tamilnadu

img

மாயமான் ஆகும் வேலைவாய்ப்பும் மாரீசன்கள் ஆகிடும் அரசுகளும்...

வேலை வாய்ப்பு குறித்த தற்போதைய செய்திகளும் புள்ளிவிவரங்களும் இந்திய இளைஞர்களைத் தலைசுற்ற வைத்துக்கொண்டிருக்கையில், மத்திய அரசின் ஜாலங்களும் வேஷங்களும் உண்மையில் இளைஞர்களால் தற்போது தான் உணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. படித்தால் மட்டும் போதும், என் மகன் மேலெழும்பி விடுவான்என்ற கனவோடு படிக்க வைத்த பெற்றோர்கள், முதுகலை படித்தும் அரசுத்துப்புறவுப் பணியாளர் பணிக்குத் தன் மகன் தேர்வாவதைக் கண்டு ஏமாற்றத்தின் உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இக்கொரோனா காலம் இவ்வாறு மத்திய அரசின் கையாலாகாதத் தனத்தையும் தன் வெற்றுச் சொற்களால் எதையும் சாதிக்க முடியாது என்பதையும் மீண்டும்ஒருமுறை நிரூபித்திருக்கிறது. தற்போது ஜிடிபி-யில் தொடங்கி தொட்ட அனைத்திற்கும் கொரோனாவையே மத்திய அரசு காரணம் காட்டி வரும் இச்சமயத்தில் வேலையின்மை குறித்தான அதன் பார்வையும் அவ்வாறானது தானா என்பதைஉற்று நோக்க வேண்டியதாகிறது. அதோடு கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பிழந்த அமைப்புசார் மற்றும் சாராதோரின் நிலையை பார்க்க வேண்டியுள்ளது.

இந்தியாவும் தமிழகமும்
இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (சிஎம்ஐஇ) இவ்வருட அறிக்கையின்படி (ஆகஸ்ட் வரை) இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.36 ஆக உள்ளது. வரலாறு காணாத வேலையின்மை விகிதத்தில் இது மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.  ஆகஸ்ட்மாதத்தை குறிவைத்து கணக்கிடப்படும்போது இது கொரோனா பேரிடரால் ஏற்பட்டிருக்கலாம் என யூகிக்கக் கூடும். ஆனால் இதே தரவுகளை கொரோனாவிற்கு முன்னர் காணும் போது அதாவது ஜனவரியில் 7.22 ஆக உள்ளது. இந்தியா சந்தித்திடாத வேலையின்மை விகிதத்தில் இது தவிர்க்க முடியாதது என்பது உற்றுநோக்க வேண்டியது.

 மக்களின் வாழ்வில் கொரோனாவின் தாக்கத்தை அறிய எம்ஐடிஎஸ், ஆய்வின் முடிவுகளின்படி கணக்கெடுக்கப்பட்ட குடும்பங்களில் 53சதவீதக் குடும்பங்களில் ஒருவராவது வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர். அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் 67 சதவீத வேலையிழப்போருடன் முதலாவதாக உள்ளது. குறைந்தபட்சமாக கோவை 38 சதவீதத்தில்உள்ளது. மேலும் 67 சதவீதத்தினர் தங்கள் குடும்பங்களில் சம்பளக் குறைப்பைச் சந்தித்துள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை பிப்ரவரியிலிருந்த தனிநபர் சராசரி வருமானம் 18 ஆயிரத்து 996 இலிருந்து 9 ஆயிரத்து 757 ஆக மே மாதத்தில் குறைந்துள்ளது. இதுவே தற்போதைய தமிழகத்தின் நிலையாகும்.

முன்னதாக மத்திய பாஜக அரசின், ஆட்சி ஆரம்பித்த காலத்தில்வேலைவாய்ப்பு குறித்து பேசுவார் என பிரதமரின் வாயை இளைஞர்கள் எதிர்பார்த்திருந்த நாட்களில் ஒரு உபயோகமான திட்டமும் இன்றிவெற்று அறிவிப்புகளை மட்டும் கூறி மோடி தாவித் தாவி ஓடியதுதற்போது மீண்டும் நினைவு கூரப்படுகிறது. ஊரடங்கால் வேலையிழப்பை சந்தித்தவர்களுக்கான திட்டங்களை ஒவ்வொரு ‘மனதின் குரல்’நிகழ்ச்சியிலும்  கூறாமல் ஒன்றுமில்லாத பெருமைகளை மோடி கனத்துகூறும் போது. எது எப்படி இருப்பினும் இந்தியாவின் தற்போதைய நிலவரப்படி அமைப்புசார் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் அதற்கான திட்டம் நம்மிடம் என்னஉள்ளது என்பதும் நிச்சயமாக விவாதிக்க வேண்டிய ஒன்றாகும்.

