சில சட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அவசர கோலத்தில்அல்லது போதுமான விவாதத்தை நடத்தாமல் அச்சட்டங்களை நிறைவேற்றினால் அவை மக்கள் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திடும். பல்வேறுபட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை ஒருங்கிணைத்து, சீர்திருத்த நடவடிக்கைகளை துவக்குவதை நோக்கமாகக் கொண்ட மூன்று சட்டத் தொகுப்புகள் இந்த வகையிலேயே அடங்கும்.
சிறிய அளவிலானதொரு விவாதத்திற்குப் பின், எதிர்க்கட்சியினர் இல்லாதபோது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இச்சட்டத் தொகுப்புகள் நிறைவேற்றப்பட்டன. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் நிலைக் குழுவால் பரிசீலிக்கப்பட்ட சட்டத் தொகுப்புகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழில் உறவு குறித்த சட்டத் தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு தொடர்பான சட்ட தொகுப்பு, பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் குறித்த சட்டத் தொகுப்பு, 2020 என்பவை ஆகும். எனவே, நிறைவேற்றப்படுவதற்கு சில தினங்கள் முன்பு சமர்ப்பிக்கப்பட்ட இப்புதிய மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற வாதத்தில் பெரிய அளவிலான நியாயம் உள்ளது.
300 தொழிலாளர்கள் கொண்ட நிறுவனம்
100க்கும் அதிகமான தொழிலாளர்களை பணியில் அமர்த்தியுள்ள தொழில்நிறுவனம் மூடப்படுவதற்கு முன்னர், தொழிலாளர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்வது அல்லதுஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள் வதற்கு முன் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது, 300க்கும் அதிகமான தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ள நிறுவனங்கள் என தற்போதைய சட்டத் தொகுப்பில்உள்ளது. இந்த அம்சம் 2019ல் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் இடம் பெற்றிருக்கவில்லை. இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சைக்குரிய விஷயமாகும். தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது, தொழிலிலிருந்து வெளியேறுவது ஆகிய விஷயங்களில் தொழில்நிறுவனங்களுக்கு இது பெருமளவில் சுதந்திரத்தை அளிக்கிறது. தொழிலாளர் நலச்சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, எளிமையாக்கப்பட்டு, திருத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையான நோக்கத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. இருந்தபோதும், இதற்கு மிகப்பெரியஅளவிலான சட்டத்திருத்த நடவடிக்கைகள்தேவைப்படுகிறது என்கிறபோது இம்மசோதாக்களின் இறுதி வடிவம் சம்பந்தப்பட்டவர்களோடு விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய விவாதத்திற்கான உரிய கால அவகாசமும், அவர்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தொழிலாளர் நலன் காக்கப்படுமா?
இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையம் 2002ஆம் ஆண்டு ஜுன் மாதம் அளித்த அறிக்கையிலிருந்து தான் இத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்ட வேண்டும் என்ற கருத்து துவங்குகிறது. தொழிலாளர் நலன்களில் பாதிப்புகளைஏற்படுத்தாமல் பொருளாதார நடவடிக்கை களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என்றபரந்த கண்ணோட்டத்தோடு இவ்வாறு குறிப்பிடப்பட்டது. ஆனால், தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தொகுப்புகளில் இக்கண்ணோட்டம் போதுமான அளவில் பிரதிபலிக்கிறதா என்பதை இச்சட்டத் தொகுப்புகள் செயல்படுத்தப்படுகிறபோது கிடைக்கும் அனுபவங்களே எடுத்துரைக்கும். முறைசாரா தொழிலாளர்களுக்கும் சமூகநலப் பாதுகாப்பு நிதி ஏற்படுத்தப்படுவதை உத்தரவாதம் செய்வதோடு, இவர்களது சமூகநலன் தேசிய சமூகநல வாரியத்தால்பார்த்துக் கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதும் சமூக நலச்சட்டத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சாதகமான அம்சமாகும்.
பணியிடம் சார்ந்த சுகாதாரம், பாதுகாப்பு மற்றும்பணிச்சூழல் குறித்த சட்டத் தொகுப்பின் அனைத்து அம்சங்களிலிருந்தும் எந்தவொரு புதிய தொழிற்சாலைக்கும் விலக்களிப்பதற்கான அதிகாரம் அந்தந்த அரசுக்கு அளிக்கப்பட்டிருப்பது சர்ச்சைக்குரிய ஓர் அம்சமாகும். மின்சாரத்தைப்பயன்படுத்தாமல் 10 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பணிபுரியும் இடம் தொழிற்சாலையாகக் கருதப்படும் என்ற குறைந்தபட்ச அளவு தற்போது 20 என உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று மின்சாரத்தைப் பயன்படுத்தும் இடங்களில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினால் அது ஒரு தொழிற்சாலையாகக் கருதப்படும் என்பது தற்போது 40 என அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் எதிர்ப்பது ஏன்?
ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தொகுப்புகளை கிட்டத்தட்ட அனைத்து பிரதான தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றன என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழிலாளர் நலச்சட்டம் தொடர்பான சட்டத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள அம்சங்களிலிருந்து தொழில்நிறுவனங்களுக்கு விலக்களிக்க சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு எல்லையற்ற அதிகாரமும், விதிகளை உருவாக்குவதற்கான அளவுக்கு மீறிய அதிகாரமும் அளிக்கப்பட்டிருப்பது ஏற்படுத்தும் நியாயமான கவலையையே தொழிற்சங்கங்களின் எதிர்ப்புபிரதிபலிக்கிறது. கதவடைப்பு நடவடிக்கை மேற்கொள்வது மற்றும் பல்வேறு சமூகப் பாதுகாப்புதிட்டங்களுக்கான குறைந்தபட்ச அளவை அரசுஉத்தரவின் மூலம் உயர்த்திடலாம். பாதுகாப்புக்கான அளவுகோல்கள் மாற்றப்படலாம். மத்திய மற்றும் மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றங்களைக் கொண்டு வரு வதற்கான பரந்த அதிகாரத்தை அவற்றிற்கு அளிப்பது தொழிலாளர் நலனுக்கு உகந்ததாக இருக்காது என அச்சம் கொள்ள நிறைய காரணங்கள் உள்ளன.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கம்(செப். 26)
தமிழில்- ராகினி