கொரோனா வைரஸ் தொற்றின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டு உலகம் தவித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை மனிதகுலம் எத்தனையோ நெருக்கடிகளை, உலகப்போர்களை சந்தித்து மீண்டு வந்திருந்த போதும் கூட இப்போது ஏற்பட்டுள்ளது இதுவரை சந்தித்திராத முற்றிலும் அசாதாரணமான ஒன்றாகும்.
உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. விவசாயம், தொழில்கள் குறிப்பாக சிறு-குறு மற்றும் குடிசைத் தொழில்கள் முடங்கியுள்ளதால் இவற்றைச் சார்ந்துள்ள கோடிக் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சிதைந்துள்ளது. நோயின் பிடியிலிருந்து உலகம் எப்போது முழுமையாக மீண்டுவரும் என்பது யாரும் பதில் சொல்ல முடியாத அச்சுறுத்தக்கூடிய ஒரு கேள்வியாக உள்ளது. ஏற்கெனவே நெருக்கடியில் சிக்கியுள்ள உலகப் பொருளாதாரம் கொரோனா நோயின் தாக்கத்தால் மேலும் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது.
இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஆனால் மத்திய ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக அரசு இதை எதிர்கொள்ளும் விதம் முற்றிலும் பொருத்தமற்றதாக அமைந்துள்ளது. இந்த நோயின் தாக்கத்தை முன்கூட்டியே உணர்ந்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதையும் மோடி அரசு எடுக்கவில்லை. நிலைமை விபரீத நிலைக்கு சென்ற பின்புதான் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்தது. இதுவரை மூன்று முறை தொலைக்காட்சிகளில் தோன்றி பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். ஆனால் நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சனை எதற்கும் அவர் பதில் சொல்லவில்லை.
நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும் போதே எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சனையை இரு அவைகளிலும் எழுப்பின. ஆனால் பிரதமரோ மத்திய அமைச்சர்களோ இதுகுறித்து கவலைகொள்ளவில்லை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தாமாக முன் வந்து ஒரு அறிக்கையை இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். ஆனால் அதன் மீது எந்தவொரு விவாதமும் நடத்த அனுமதிக்கப்படவில்லை.
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த நோய்த்தொற்றை நாடும் நாட்டு மக்களும் எவ்வாறு சந்தித்து மீள்வது என்பதை விவாதித்து எதிர்க்கட்சிகள் முன் வைக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் பெற வேண்டும் என்று மோடி அரசு கருதவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவதற்கான மசோதா மற்றும் ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
நாடாளுமன்ற கட்டிடத்தை இடித்துவிட்டு கட்டு வதற்கான அறிவிப்பு மற்றும் ராஜபாதை அமைப்ப தற்கான அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார். இப்போது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடியில் இந்தத் திட்டங்கள் தேவைதானா என்றுகேள்வி எழுப்பப்பட்டபோதும், இந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் மோடி அரசு பிடிவாதம் பிடிக்கிறது.
மத்திய அமைச்சரவை கூடி இரண்டு திட்டங்களை அறிவித்தன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 30சதவீதம் பிடித்தம் செய்வது மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டு இதற்கான அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புடைய இந்தப் பிரச்சனைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என்ற குறைந்தபட்ச ஜனநாயகப் பண்பைக் கூட மோடி அரசு கடைப்பிடிக்க வில்லை.
பிரிட்டனில்...
இந்தக் காலத்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் 10 ஆயிரம் பவுண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எம்.பி.க்கள் வீட்டிலிருந்து செயல்படுவதற்கான தேவையை உத்தேசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித விவாதமும் இல்லாமல், ஆலோசனையும் இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசே எடுத்துக் கொள்வது என்பது அபாயகரமான ஒன்றாகும். இந்த கொடிய காலத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கியுள்ளன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னுதாரணமாக திகழ்ந்தது.
ஆனால் எதிர்க்கட்சிகளை துச்சமாக மதிக்கும் போக்கு பிரதமர் மோடியிடம் தொடர்ந்து வருகிறது. முக்கியமான விசயங்களில் கூட எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு அவைக்கு வந்து பதிலளிப்பதில்லை. இப்போதும் அதே அணுகுமுறைதான் பின்பற்றப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் நட வடிக்கைகளை அமெரிக்கப் பத்திரிகைகள் கடுமையாக விமர்சிக்கின்றன. மாநில ஆளுநர்களுக்கும், ஜனாதி பதிக்கும் இடையிலான முரண்பாடு முற்றியுள்ளது. இதனால் டிரம்ப் ஆத்திரமடைந்த போதும் கூட பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கிறார். இதிலிருந்து அவரால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் சம பங்கு உண்டு என்பதை ஒரு போதும் மறுதலித்துவிட முடியாது. 1916ல் முதல் உலகப்போர் நடந்து கொண்டி ருந்த போதும் கூட பிரிட்டன் நாடாளுமன்றம் நடந்து கொண்டுதான் இருந்தது. 1942ல் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றம் நடந்தது என்பது மட்டுமல்ல, அப்போதைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதன்மீது நடந்த விவா தங்களுக்கு பதிலளித்த சர்ச்சில் பிரிட்டன் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முதிர்ச்சியை இது காட்டுகிறது என்றார்.
ஆனால் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதில் ஆர்வம் காட்டும் பிரதமர் மோடி நாடாளுமன்ற விவாதத்தை நடத்துவதிலோ எதிர்க்கட்சிகளை நெருக்கடியான நேரத்தில் ஒருங்கிணைத்து தேசத்தை வழிநடத்துவதிலோ காட்டுவதில்லை.
