழுமையான அளவில் மேம்படுத்தப்படுகின்றன. 

தில்லு முல்லு...
நெஞ்சாலைத்துறைக்கு ஒவ்வொரு வருடமும் ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதியை சிஆர்ஐடிபி திட்டத்திற்கு ஒதுக்கி வருகிறது அரசு. இந்தத் திட்டத்தின் பெயரில் உள்ளது போன்றே தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தவே இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் கடந்த 15 ஆண்டுகளில் அனைத்து சாலைகளும் மேம்படுத்தி உள்ளனர்.2014 ஆம் ஆண்டு முதல், வருடத்திற்கு ஒரு கோட்டத்தைத் தேர்ந்தெடுத்து மாநிலச் சாலைகள், முக்கிய மாவட்டச் சாலைகளை உலக வங்கியின் ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு திட்டமான செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்தின் (ப்பி.பி.எம்.சி) கீழ் சாலைகளை பராமரிக்கும் பணிகளையும் நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது. இந்தப் பணியை ஒப்பந்ததாரர் ஒருவர் மட்டுமே ஐந்து வருடங்கள் பராமரிக்கும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.இந்த திட்டத்தில் சாலைகளின் பழுதை மட்டுமே சரி செய்ய வேண்டும். ஆனால், நடைமுறையில் நடப்பதோ ‘தனிக் கதை’!

‘மாபியா கும்பல்’...
சிஆர்ஐடிபி திட்டத்தின் கீழ் முழுமையாக மேம்பாடு செய்த சாலைகளையே ப்பி.பி.எம்.சி திட்டத்தில் மீண்டும் சேர்த்து கொண்டு ஒரு கோட்டத்திலுள்ள அனைத்து சாலைகளையும் தங்களுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் ஒருவருக்கு மட்டுமே ஐந்து வருடத்திற்கு குத்தகை கொடுத்து பங்கு பிரித்துக் கொள்ளும் ‘தில்லாலங்கடி’ வேலையை செய்து வருகிறார்கள். இதற்கு உதாரணம் 2014 ஆம் ஆண்டில் பொள்ளாச்சி கோட்டம், 2015-16-ல் கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவள்ளூர், 2018-ல் விருதுநகர், 2019-ல் பழனி, சிவகங்கை ஆகிய கோட்டங்கள்.

பழனி கோட்டத்தை தங்களுக்கு நெருக்கமான மதுரையைச் சேர்ந்த ஆர்.ஆர். கட்டுமானத்துக்கும், ஐந்து கோட்டங்களை அருப்புக்கோட்டையைச் எஸ்.பி.கே. அண்டு கம்பெனியின் நாகராஜன் செய்யாதுரைக்கும் தாரை வார்த்துள்ளார்கள். சிவகங்கை கோட்டத்தில் எஸ்.பி.கே. அண்டு கம்பெனிக்கு தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இப்போது தஞ்சாவூர் கோட்டத்தையும் இணைத்துக் கொண்டு ப்பி.பி.எம்.சி திட்டத்தில் சாலைகளை பராமரிக்க டெண்டர் கோரியுள்ளனர்.ஒவ்வொரு கோட்டத்திலும் ஒரு ஒப்பந்ததாரருக்கு மட்டுமே ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. அதாவது, தங்களுக்கு நெருக்கமான இரண்டு ஒப்பந்ததாரர் களுக்கு ஐந்து வருடங்கள் கொடுக்க உட்கோட்டங்களை இரண்டாகப் பிரித்து இரு டெண்டர் கோரினர்.
462.211 கி.மீ நீளமுள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சாலைகளை பராமரிக்க ரூ.1,240 கோடிக்கு (ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டரை கோடி ரூபாய்) ஒரு டெண்டரும், தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் உள்ள 371.440 கி.மீ நீளமுள்ள சாலைகளை பராமரிக்க ரூ. 707 கோடிக்கும் இரண்டாவது டெண்டரும் கோரப்பட்டது. இந்த இரண்டு டெண்டர் களின் ஒட்டு மொத்த மதிப்பு 1947 கோடியாகும்.

