tamilnadu

img

அலட்சியத்தின் உச்சத்தில் நெல் கொள்முதல்... ஆயிரக்கணக்கில் குவிந்திருக்கும் மூட்டைகள்... வாரக்கணக்கில் காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சாவூர்

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவைஅறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் அறுவடைசெய்த நெல்லை விற்பதற்காக அரசின்நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்து வாரக்கணக்கில் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு நேரடிநெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான மூட்டைகள் நெல் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களாக விட்டு, விட்டு பெய்துவரும் மழையால் பல இடங்களில் நெல் நனைந்து முளைத்து போய்விட்டது. இதற்கு அரசின் நிர்வாக ரீதியான அலட்சியமே காரணம் உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் குறுவை நெல்கொள்முதலுக்காக அக்டோபர் 1ஆம்தேதி திறக்கப்பட வேண்டிய கொள் முதல் நிலையங்கள் இந்த ஆண்டு 1ஆம்தேதியே திறக்கப்பட்டதாக அரசு அறிவித்தாலும் 4ஆம் தேதி வரை பலஇடங்களில் கொள்முதல் துவங்கப்படவில்லை. இதற்கு அதிகாரிகள் சொல்லும் காரணம் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் அந்தந்த இடங்களுக்கு சென்று பொறுப்பேற்கவில்லை. சாக்கு, மின்னணு எந்திரம், புதிய விலையை மாற்றியமைப்பதற்கான அவகாசம் என சொல்வது வேடிக்கையாக உள்ளது.

10 நாளுக்கு முன்பே
மேலும் அக்-1ஆம் தேதிக்கு முன்பு ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ ஆண்டு கணக்கு முடிக்க மூடப்பட வேண்டிய நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இந்த ஆண்டு செப்-23ஆம் தேதியே மூடப்பட்டது. கிட்டத்தட்ட 10 நாட்கள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்ட தால் 10 நாட்களுக்கு முன்பு கொள்முதல் செய்யாமல் தேங்கியிருந்த நெல்லோடு தொடர்ந்து அறுவடை செய்யப்பட்ட நெல்களும் சேர்ந்து தற்போது டெல்டா மாவட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் பல லட்சம் நெல்மூட்டைகள் தேங்கிக்கிடக்கின்றன. 

கொள்முதல் நிலைய கோளாறுகள்
அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் சொந்த கட்டிடங்கள் உள்ளன. பெரும்பாலான இடங்களில் தற்காலிக கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. நிரந்தர கட்டிடம் உள்ள இடமானாலும், தற்காலிக இடமானாலும் கொள்முதல் செய்யப்படும்நெல்லை அடுக்கி வைத்திட போதுமான வகையில் கான்கிரீட் தளங்கள், தார்ப்பாய்கள் இருப்பதில்லை. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொட்டுவதற்கான தளங்கள் இல்லை. நெல்லை மூடி வைப்பதற்கான தார்ப்பாய்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே நெடுஞ்சாலைகளி லும், உள்ளூர் சாலைகளிலும் நெல்லை கொட்ட வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. 

மின்தடை பிரச்சனை
அனைத்து இடங்களிலும் மின்னணு தராசு பயன்படுத்தப்படுவதால் அடிக்கடிஏற்படும் மின்தடையால், நெல்லை தூற்றுவது, எடைபோடுவது தடைபடுகிறது. எனவே கொள்முதல்நிலையங் களுக்கு ஜெனரேட்டர் வசதி செய்து தரப்பட வேண்டும். அரசு ஒரு மூட்டை 40 கிலோ, சாக்கு எடை 580 கிராம் என இவ்வாண்டு தீர்மானித்துள்ளது. ஆக40 கிலோ 580 கிராம் எடை வைக்க வேண்டும். ஆனால் 41 கிலோ முதல் 42 கிலோ வரை எடை வைக்கப்படுவதை தடுக்க வேண்டும். விவசாயிகளிடம் மூட்டைக்கு 20 முதல் 40 ரூபாய் வரை பணம் வாங்குவதை தடுக்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் மேலிருந்து கீழ்வரை நடைபெறும் முறைகேடுகளை தடுத்திட வேண்டும். குறிப்பாக கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி இவர்களுக் கான ஊதியத்தை உயர்த்தி முறைப்படுத்தினாலே ஓரளவு குறைகளை தடுத்திட முடியும். மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை ஏற்றிச்செல்ல வரும் லாரி ஓட்டுநர்கள் 2000 முதல் 5000 வரை லாரி மாமூல் பெறுவதும் பெரும் பிரச்சனையாக உள்ளது. 

