tamilnadu

img

பாஜகவின் வகுப்புவாத திணிப்புக்கு எதிரான தீர்ப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

திருவனந்தபுரம், பிப்.11-  தில்லியில் ஆம் ஆத்மி பெற்றுள்ளது அற்புதமான வெற்றி எனவும் பாஜகவின் வகுப்புவாத திணிப்புக்கு எதிரான தீர்ப்பு. காங்கிரஸ் கட்சி தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  திருவனந்தபுரத்தில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தில்லி தேர்தல் முடிவு நாட்டின் பொதுவான உணர்வை பிரதிபலிக்கிறது. மக்களுக்கு துரோகம் இழைக்கும் பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எதிரான மாற்று சக்தி எங்கெல்லாம் வலுவாக உள்ளதோ அதனை மக்கள் நல்ல முறையில் அங்கீகரிப்பார்கள் என்பதற்கான உதாரணம் இது. பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் தவறான வகுப்புவாத நிலைப்பாட்டுக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் எதிரான பிரதிபலிப்பே இது. இந்த தேர்தலின்போதும் பெரிய அளவிலான வகுப்புவாத அச்சுறுத்தல் பாஜகவிடமிருந்து ஏற்பட்டது. 

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி பாஜகவின் தொடர்ச்சியான கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதாகும், குறிப்பாக அரசமைப்பு சாசனம் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதில் ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளின் போராட்டங்களுக்கு இந்த வெற்றி வலு சேர்க்கும். இதிலிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் காங்கிரசுக்கும் உண்டு. கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கம் வளர்ச்சிக்கு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுள்ளது. இந்த வெற்றி அதற்கு கிடைத்த அங்கீகாரமாகும். காங்கிரஸ் அதைப் புரிந்துகொண்டு நிலைப்பாட்டை எடுத்திருந்தால், அது ஒன்றுபட்டு போட்டியிட முடிந்திருக்கும். பாஜக இன்னும் குறைவான இடங்களையே வென்றிருக்க முடியும். நாட்டுக்கே ஆவேசமளிக்கும் தீர்ப்பை கெஜ்ரிவால் தலைமையிலான கட்சியால் பெற முடிந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.