ஊரடங்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ 6 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும் என அனைத்திந்திய வாகன ஓட்டுநர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் நிறுவன தலைவர் ஆரணி குணசேகரன், மாநில தலைவர் காளையார்கோவில் கமலஹாசன் ஆகியோர் தமிழக அரசிற்கு விடுத்துள்ள கோரிக்கையில் தமிழகத்தில் மோட்டார் தொழில் செய்துவரும் சுமார் 12 லட்சத்து 85 ஆயிரத்து 500 வாகனங்கள் மற்றும் 12 லட்சத்து98 ஆயிரத்து 500 வாகன ஓட்டுனர்கள் உள்ளார்கள். எதிர்பார்க்காத வகையில் கொரோனாநோய்த்தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள நிலையில் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாடகை வாகனத்தை வைத்து பிழைப்பு நடத்தும் குறு சிறு உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அத்யாவசிய பொருட்களை மாநிலம் தாண்டி மக்களுக்கு கொண்டுசேர்ப்பது ஓட்டுநர்களே. ஓட்டுனர்கள் இல்லையென்றால் உள்நாட்டுவர்த்தகம் நடைபெறாதென்பது அரசு அறிந்ததே. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் தவித்து வருகிறோம். வருடத்தில் 3மாதங்கள் இரண்டு பிரிவுகளாக மொத்தம் 6 மாதங்கள் வாடகை வரும் இப்போது (மேற்கு தொடர்ச்சிமலைகளின்) கோடைகாலம் என்பதால் வாகனத்தை இயக்கி தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளலாம் என இருந்த ஓட்டுனர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
எனவே நம் அரசு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களின் நலனை கருத்தில்கொண்டு அவர்களுக்கு மாதம் ரூ6 ஆயிரம் பேரிடர்கால உதவி நிதியிலிருந்து தரவேண்டும். மேலும் வாகனத்தின் சாலை வரி மற்றும் வாகன காப்பீட்டினை இரண்டுகாலாண்டிற்கு ஒத்திவைக்கவேண்டும். மேலும், நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் காய்கறி மருத்துவ செலவுக்கே போதுமானதாக இல்லை அதுவும் முழுமையாக வழங்கப்படவில்லை. பெரும்பாலான வாடகை வாகன ஓட்டுநர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காத நிலை உள்ளது. ஆகவே அனைவருக்கும் அரசின் நிவாரணம் கிடைக்கும்வகையில் தமிழக அரசு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.