tamilnadu

img

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அரசு செய்ய வேண்டியது என்ன? - சாமி.நடராஜன்

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டம், பல்வேறு அரசியல் கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணமாக 9.2.2020ல் சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப் பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழக சட்டமன்றத்தில் 20.2.2020 தேதி சட்ட முன்வடிவு முன் வைக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.  இந்த சட்டம் “2020ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம்” என வழங்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வேளாண்மைத் துறை அமைச்சரால் முன்மொழியப்பட்டு சட்டமாக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் விதிகள் 15 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. 

காவிரிப் படுகை முழுமையாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஆக்கப்பட வேண்டும், கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாரம், திருச்சி மாவட்டம், லால் குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் ஆகிய வட்டாரங்களும், அரியலூர் மாவட்டம் திருமானூர், டி.பழூர் ஆகிய பகுதிகளும் முழுமையாக இந்த மண்டலத்தோடு இணைக்கப்பட வேண்டும். மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் விவசாயிகள் பிரதிநிதிகள் எண்ணிக்கையை அதிகப்படுத் திட வேண்டும். விவசாயத் தொழிலாளர்களின் பிரதிநிதியும், மீனவப் பிரதிநிதியும் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். அதேபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமை யில் அமைக்கப்படவுள்ள ஆலோசனைக் குழுவிலும் மேற்கண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இணைத்திட வேண்டும். டெல்டா மாவட்ட கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு வேளாண்மைக்கு பயன்படாத நிலையும், சுற்றுப்புற சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இறால் பண்ணைகளையும் மூட வேண்டும். இறால் பண்ணைகள் அமைக்க நிரந்த தடை விதிக்க வேண்டும். மேலும் “நீரியியல் விரிசல் முறையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உலகில் பல நாடுகள் தடை விதித்துள்ளது. தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும்.

வேளாண் மண்டலத்தில் செயல்படுத்த வேண்டியவை

காவிரி டெல்டா மாவட்டங்களில் 28 லட்சம் ஏக்கர் நிலங்களில் ஆண்டுதோறும் சுமார் 33 லட்சத்து 26 ஆயிரம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர தென்னை, வாழை, வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட தோட்டப் பயிர்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தியை உறுதிப்படுத்த, விரிவுப்படுத்த, உரிய விலை கிடைத்திட கீழ்க்கண்ட அம்சங்களை உடன் மாநில அரசு அமல்படுத்திட வேண்டும்.

நிதி    

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு சட்டம் இயற்றியுள்ள அரசு உடன் வேளாண் மண்டலத்திற்கான சிறப்பு நிதியை ஒதுக்கிட வேண்டும். அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியின் மூலம் விவசாய உள்கட்டமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தேவையேற்பட்டால் விவசாயி களின் பங்களிப்போடு சிறப்பு வேளாண் நிதியம் உருவாக்கலாம். அரசியல் தலையீடு இல்லாமல் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்நிதியத்தை செயல்படுத்த வேண்டும்.

பாசன மேம்பாடு

காவரி டெல்டா பாசனம் மிகவும் பழமையானது. காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லனைக் கால்வாய் ஆறுகளை உள்ளடக்கி சுமார் 33 ஆறுகளும் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன வாய்க்கால்களும் பின்னிப்பினைந்துள்ள பாசனப் பகுதியாகும். இதைத் தவிர 1000க்கு மேற்பட்ட பாசன ஏரி, குளங்கள் உள்ளன. இவை அனைத்தும் சரியான பராமரிப்பு இல்லாமல் அதனுடைய இயல்பான கொள்ளளவு குறைந்து சீர்செய்யப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக சிறப்புத் திட்டத்தின் மூலம் அனைத்து ஆறுகள், பாசன, வடிகால் வாய்க்கால்கள், ஏரி, குளங்களை, செப்பனிட்டு நவீன வகையில் பாசன மேம்பாட்டை செய்திட வேண்டும்.

கொள்முதல் உத்தரவாதம் - விலை

விவசாயிகள் இன்று சந்திக்கும் முக்கியமான பிரச்சனையில் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை உரிய நேரத்தில் அரசு கொள்முதல் செய்வதில் உள்ள இடர்பாடுகளை போக்க வேண்டும். வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு செய்திட வேண்டும்.

