tamilnadu

img

ஐஜிஎன்டியூ நுழைவு தேர்வு மையங்கள் தொடர்பான பிரச்சனை - மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கடிதம்

இந்திரா காந்தி தேசிய பழங்குடியின பல்கலைக்கழகத்தின், 2020-21 ஆம் ஆண்டுக்கான நுழைவு தேர்வு மையங்கள் தொடர்பான பிரச்சனையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் அனுப்பியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்களின் வளர்ச்சிக்காக, கடந்த 2007-ஆம் ஆண்டில் இந்திய அரசின் சிறப்புச் சட்டத்தால், இந்திரா காந்தி தேசிய பழங்குடியின பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் பழங்குடிப் பகுதிகளில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக, இந்தியா முழுவதும் ‘தேசிய பல்கலைக்கழகம்’ என்ற அந்தஸ்தை வழங்கி சட்டம் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில்  இந்த பல்கலைக்கழகம் வளர்ச்சியின் பாதையில் இருந்தது. இது இந்தியா முழுவதிலுமிருந்து ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஈர்த்தது. பல்கலைக்கழகம் பழங்குடி மக்கள் பெயரில் இருந்தாலும், அவர்களுக்கான இட ஒதுக்கீடு இந்தியாவின் மற்ற மத்திய பல்கலைக்கழகங்களில் இருப்பதை போன்றுதான் உள்ளது. நாடு முழுவதிலுமிருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் இங்கு இருப்பதால், தேசிய அளவிலான கல்வியை பழங்குடியின மாணவர்கள் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. 

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் மாணவர்களின் பன்முகத்தன்மையை பாதிக்க தொடங்கியுள்ளன. மாணவர்களுக்கு, இந்தி மொழியில் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இது, இந்தி அல்லாத மொழி பேசும் பகுதிகளாகிய வடகிழக்கு, மேற்கு மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வந்த பல மாணவர்களுக்கு சிக்கல்களை உருவாக்கியுள்ளது. அதேபோல், பி.எச்.டி, இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நுழைவு தேர்வு உள்ளன.  இந்த நுழைவுத் தேர்வுக்கு குறைந்த எண்ணிக்கையில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுவும் பழங்குடியினர் அல்லாத பிராந்தியங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் குறிப்பாக பழங்குடியின மாணவர்களும், பொது பிரிவு மாணவர்களும் தேர்வு எழுத முடியாத நிலையும், மேற்படிப்பை தொடர முடியாத நிலையும் ஏற்படலாம். இந்த சூழலில், இந்திரா காந்தி தேசிய பழங்குடியின பல்கலைக்கழகத்தின், 2020-21 ஆம் ஆண்டுக்கான நுழைவு தேர்வு மையங்கள் தொடர்பான பிரச்சனையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் அனுப்பியுள்ளார்.