முதல் டெண்டர் (எண்: 37/2019-20/எச்டிஓ) பிப்ரவரி 25 அன்று கோரப்பட்டதாக தமிழ்நாடு டெண்டருக்கான வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சட்டப்பேரவையில் மார்ச் 16 ஆம் தேதி, கொரோனா நோய்த் தொற்று சம்பந்தமான விவாதம் நடைபெற்று கொண்டிருந்தபோது அரசின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த டெண்டருக்கான இறுதித் தேதி தேதி ஏப்ரல் 15 என அறிவிக்கப் பட்டாலும், ஊரடங்கு பிரச்சனையால் ஏப்ரல் 17என்றும் பின்னர், மே 21 எனவும் மாற்றினர்.
இரண்டாவது டெண்டர் (எண் 39/2019-20/எச்டிஓ) ஊரடங்கு அமலில் இருக்கும்போது ஏப்ரல் 20ஆம் தேதி கோரப்பட்டுள்ளது. இதற்கான இறுதித் தேதி மே 22 என டெண்டர் தேதிகளில் ‘குட்டையை குழப்பினர்’.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாத நிலையில், துறை அமைச்சரான முதலமைச்சருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் வழங்கப் பட்டுள்ளது.தமிழக நெடுஞ்சாலைத் துறையில் 41 கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கோட்டத்திலும் வருடத்திற்கு சராசரியாக 100 முதல் 150 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது.தஞ்சாவூர் கோட்டத்தில் உள்ள திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்தின் ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் பணிகளை ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவரும், இந்த வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளரும் வரும் ஜூலை மாதத்துடன் ஓய்வு பெறவிருக்கும் பழனிதான் அறிவித்து வருகிறார்.

வேடிக்கை... வினோதம்...
சாலைப் பணிகளை பல பகுதிகளாகப் பிரித்து அதிக லாபம் தரும் வேலைகளை தங்களுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரருக்கும் சிறிய வேலைகளை மற்ற ஒப்பந்ததாரருக்கும் வழங்குவதையே வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.இப்போது கோரப்பட்ட இரண்டு டெண்டர்களில் தஞ்சாவூருக்கு மட்டும் 833 கி.மீ சாலைகளுக்காக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 2.25 கோடி என்று 1,874 கோடி ரூபாய் செலவு செய்ய முடிவு செய்துள்ளனர்.ப்பி.பி.எம்.சி ஒப்பந்தங்களில் தேவையற்ற வேலைகள் இனங்களையும், ஏற்பாடுகளையும் சேர்த்து மிக அதிகப்படியான தொகைக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன.ஏழு கோட்டங்களிலும் பராமரிப்பு ஒப்பந்தம் எப்படி செய்யப்பட்டது என்பதை கீழ்காணும் அட்டவணையில் பார்ப்போம்:

வருடம்                                                   கி.மீ,                            சராசரி செலவு
                                                                                                     (ரூபாய் கோடியில்)
2014 பொள்ளாச்சி                            377.380233                             930.62 
2015-16 கிருஷ்ணகிரி                     581.000450                            000.77 
2015-16 ராமநாதபுரம்                      567.000460                            290.81
2015-16 திருவள்ளூர்                      776.000630                            380.81 
2018 விருதுநகர்                              642.500611                             980.95 
2019 பழனி                                       507.258688                             261.36 
2019 சிவகங்கை                             558.587715                              001.28
இதேபோல், ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் கோட்டத்தில் நடந்த வேலைகளையும் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையும்.

வருடம்                         கி.மீ.                   தொகை
2014-15                        81.02121                 471.50 
2015-16                      189.70183                 310.97 
2016-17                       216.6493                  950.43 
2017-18                       281.200                   450.45 
2018-19                     325.46154                  000.47

அட்டவணை – I:
ஒரு கி.மீட்டர் சாலைக்கு சராசரியாக அதிகபட்சம் செலவு செய்யப்பட்டது 1.36 கோடி ரூபாய்.

