tamilnadu

img

அரசு ஊழியர் ஊதியம் பிடித்தம் - ஏ.கே.பத்மநாபன்

கேரளா  தவறு  செய்கிறதா?

கேள்வி: மத்திய, மாநில அரசு ஊழியர்களிடம் இருந்து செய்யப்படும் கொரோனா சம்பளப் பிடித்தத்தை தொழிற் சங்கங்கள் எதிர்க்கும் போது கேரள இடது முன்னணி அரசும், 5 மாதங்களுக்கு ஒவ்வோர் மாதமும் 6 நாட்கள் சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஏ.கே.பத்மநாபன் பதில்:

தேசியப் பேரிடர் நிகழ்கிற காலங்களிலெல்லாம் அமைப்பு சார் நடுத்தர ஊழியர்கள் ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க பெரும் பங்களிப்பை செய்து வந்துள்ளார்கள் என்பது வரலாறு. கேரள பெரு வெள்ளம், சென்னை வெள்ளம், கஜா, தானே புயல், ஒக்கி புயல்கள்... என அண்மை ஆண்டுகளின் அனுபவங்கள் நிறைய உள்ளன. நேரடியாக களத்திலும் இந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி இருக்கிறார்கள். ஆகவே அமைப்பு சார் ஊழியர்களின் சமூக அக்கறை, பங்களிப்பை தொழிற்சங்கங்கள் விரும்புகின்றன. ஊக்குவிக்கின்றன. இன்றைய கோவிட் 19 நெருக்கடி காலத்திலும் அமைப்பு சார் ஊழியர்கள் இக் கடமையை ஆற்ற வேண்டும் என்றே கருதுகிறோம். ஒட்டு மொத்த தேசம் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள சூழலில் அதை எதிர்கொள்வதில் அமைப்பு சார் ஊழியர்களின் பங்கும் அவசியம். 

இன்று இந்திய நாட்டின் வருமான திரட்டல் வழி முறையில் ( Policies of Revenue generation) கூட்டாட்சிக் கோட்பாடு கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. நேரடி வரி வசூல் முறையில் கார்ப்பரேட்டுகளுக்கு பெரும் வரிச் சலுகைகளை மத்திய அரசு அளிக்கும் போது அதில் இருந்து மாநில அரசுகளுக்கு கிட்ட வேண்டிய பங்கும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. அதிலெல்லாம் மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு இடம் இல்லை. ஜி.எஸ்.டி முறைமையில் மாநில அரசுக்கு வர வேண்டிய தொகைகளும் உரிய நேரத்தில் வந்து சேருவதில்லை. நிதிப் பற்றாக்குறை மேலாண்மை சட்டம் (FRBM Act) போன்ற தடைகளும் மாநில அரசுகளின் கால்களைக் கட்டிப் போடுகின்றன. ஆகவே மாநில அரசுகள் சாதாரண காலத்திலேயே நிதிப் பற்றாக்குறையால் திணறுகின்றன. ஒரு பெரும் இயற்கை பேரிடர் வருகிற காலத்தில் இந் நெருக்கடி பன்மடங்கு விஸ்வரூபம் எடுக்கிறது. இதை தொழிற்சங்கங்கள் உணர்ந்துள்ளது மட்டுமின்றி உலகமயப் பாதையின் இந்த அதிகார குவிப்பைப் பற்றி தொடர்ந்து பேசியும் வந்துள்ளன. 

ஆகவே மாநில அரசுகள் கொரோனா பேரிடர் காலத்தில் பெரும் நெருக்கடியில் உள்ளன என்பது உண்மை. இந்த நிலையில் அமைப்பு சார் தொழிலாளர் பங்களிப்பையும் அதற்காக எதிர்பார்ப்பதும் இயல்பானது. தேவையானது. தொழிற்சங்கங்களைப் பொருத்த வரையில் நான்கு கருத்துக்களை முன் வைக்கிறோம்.

1) மத்திய அரசு தன்னிடம் உள்ள வரி திரட்டல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வசதி படைத்தவர்களிடம் இருந்து அதிகமான வருமானத்தை உறுதி செய்ய வேண்டும். 

2) மத்திய அரசின் கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரான கொள்கைகளை மாநில அரசுகள் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். 

3) அமைப்பு சார் ஊழியர்களின் பங்களிப்பிற்காக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச வேண்டும். 

4) அமைப்பு சார் ஊழியர்களின் பாதிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பினும் அவர்களின் சிரமங்களையும் கணக்கிற் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். 

இப்பின்னணியில் மத்திய அரசு இந்த 4 அம்சங்களில் எதையுமே கணக்கிற் கொள்ளாமல், காது கொடுக்காமல் 18 மாத அகவிலைப்படி உயர்வை தன்னிச்சையாக நிறுத்தி வைத்தது. அதே நேரத்தில், சூப்பர் ரிச் எனப்படுகிற சூப்பர் பணக்காரரகள் மீது வரி, பன்னாட்டு நிறுவனங்கள் மீது சர்சார்ஜ், நடுத்தர ஊழியர்களைப் பாதிக்காத அளவிலான வருமான வரம்போடு 40 சதவீத வருமான வரி அறிமுகம் போன்ற ஆலோசனைகளை முன் வைத்த 50 ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் குழுவின் மீது துறை வாரியான விசாரணையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆகவே மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு மறுப்பை சி.ஐ.டி.யு, மத்திய அரசு ஊழியர் மற்றும் பாதுகாப்புத்துறை ஊழியர் சங்கங்கள் எதிர்த்துள்ளன. 