கொள்முதலை விரிவாக்கி- பலப்படுத்த வேண்டும்
2019-20ஆம் ஆண்டில் மாநிலம்முழுவதும் 2135 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு (16.10.20 வரை) 816 தான்திறக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையான அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடன்திறக்கப்பட வேண்டும். நடப்பாண்டு குறுவை சாகுபடி அரசின் இலக்கை விட கூடுதலாக நடைபெற்றுள்ளதால் அறுவடை செய்யப்படும் நெல் தேங்காமல் கொள்முதல் செய்வதற்கு வசதியாக மொபைல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட வேண்டும். வழக்கமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மட்டுமே 1000 இடங்களுக்கு மேல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். தற்போது குறைந்த அளவிலேயேதிறக்கப்பட்டுள்ளது. உடன் அனைத்து இடங்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். கொள்முதல்தடைபடாமல் நடைபெற சாக்கு போதியஅளவில் அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் தடைபடாமல் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதாரவிலையில் குவிண்டாலுக்கு வெறும் 53 ரூபாய் மட்டும் உயர்த்தி வழங்கியுள்ளது. தமிழக அரசு வழக்கம்போல் பொது ரகத்திற்கு குவிண்டாலுக்கு 50 ரூபாயும், சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு 70 ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளது. ஆக மத்திய, மாநில அரசுகளின் விலையாக குவிண்டாலுக்கு பொதுரகத்திற்கு 1918ம், சன்னரகத்திற்கு 1958ம் விலை அறிவிக்கப்பட்டுள்ளது போதுமான கட்டுபடியான விலையில்லை.

இந்த விலை தற்போது தனியார் கொள்முதலில் கிடைப்பதில்லை. குறிப்பாக 63 கிலோ கொண்ட 1 மூட்டைநெல்லை தனியார் வியாபாரிகள் ரூ.850க்கு கொள்முதல் செய்கின்றனர். அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் நிலையிலேயே 1 மூட்டைக்கு 250 ரூபாய் குறைவாக தனியார் வியாபாரிகள் வாங்கும் நிலையில் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயத்திற்கு எதிர்காலத்தில் பெரும் கேடு விளைவிக்கவுள்ளது. குறிப்பாக ஒரே நாடு, ஒரே சந்தை என்பது எதிர்காலத்தில் அரசு பொது கொள்முதலை கைவிட்டு, முழுக்க முழுக்க கொள்முதலை பெரும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் இந்த நிலையில் அரசின் பொதுகொள்முதலை பாதுகாத்திட விவசாயிகள் மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை உள்ளது. 

அரசு செய்ய வேண்டியவை

20 சதவீதம் ஈரப்பதம் வரை நெல்லைகொள்முதல் செய்ய வேண்டும்.

நாள் ஒன்றுக்கு 1000 மூட்டை வரை கொள்முதல் செய்ய வேண்டும்கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மழையில் நனையாமல் இருக்க போதுமானதார்ப்பாய்கள் வழங்கப்படவேண்டும்.

கொள்முதல் செய்யப்படும் நெல் தேங்காமல் லாரிகள் மூலம் உடனுக்குடன் குடோன்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அரசு நிர்ணயித்துள்ள எடை அளவில் கொள்முதல் நடைபெறுவதை உறுதிப்படுத்திட வேண்டும்.

விவசாயிகளிடம் கட்டாயம் மூட்டைக்கு 20 முதல் 40 வரை லஞ்சம் பெறுவதை தடுத்திட வேண்டும். 

கொள்முதல் நிலைய ஊழியர்கள், லோடுமேன்களுக்கு ஊதியத்தை உயர்த்தி பணி நிரந்தரம் அளித்திட வேண்டும்.

====சாமி.நடராஜன்===

மாநில செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்