அட்டவணை – II: 
ஒரு கி.மீ சாலைக்கு 1.50 கோடி ரூபாய் உச்சபட்சமாக செலவு செய்து தங்கள் இஷ்டம் போல் பணத்தை ‘சுருட்டி’ உள்ளனர்.இப்போது சாலைகளை வலுப்படுத்த, அகலப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், சாலைகளில் பழுது ஏற்பட்டுள்ள சில இடங்களில் மட்டுமே சரி செய்தால் போதுமானதாகும். ஆனாலும், மாநில நெடுஞ்சாலைகள், பெரிய மாவட்ட சாலைகளுக்கு சி.ஆர்.ஐ.டி.பி.யின் கீழ் முன்னுரிமை அளிக்கப்பட்டதை தஞ்சாவூர் கோட்டத்தில் 2016-17 க்குப் பிறகு இந்த இரண்டு வகை சாலைகளை விட இதர மாவட்ட சாலை களுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதையும் காண முடிகிறது.

ப்பி.பி.எம்.சி கீழ் தஞ்சாவூர் கோட்டத்தில் தேர்ந்தெடுக் கப்பட்ட சாலைகளின் மொத்த நீளம் 833.70 கி.மீ. இந்த சாலைகளை பராமரிப்பு செய்ய ரூ. 416.85 கோடி மட்டுமே செலவிட வேண்டும். ஆனால் 1,874 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்து ‘கொள்ளை’ அடித்துள்ளனர். வேடிக்கை, என்னவென்றால் இந்த அனைத்து சாலைகளும் சி.ஆர்.ஐ.டி.பி - ன் கீழ் முழுமையாக மேம்படுத்தப்பட்ட வையாகும்.இரண்டு அட்டவணைப் படியும் 1300 கோடி ரூபாய்க்கு ‘கையாடல்’ செய்துள்ளனர்.இந்த ‘மெகா பிளானை’ தயார் செய்தவர் தலைமைப் பொறியாளராவார்.

‘மர்மக் குகை’...
தஞ்சாவூர் கோட்டத்தில் நடைபெறும் பணிகளுக்காக வெளியிடப்பட்ட அரசாணை எண்: 40, 19.02.2020-ன் பக்கம் இரண்டில் 47.40 கி.மீ நீளமுள்ள விக்கிரவாண்டி- கும்பகோணம் மாநில சாலைகள் நான்கு வழிச் சாலையாகவும், 234 கி.மீ நீளமுள்ள பெரம்பலூர்- மானாமதுரை மாநில சாலைகள் மூன்று வழிச் சாலையாகவும்,128 கி.மீ நீளமுள்ள முக்கிய மாவட்டச் சாலைகள் இரண்டு வழிச் சாலையாகவும் அகலப் படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.இந்த 410 கி.மீ நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்துவதற்கான செலவு ரூ.415 கோடி (போக்குவரத்து கணக்கை மிகைப்படுத்தி சேர்த்திருக்கிறார்கள்) (அரசாணை பக்கம் 7)19 மாநிலச் சாலைகளில் எஸ்எச் 64 கும்பகோணம்- சீர்காழி சாலை (17.800 கி.மீ), எஸ்எச் 200 நாகூர்- நாகப்பட்டினம், ராமநாதபுரம்- திருச்செந்தூர் (40.400 கி.மீ) ஆகிய சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டதால் தற்போதைய மாநில சாலைகளின் நீளம் 429.369 கி.மீ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (அரசாணை பக்கம் 4).
ஆனால், ப்பி.பி.எம்.சி கீழ் எடுத்துக் கொள்ளப்படும் மாநில சாலைகளின் மொத்த நீளம் 487.569 கி.மீ எனவும் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்ட 58.200 கி.மீ சேர்த்து என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.(அரசாணை பக்கம் 9).
இதன் மூலம் ஏறக்குறைய 130 கோடி ரூபாய் அதிகமான தொகைக்கு அரசு நிர்வாக ஒப்புதல் கொடுக்கப்பட்டிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.391.054 கி.மீ நீளமுள்ள மாநில சாலைகளுக்கான செலவு 1219.90 கோடி ரூபாய் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. (அரசாணை பக்கம் 9).

