சென்னை:
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலின் தென்பகுதியில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. ‘ஆம்பன்’ என பெயர் சூட்டப்பட்ட இந்த புயல் மேலும் வலுவடைந்து சூப்பர் புயலாக மாறி மேற்கு வங்காளத்தில் கரையைக் கடந்தது. ஆம்பன் புயல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்துக்கொண்டதால் தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.