புலம்பெயர்த் தொழிலாளர்களான அமைப்பு சாரா தொழிலாளர்கள்
 பணமதிப்பிழப்பு, ஊரடங்கு என ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய சொற்களை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து அவைகளுக்குப் புதிய வடிவம் கொடுக்கும் பெயரில் நம்மை நோகடித்த சம்பவங்கள் மத்திய அரசின் சாதனைகளில் சில. அதேபோல் இவ்வருடம் புதிதாக அரசால் பிரபலப்படுத்தப்பட்ட சொல் புலம்பெயர் தொழிலாளர்கள். அற்ப சம்பளத்திற்காககுடும்பங்களை விட்டு வருடக்கணக்கில் அவர்களைப் பார்க்காமல் வெவ்வேறுமாநிலங்களில் பல பணிகளில் வேலை செய்து வந்தவர்கள் இவர்கள்.  விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கும் நாடு இந்தியா. நடவு,அறுவடைக் காலம் தவிர்த்து, ஆண்டின் பல மாதங்கள் வேலைவாய்ப்பில்லாத நிலை தவிர்க்க இயலாதது. மே மாத நிலவரப்படி மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலுமாக சுமார் 13.9 கோடிப் பேர் தொழிற்சாலைப் பணிகளுக்காகவும், விவசாயப் பணிகளுக்காகவும் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்திருக்கிறார்கள். மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர்வு மட்டும் 90 லட்சமாக இருக்கலாம் என்கிறது இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை-2017. இந்த விவரங்கள் எல்லாம், 10 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மதிப்பீடுகள். இதுகுறித்துத் தெளிவான விவரங்கள் எதுவும் அரசிடமே இல்லை என்பதுதான் உண்மை நிலை.மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இணக்கமான கொள்கைகளை வகுப்பதில் இந்திய அளவில் கேரளமே முதலிடத்தில் இருக்கிறது என்கிறது மும்பையைச் சேர்ந்த ‘இந்தியா மைக்ரேஷன் நவ்’ என்ற அமைப்பு. கேரளத்துக்கு 100-க்கு 62 புள்ளிகளைக் கொடுத்திருக்கும் அந்த அமைப்பு, இரண்டாம் இடத்தில் இருக்கும்மஹாராஷ்டிரத்துக்குக் கொடுத்திருக்கும் புள்ளிகள் 42. தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் புள்ளிகள் 37 மட்டுமே.

சட்டமும் செய்யாததும்
மாநிலங்களுக்கிடையே புலம்பெயரும் தொழிலாளர்களுக்கென்று 1979-ல் தனிச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. பிரதானப் பணியளிப்பவர், வேலைக்கு ஆட்களைக் கூட்டிவரும் ஒப்பந்ததாரர் மட்டுமின்றி, மாநில அரசுக்கும் பொறுப்புகளை விதிக்கிறது அச்சட்டம். தொழிலாளர்களின் புலம்பெயர்வுகள் பெரும்பாலும் பருவகாலங்களின் அடிப்படையிலும் சுழற்சி முறையிலும் நடைபெறுவதால், அதுகுறித்து அரசிடம் தெளிவான எந்த விவரங்களும் இல்லை. விவ
ரங்களே இல்லாதபோது அந்தச் சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்த முடியும்?

இருந்தும் அரசு இந்நெருக்கடி கால கட்டத்தில் என்னதான் செய்தது எனும் போது முதலில் நினைவுக்கு வருவது, கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலையும் வேண்டாம், உணவும் வேண்டாமென சாரை சாரையாக தங்கள் மாநிலங்களுக்கே பொடிநடையாகச் சென்றபோது அரசு இவர்களுக்கு அளித்த அறிவுரை, யாரெல்லாம் அத்தொழிலாளர்கள் மீது பரிதாபப்படுகிறார்களோ அவர்களெல்லாம் அத்தொழிலாளர்களின் பைகளை தூக்கிக் கொண்டு வீடு வரை கொண்டு சென்று விட்டு விடலாமே என்பது தான். இப்பொன்னான வார்த்தைகளை உதிர்த்த மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான், இந்தியாவின் தற்போதைய பொருளாதாரம் கடவுளின் கைகளின் உள்ளது என தற்போது கூறுகிறார்.