ஆனால் அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஆண்டு வாரியாக வேலைகளின் மதிப்பு கொடுக்கப்பட்டு மொத்த மதிப்பு 989.49 கோடி ரூபாய் என குறிப்பிடப் பட்டுள்ளது (அரசாணை பக்கம் 10).அவ்வாறே முக்கிய மாவட்டச் சாலைகளுக்கு முறையே 727.34 கோடி ரூபாய், 586.49 கோடி ரூபாய் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. (அரசாணை பக்கம் 11 மற்றும் 12).இருவகை சாலைகளுக்கும் மேம்பாடு, புதுப்பித்தல் என தெளிவாகக் குறிப்பிட்டு ஆண்டு வாரியாக கொடுக்கப்பட்டுள்ள வேலைகளின் மதிப்பு மொத்தமாக 1570.98 கோடி ரூபாய்தான். 410 கி.மீ நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்து வதற்கான செலவு (அரசாணையில் பக்கம் 11) என சொல்லப்பட்ட ரூ.415 கோடியை ஆண்டு வாரியாக கொடுக்கப்பட்டுள்ள வேலைகளின் மதிப்பான 1570.98 கோடி ரூபாயுடன் சேர்க்கப்பட்டுள்ளது‌. ஆனால், இந்த தொகையைச் அதனுடன் சேர்க்கக்கூடாது.

பக்கம் 10, 12ல் உள்ள ஆண்டு வாரியாக வேலைகளின் மதிப்பு அட்டவணையில் மேம்படுத்துவதற்கும் சேர்த்து மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியே சேர்த்தாலும் மொத்தத் தொகை 1985.98 கோடி ரூபாய் வருகிறது.ஆனால், நிர்வாக ஒப்புதல் தொகையோ 1947.24 கோடி ரூபாய்தான். எனவே இந்தக் கணக்கீடு எல்லாம் சொத்து குவிப்பு வழக்கை விசாரணை செய்த ‘குமாரசாமி’ கணக்கை நினைவுபடுத்துகிறது!எது எப்படியாக இருந்தாலும் 1947.23 கோடி ரூபாய்க்கு அரசு நிர்வாக ஒப்புதல் அளித்ததன் ‘மர்மம்’ விலகுமா?ஏனோதானோவென்று திட்டங்களைத் தயாரிப்பதும் அதை சரிபார்க்காமலேயே அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடு வதும், மக்களின் வரிப் பணத்தில் நிறைவேற்றும் திட்டங்களில் அரசும், துறையும் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என்பதற்கு இது ‘பானை சோறுக்கு பருக்கை பதமாகும்’.

இதற்கிடையே, ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ள சிவகங்கை கோட்டத்தில் துவக்கக் கட்ட பழுது பார்த்தலுக்காக ரூ.253 கோடியை ஒப்பந்ததாரருக்கு கொடுக்க வேண்டுமாம். தஞ்சாவூரில் ஒப்பந்தம் முடிவானதும் ரூ. 844 கோடி ஒப்பந்ததாரருக்கு தர வேண்டுமாம். கோபிசெட்டி பாளையம் கோட்டத்திலும் சில நூறு கோடி ரூபாய் ஒப்பந்ததாரருக்கு தர வேண்டுமாம். இதனால் இந்த நிதியாண்டில் அரசுக்கு நிதிச் சுமைமேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் டெண்டர் உண்மையா?
‘நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தங்கள் ஆன்லைன் மூலமாகத்தான் பெறப்படுகிறது. டெண்டர் திறக்கும் வரை ஒப்பந்தம் கோரியது யார்? என்பது எங்களுக்குத் தெரியவே வாய்ப்பே இல்லை’ என்று சட்டப் பேரவையிலும், செய்தியாளர் சந்திப்பிலும் கூறிக் கொண்டே இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி.ஆனால் உண்மை நிலவரமோ அது அல்ல. வேலைக்கான தொகையை மட்டுமே ஆன்லைனில் ஒப்பந்ததாரர்கள் குறிப்பிடுவார்கள். வைப்புத் தொகை, கருவிகள் தளவாடங்கள், சான்றிதழ் போன்ற ஆவணங்களை நேரடியாகக் கொடுக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் ஏற்கெனவே முடிவு செய்து வைத்துள்ள ஒப்பந்ததாரர், சப்போர்ட்டிங் டெண்டர் போட வேண்டிய ஒப்பந்ததாரர் ஆகியவர்கள் தவிர மற்ற ஒப்பந்ததாரர்கள் கொடுக்கும் அந்த ஆவணங்களைப் பெற மறுத்து விடுகிறார்கள். பின்னர், இந்த ஆவணங்கள் இல்லை என்று கூறி டெண்டரை நிராகரித்து விடுவார்கள்.