இரண்டாவதாக சில மாநில அரசுகள் தன்னிச்சையாக ஊதிய, அகவிலைப் படி வெட்டுக்களை அறிவித்துள்ளன. தொழிற்சங்கங்களோடு கலந்து பேசவில்லை. இப் பட்டியலில்தான் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு வருகின்றன. ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் மறு உத்தரவு வரும் வரை 30 சதவீதம் சம்பள வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மத்திய அரசிடம் நிதியைப் பெறுவதற்கு போராடத் தயாராக இல்லை என்பதை நாம் இங்கு விளக்க வேண்டியதில்லை. பதிலே வராத கடிதங்களை எழுதுவதுதான் இவர்களின் உச்ச பட்ச எதிர்ப்பாக உள்ளது. ஆகவே இந்த அரசுகளின் தன்னிச்சையான அறிவிப்புகளை தொழிற்சங்கங்கள் கண்டிக்கின்றன. எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

சில மாநில அரசுகள் தொழிற்சங்கங்களோடு விவாதிக்கின்றன. அதன் அடிப்படையில் முடிவுகளை எடுத்துள்ளன. உதாரணமாக மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான். 50 சதவீத சம்பளத்தை முதல் தவணையாகவும் பின்னர் இன்னொரு தவணையை தருவதாகவும் கூறி அமல்படுத்தி உள்ளன. மகாராஷ்டிராவில் இரண்டாவது தவணையின் ஒரு பகுதி சேர்த்து 75 சதவீதம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் அந்த மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொறுப்போடு ஒத்துழைக்கின்றன.

கேரளா வித்தியாசமான முடிவை எடுத்தது. 6 நாள் சம்பளத்தை ஒவ்வொரு மாதமுமாக ஐந்து மாதங்களுக்கு பிடித்தம் செய்வதாகவும் பிடிக்கப்பட்ட பணத்தை 6 மாதம் கழித்து நிதி நிலைமை சீரானவுடன் திருப்பி அளிப்பதாகவும், எப்படி, எவ்வாறு என பின்னர் அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்தது. கேரள அரசுக்கு கொரோனா ஒழிப்பில் நாடு முழுவதும் நற்பெயர் ஏற்பட்ட பின்னணியில் இந்த முடிவு அரசியல் நோக்கோடு சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. நீதி மன்றம் தடை விதிக்கப்பட்ட பின்புலத்தில் பேரிடர் சட்டத்தின் அடிப்படையில் அவசர சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னொன்று அவர்கள் வெட்டு என அறிவிக்கவில்லை. தள்ளி வைப்பாகவே சம்பள பிடித்தத்தை செய்கிறார்கள். இன்னும் பளிச்சென்று சொல்வதானால் மத்திய அரசோ, ஆந்திரா-தெலுங்கானா- தமிழ்நாடு மாநில அரசுகள் செய்வது பறிமுதல். கேரளா பிடித்தம் செய்யப்படுகிற தொகையை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளதே இங்குள்ள முக்கியமான வித்தியாசம். 

கேரள அரசே முதல் முதலாக ரூ 20000 கோடி நிவாரணத் திட்டத்தை மக்களுக்காக அறிவித்தது எனபதை நாம் மறக்க இயலாது. காலம் பூராவும் இடது சாரிகளை கரித்துக் கொட்டுகிற உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்கள் பல கூட, கேரள மாடல் என்று அதைப் பாராட்ட வேண்டி வந்தது. இந்தியா முழுவதும் புலம் பெயர் தொழிலாளர்க்கு அமைக்கப்பட்ட 23000 முகாம்களில் 16000 முகாம்கள் கேரளாவில்தான் என்பது ஓர் உதாரணம். இவ்வளவையும் செய்வதற்கு நிதியாதாரங்கள் எவ்வளவு தேவைப்படும்? “நிதி அடிப்படைவாதத்தை” நவீன தாராளமயம் கிழித்த கோட்டைத் தாண்டாமல் பாதுகாக்கிற மத்திய அரசிடம் போராடிக் கொண்டே மக்களின் நலன் காப்பது சாதாரணமானதா? 

தொழிற்சங்கங்கள் நிலை தெளிவானது. முரண்கள் ஏதுமில்லா அணுகுமுறை. தீர்வு குறித்த தெளிவு, காலம் எதிர்பார்க்கிற கடப்பாடு, மக்கள் மீது அக்கறை, தொழிற்சங்க உரிமை... ஆகிய கோட்பாடுகளில் உறுதியாக நின்றே இப் பிரச்சினைகளை அணுகுகின்றன. மாநிலத்திற்கு மாநிலம் ஒரு நிலை என்பது இல்லை. ஓரே உறுதியான நிலைதான் எல்லா மாநிலங்களிலும்...

தொலைபேசி வழி நேர்காணல்: க.சுவாமிநாதன்