ஊடகங்கள் பாரபட்சம்
குறிப்பாக சீனாவுக்கு எதிராக இந்தக் காலத்தில் பல்வேறு அவதூறுகள் பரப்பப்படுகின்றன. இந்திய ஆளும் வர்க்கமும் இதற்கு விதி விலக்கல்ல. இந்த அவதூறுகளுக்கு சீன தரப்பில் சொல்லப்படும் விளக்கங் களை வெளியிடக் கூட பெரும்பாலான இந்திய ஊடகங்கள் தயாராக இல்லை. ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாகவே பெரும்பாலும் செயல்படும் நிலையில் எதிர்க்கட்சிகளையும் முடக்கி வைப்பது ஜனநாயகத்திற்கு பலனளிக்காது. தமிழகத்தை ஆளும் அதிமுக அரசும் பல விசயங்களில் மோடி அரசையே பின்பற்றுகிறது. மத்திய ஆட்சியின் கருணையோடு காலம் தள்ளிவரும் தமிழக அதிமுக அரசு எதிர்க்கட்சிகளை புறக்கணிப்பதிலும் அதே பாணியையே பின்பற்றுகிறது.
தமிழக அரசின் அணுகுமுறை
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு கேட்டால் ஆத்திரப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பிரச்சனையில் மருத்துவர்கள் கூறுவதைத்தான் கேட்க முடியும். எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏன் கேட்க வேண்டும் என்று எதிர்க்கேள்வி கேட்கிறார். கொரோனா என்பது மருத்துவப் பிரச்சனையாக இருந்தாலும் சமூக ஊரடங்கும் அதனால் விவசாயம், தொழில், நெசவு முடங்கியிருப்பதும், மக்களின் வாழ்வாதாரம் சிதைந்திருப்பதும் சமூகப் பொருளாதார அரசியல் பிரச்சனையாகும். இதுகுறித்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்பதால் வானம் ஒன்றும் இடிந்து விழுந்துவிடாது.
தமிழகத்தின் பட்ஜெட் பற்றாக்குறை மிக மோசமாக உள்ளது. வருவாய் வரத்து என்பதும் திருப்தியளிக்கக்கூடிய நிலையில் இல்லை. இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை மேலும் மோசமாக்கும். இதை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையை கேட்க மறுப்பது ஏன்? மேலும் மத்திய அரசிடமோ - மாநில அரசிடமோ போதுமான தரவுகளோ புள்ளிவிபரமோ இல்லை. 2011 மத்திய அரசின் கணக்கெடுப்புப் படி 2 கோடியே 99 லட்சம் வெளி மாநிலத் தொழிலாளர்களும், 33 லட்சம் வெளி மாநில மாணவர்களும் இருப்பதாக கணக்கிடப்பட்டது. அதன்பிறகு எந்த விபரமும் சேகரிக்கப்படவில்லை.இப்போது தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் எவ்வளவு பேர், அவர்களுடைய பிரச்சனை என்ன என்பது குறித்து மாநில அரசுக்கு கவலையில்லை. மாநிலத்தில் உள்ள முறைசாராத் தொழிலாளர்கள் குறித்த முறையான கணக்கெடுப்பும் இல்லை. அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படவும் இல்லை.
மாநில ஆட்சியாளர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது மட்டுமின்றி திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த முன்வருவதையும் கூட காவல்துறை மூலம் தடுப்பதன் மூலம் தன்னுடைய ஜனநாயக விரோத அராஜகப் போக்கை வெளிப்படுத்துகிறது.
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆனால் இந்த நெருக்கடியான சூழலில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆலோசனையைப் பெற ஆளும் கட்சி தயங்குவதில்லை. முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்கும் ஆரோக்கியமான சூழல் அங்கு நிலவுகிறது.
ஆனால் தமிழகத்தில் சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சனையை எழுப்பிய போதும் உரிய பதிலளிக்காத ஆளும் அதிமுக அதன் பிறகும் கூட எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்க வரட்டுத்தனமாக மறுக்கிறது. இந்தப் போக்கு தமிழக வளர்ச்சிக்கு எதிரானது. கொரோனா நிவாரணப் பணிகளிலும் கூட தமிழகத்தை மோடி அரசு வஞ்சித்து வரும் நிலையில் தமிழகத்தின் ஒன்றுபட்ட உணர்வை திரட்ட வேண்டிய ஆளும்கட்சி குறுகிய அரசியல் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறது.
அரசியல் கட்சிகள், பல்வேறு மக்கள் இயக்கங்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று தடைவிதித்த தமிழக அரசு, மறுபுறத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புகள் அதில் ஈடுபடுவதை ஊக்குவித்து வருகிறது. தனது சொந்த அதிமுகவின் ஊழியர்களுக்கு கூட அத்தகைய சலுகையை அரசு அளிக்கவில்லை. நிவாரணம் என்ற பெயரில் மக்களை அணுகும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களுக்கு தமிழகத்தின் பல முதலாளிகள் பெருமளவு நிதி அளித்து வருகிறார்கள் என்பதும் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.
மேற்குவங்கத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மம்தா அரசின் அலட்சியத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையே கண்டித்து எழுதியுள்ளது. போதுமான அளவு பரிசோதனைகள் செய்யப்படாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாக அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகத்திலும் கூட இதேநிலைதான். மேற்குவங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி மக்களிடம் இடதுமுன்னணி அம்பலப்படுத்துகிறது. நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறது.
தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் மக்களுக்குத் தேவை யான நிவாரணப் பணிகளில் தொய்வின்றி ஈடுபட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து விடுபடுவது என்பது அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய ஒன்று. அனைத்து தரப்பையும் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசும்- மாநில அரசும் ஜனநாயக விரோதம் எனும் நோய்த்தொற்றிலிருந்து முதலில் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.