கருவிகள், தளவாடங்கள், சான்றிதழை ஒப்பந்ததாரருக்கு அந்தந்த கோட்டப் பொறியாளர்தான் தரவேண்டும். தாங்கள் ஏற்கனவேமுடிவு செய்து வைத்துள்ள (அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சித் தலைவர்கள் கொடுக்கும் பட்டியல்) ஒப்பந்ததாரரைத் தவிர மற்ற ஒப்பந்ததாரர்களுக்கு அந்த சான்றிதழை கோட்டப் பொறியாளர்கள் தருவதில்லை. நெடுஞ்சாலைத் துறையில் ஆன்லைன் டெண்டர் நடைமுறையில் இருக்கிறது என்று முதலமைச்சர் சொல்வது முற்றிலும் உண்மை அல்ல.

செய்யாத வேலைக்கும் பணம்!
ஒரு சாலைப்பணிக்கு டெண்டர் முடிந்து பணிகள் துவங்கி முடிந்ததும் ஒப்பந்தத்தில் உள்ளபடி சரியான அளவீடுகள் உள்ளதா? பொருட்கள் தரமாக போடப்படுகிறது? சாலை தரமாக இருக்கிறதா? என்பதை சரி பார்ப்பது பொறியாளர்களின் பணியாகும்.
கடந்த 7 ஆண்டுகளாக இந்த ஏழு கோட்டங்களில் ‘செயல்பாடு அடிப்படையி லான பராமரிப்பு ஒப்பந்தம்’ என்கின்ற புதிய ஒப்பந்த முறையில் வேலைகள் நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் ஒரு வேலை முடிந்த பின் அது தரத்துடன் செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்த பின்புதான் ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்கப்படுகிறது.

ஆனாலும், சாலைகளின் பயனாளிகளான மக்களுக்கு இந்த புதிய ஒப்பந்த முறையில் வேலை நடைபெறுகிறது என்பது தெரிவதில்லை.ஆனால், மற்ற மாநிலங்களில் இதுபோன்ற சிறப்பு ஒப்பந்த முறையில் வேலை நடக்கும் பொது அந்த சாலை பணி சரியாக இல்லையென்றால், அது குறித்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம். அதன் மீது நடவடிக்கை எடுத்து, ஒப்பந்ததாரர்களே அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் நடைமுறை உள்ளது. ஒரு ஒப்பந்ததாரர் செய்யும் பணியில் தரமில்லை என்பதை அறிந்தால் அந்த ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்படும்.

சாலைகள் யாருக்காக?
கடந்த காலங்களில் சாலைகள் போடுவது மக்களின் பயன்பாட்டிற்காக இருந்தது. இதனால் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. இப்போது எல்லாம் சாலைகள் போடுவது என்பது ஆட்சியாளர்கள் அவர்களுக்கு நெருக்கமான அல்லது உறவினர்களான ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், அதிகாரிகளின் வளர்ச்சிக்காக திட்டங்களைத் தீட்டும் துறையாக நெடுஞ்சாலைத்துறை மாறிவிட்டது.இந்த ஒப்பந்ததாரர்கள் செய்யும் வேலைகளுக்கான நெடுஞ்சாலைத்துறை கணக்குகளையும், ஒப்பந்ததாரர்கள் வருமானவரி கணக்குகளையும் ஆய்வு செய்தாலே அரசுப் பணம் எப்படி கொள்ளை போயிருக்கிறது என்பது ‘வெட்ட வெளிச்சமாகும்’.

===சி.ஸ்ரீராமுலு===