ஆரம்பத்தில் இவர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் நடையாய் நடந்து ரயில் தண்டவாளங்களிலும், கனரக வாகனங்களிலும் அடிபட்டு இறந்த பின்னர் தான், மத்திய அரசு சிறப்பு ரயில்களின் இயக்கத்தை  அதிகரித்தது. அவ்வாறு மே மாதம் இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணித்த புலம் பெயர் தொழிலாளர்கள் 50 லட்சம் பேருக்கு இந்தியரயில்வே 85 லட்சத்துக்கும் மேற்பட்ட இலவச உணவு பொட்டலங்களையும், சுமார் 1.25 கோடி தண்ணீர் பாட்டில்களையும் விநியோகித்துள்ளதாக அறிவித்தது. ஆனால் ரயில்வே பாதுகாப்பு படையின் தரவுகளின்படி, மே 9 முதல் மே 27 வரை புலம் பெயர்ந்த தொழிலார்களுக்கான சிறப்பு ரயில்களில் பயணம் செய்தபோது கிட்டத்தட்ட 80 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.  
இறந்தவர்களில் பெரும்பாலானோர் “நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்” என்று ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்திருந்த போதும் அவர்களில் பலர் உண்மையில் மருத்துவ சிகிச்சைக்காக நகரங்களில் இருந்தனர் என்பதும், மேலும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட பின்னரே, அவர்களால் ஊர் திரும்ப முடிந்தது என்பதும் மறைக்கப்பட்ட ஒன்று. சோர்வு, வெப்பம் மற்றும் பசியால் பயணிகள் இறந்ததாகக்கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு இந்த பதில் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு நினைத்துக் கொண்டாலும் இதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டியதிலிருந்து அது விலகிக் கொண்டது என்பதே உண்மையாகும்.

படித்த அமைப்புசார் தொழிலாளர்களாவது தப்பித்தார்களா?
இதன் பதிலை கீழே உள்ள ஒரு புள்ளி விவரத்தைக் கொண்டு எளிதாகவிளக்கலாம். மார்ச் முதல் ஜுலை வரையிலான 4 மாத காலகட்டத்தில் மட்டும் 1 கோடியே 89 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக சிஎம்ஐஇதெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் முறைசாராத் தொழிலாளர்கள்அல்ல, நிலையான சம்பளத்தில் பணிபுரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தரவுகளின்படி ஏப்ரல் மாதத்தில் நிலையான சம்பளத்தில் இருக்கும் 1.77 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மேமாதத்தில் ஒரு லட்சம் பேரும், ஜூலை மாதத்தில் 50 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்புச் சந்தையில் நிலையான வேலை வாய்ப்புகளைக் கணக்கில் கொண்டால்அவை வெறும் 21 சதவிகிதம் தான். இது முறைசாராத் துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை விட மிகக்குறைவு தான். ஆனால் இந்த 21 சதவிகிதவேலைவாய்ப்புகள் தான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையை கட்டமைப்பதற்கு மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் “வொயிட் காலர் ஜாப்” எனப்படும் அதிக சம்பளத்துடன் கூடிய நிலையான வேலை வாய்ப்பில் இருந்து வந்தவர்கள் கொரோனாதாக்கத்திற்கு பிந்தைய காலத்தில் பெரிய அளவிற்கு வேலை இழந்துவருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation-ILO)  மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு வேலையிழந்தவர்களில் சுமார் 41 லட்சம் பேர் இளைஞர்கள் என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளன. மூன்றில்இரண்டு பங்கு நிறுவனத்தில் அப்ரண்டீஸ் மற்றும் அடுத்த 3 காலாண்டுகளுக்கு இன்டெர்ன்ஷிப் வேலை வாய்ப்புகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பால் தற்போது வேலைவாய்ப்பில் இருப்பவர்களை விடவும் 15 முதல் 24 வயதுடைய மாணவர்கள், பட்டதாரிகள், அதிகாரிகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். இந்த பாதிப்பின் எதிரொலி அடுத்த சில ஆண்டுகள் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இவற்றின் தாக்கம்குறித்தும் இது சம்பந்தப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஒவ்வொரு முறையும்பிரதமரின் உரை நடைபெறும் போதெல்லாம் கேட்கக் காத்திருந்த கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான்.

இவ்வாறாக படித்த பட்டதாரிகளும் சரி, சம்பளத்திற்காய் தொழிலைக்கற்றுக் கொண்டு பணிபுரிபவர்களும் சரி, அனைவரும் நிர்க்கதியாய் விடப்பட்ட இச்சூழலில் அவர்களுக்கு இன்னமும் சரியான வழிகாட்டாமல் போலியான நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசின்மேல் இப்போதும் நம்பிக்கை வைத்துக் காத்திருப்பதைத் தவிர இந்திய இளைஞர்களுக்கு வேறு வழி இல்லை என்பதே உண்மையாகும்.ஆரம்பத்தில், இருக்கும் சொற்ப சேமிப்பை வைத்து ஊரடங்கை ஓட்டிவிடலாம் என நினைத்த நடுத்தர, ஏழை எளிய குடும்பங்கள் ஒவ்வொருநாளிலும் தாங்கள் தியாகம் செய்ததைப் பட்டியலிட மற்றுமொரு நாடு முழுவதுமான கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். இத்தகைய சூழலிலாவது வேலைவாய்ப்பிற்கான உருப்படியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.