மூத்த பத்திரிகையாளரும், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தி ஒருங்கிணைப்பாளருமான எஸ். திருநாவுகரசு மாரடைப்பால் நேற்று காலமானார்.
மூத்த பத்திரிகையாளரும், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தி ஒருங்கிணைப்பாளருமான எஸ். திருநாவுகரசு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள எரிசனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். தினமணி, தினமலர் உள்பட பல்வேறு முக்கிய நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் நேற்றிரவு, பணியில் இருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். மந்தைவெளி தேவநாதன் தெருவில் உள்ள ரங்கா மருத்துவமனை பின்புறம் உள்ள இல்லத்தில் அவரது உடல் காலை 9 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் அவரது சொந்த ஊரான உடுமலையை அடுத்த எரிசினம்பட்டிக்கு சனிக்கிழமையன்று (அக்.26) கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று (அக். 27) காலை 10.30 மணியளவில் உடுமலைப்பேட்டை மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
மேலும், இவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்னன், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.