புதிய தொழில் நுட்பம்

டெல்டா மாவட்டங்களில் பெரும்பகுதி நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது குறுகிய கால ரகம், மத்திய கால ரகம், நீண்ட கால ரகம் என்ற வகையில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. புதிய புதிய நெல் ரகங்களை கண்டுபிடிக்க நெல் ஆராய்ச்சி நிலையங்களை ஆடுதுறை, காட்டுத்தோட்டம், வாழை ஆராய்ச்சி நிறுவனம், உளுந்து உற்பத்தி -ஆராய்சி நிறுவனங்கள்  மற்றும் அரசின் விதைப்பண்ணைகள் இப்பகுதியில் செயல்படுகிறது. இவற்றின் தரத்தை உயர்த்திட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத புதிய தொழிற்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து விதைகளையும் அரசே உற்பத்தி செய்து வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். தற்போது நடைமுறையில் 100க்கு 17 சதம் மட்டுமே அரசு உற்பத்தி செய்து தருகிறது. தரமான விதைகளை 100 சதம் அரசு நிறுவனங்களே உற்பத்தி செய்து தரக்கூடிய வகையில் இம்மண்டலத்தில் அரசு விதைப்பண்ணைகளும் ஆராய்ச்சி நிறுவனங்களும் மேம்படுத்தப்பட வேண்டும்.

வேளாண் சார்ந்த  உப தொழில்களுக்கு  முன்னுரிமை வழங்குதல்

விவசாயத்தோடு இணைந்த தொழிலாக உள்ள கால்நடை வளர்ப்பு இன்றியமையாததாகும். விவசாய குடும்பங்கள் அதை சார்ந்துள்ள விவசாயத் தொழிலா ளர்கள் குடும்பங்களில் கடந்த காலத்தில் அனேகமாக பெரும்பகுதி குடும்பங்களில் பால் கறவை மாடுகள் இருந்தன. குடும்பத்தில் அன்றாடம் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்கு இவை உதவின. பால் உற்பத்தியை பெருக்கிட அதிக அளவிலான கறவை மாடுகளை மானிய விலையில் இப்பகுதி மக்களுக்கு வழங்கி பால் கொள்முதலை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். இதன் மூலம் நுகர்வோருக்கும் தரமான பாலை வழங்கிட முடியும். வெள்ளாடு வளர்ப்பு, பண்ணை கோழி வளர்ப்பு போன்றவற்றிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தென்னை உற்பத்தி கூடுதலாக உள்ள பகுதியாகவும் டெல்டா பகுதியுள்ளதால், தென்னை சார்ந்த தொழில்கள், தேங்காய் மட்டை நார் கயிறு தொழிற்சாலை கூட்டுறவு அமைப்பு மூலம் துவங்குவது, தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆயில் மில் துவங்குவது, தென்னை நார் கழிவி லிருந்து பொருட்களை பாதுகாப்பாக அடைப்பதற்கான பேக்கிங் மெட்டீரியல் தயாரிப்பது இப்படி வேளாண்மை சார்ந்த பல சிறு,சிறு தொழில்களை இப்பகுதியில் உருவாக்க வேண்டும்.

விவசாயத் தொழிலாளர்கள் - மீனவர்கள் நலன் பாதுகாத்தல்

வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள் வாழ்வாதாரம் சார்ந்து பல திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். டெல்டா மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகளில் ஈடுபட்ட நிலை மாறி தற்போது ஆண்டிற்கு 100 நாட்களுக்கு குறைவாகவே விவசாயத் தொழிலாளர்களுக்கு வேளாண் சார்ந்த வேலைகள் கிடைக்கிறது. எனவே பெரும்பகுதி டெல்டா மாவட்ட விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்தோடு அண்டை மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலை உள்ளது. இவற்றை சரிசெய்ய வேளாண் மண்டலத்தில் உள்ள நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு நிலங்கள், உச்சவரம்புக்கு மேல் உள்ள தனியார் நிலங்களை பிரித்து கொடுப்பதன் மூலம் விவசாயத் தொழிலாளர்களை பாதுகாத்திட முடியும், மேலும் பெரும்பகுதி விவசாயப் பணிகளுக்கு இவர்களை பயன் படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். தஞ்சை, கடலூர், நாகை, திருவாரூர், மாவட்டங்களில் கணிசமான தொகையில் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசு, இயற்கை சீற்றங்களால் இவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பால் இம்மாவட்டங்களில் உள்ள கடலோரப் பகுதிகள் இணைக்கப்பட்டு மீனவர்க ளுக்கான வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.

வழக்குகளை  ரத்து செய்ய வேண்டும்

காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டுமென்பதற்கா கத்தான் போராட்டங்கள் நடைபெற்றது. அரசே பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்து சட்டம் கொண்டு வந்த பின்பு இதற்காக போராடியவர்கள்  மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்வதற்கு என்ன தயக்கம். எனவே அனைத்து வழக்குகளையும் உடன் ரத்து செய்ய வேண்டும். இறுதியாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா மாவட்டங்களை அறிவிக்க வேண்டுமென 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்து ஒன்று பட்டு பல போராட்டங்களை முன்னெடுத்ததற்கு கிடைத்துள்ள வெற்றியாக இந்த சட்டம் இருந்தாலும், இதன் நோக்கங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படும் போது தான் உரிய பலன் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கும். அதற்கான பணி களை அரசு செய்திட வேண்டும்.