tamilnadu

img

மானுட மருத்துவன் மார்க்ஸ்

உலகின் தலைசிறந்த அந்த மாமனிதர் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. 1818 மே 5 அன்று பிறந்த மாமேதை காரல் மார்க்சின் இரு நூற்றாண்டு, இன்று நிறைவு பெறுகிறது. கடந்த ஓராண்டு காலமாக மார்க்ஸ் இரு நூற்றாண்டை உலகெங்கிலும் கம்யூனிஸ்ட்டுகள் கொண்டாடினார்கள். ஐதராபாத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது கட்சி அகில இந்திய மாநாட்டில் காரல் மார்க்சின் 200வது பிறந்த தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதெனவும்,இதனையொட்டி கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், கட்டுரைகள், புத்தகங்கள் வெளியிடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரு நூற்றாண்டு நிறைவை கொண்டாடும் விதத்தில் இன்றும் (2019 மே5) நாடு முழுவதும் கருத்தரங்குகள், மார்க்சிய வகுப்புகள், சொற்பொழிவுகள் என பல வடிவங்களில் மார்க்ஸ் கொண்டாடப்படுகிறார். தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு வடிவங்களில் ஏராளமான நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

200 ஆண்டுகளுக்குப் பிறகும்...

கடந்த இரு நூற்றாண்டு களில் மார்க்சியம் எண்ணற்ற சவால்களை சந்தித்துள்ளது. ஏகாதிபத்தியம் உலகத்தை ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டதாக இருக்கிறது. இதற்கு சவாலாக இருந்த சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிச அமைப்பு சீர்குலைந்து முதலாளித்துவம் மீண்டெழுந்துள்ளது. உலகமய தாராளமயக் கொள்கைகள், நிதி மூலதனம் உலகெங்கும் கோலோச்சிக் கொண்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவான இடதுசாரி முற்போக்கு அரசாங்கங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வலதுசாரி மற்றும் தீவிர பிற்போக்கு சக்திகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளன. இதன் ஒருபகுதியாக இந்தியாவில் ஆர்எஸ்எஸ் தலைமையிலான வலதுசாரி பிற்போக்கு பாஜக 2014ல் நடந்த தேர்தலில் ஆட்சிக்கு வந்துள்ளது. இத்தகைய எதிர்வினைகளை காரணம் காட்டி 200 ஆண்டுகளுக்குப் பிறகும் மார்க்ஸ் பிறந்தநாளையும். மார்க்சியத்தையும் கொண்டாடுவதற்கு பொருத்தப்பாடு உள்ளதா என கேள்வி தொடுப்பவர்களும் உள்ளனர். 

மார்க்சியத்திற்கு எதிர்காலமே இல்லை என்று முதலாளித்துவ ஊடகங்கள் எழுதி வருகின்றன. ஆனால் இன்றும் முதலாளித்துவத்திற்கு, அமெரிக்காவுக்கு சவால் விடுகிற, சிம்ம சொப்பனமாக திகழ்கிற நாடாக மக்கள் சீனம், சோசலிசத்தை உயர்த்திப் பிடித்து பீடுநடை போடுகிறது. சோசலிச கியூபா, அமெக்காவின் தடைகளையும் மீறி தொடர்ந்து சோசலிசப் பாதையில் முன்னேறி வருகிறது. சோசலிச வடகொரியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அளவிற்கு முதலாளித்துவ அமெரிக்கா சர்வதேசிய அரசியலில் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஆனாலும் கூட இன்றைக்கும் சோவியத் பின்னடைவை சுட்டிக்காட்டி அது மார்க்சியத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சியே என்று முதலாளித்துவ ஊடகங்கள் இடைவிடாமல் பிரச்சாரம் செய்து வருகின்றன. இவ்வாறு கேள்வி தொடுப்பவர்கள் மார்க்சியத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும். காரல் மார்க்ஸ் தத்துவம், அரசியல், பொருளாதாரம், வரலாறு உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து உட்கூறுகளையும் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்த தத்துவ ஞானியாவார். 

சமூக விஞ்ஞானம்

மார்க்சியம் என்பது ஒட்டுமொத்த உலகைப் பற்றி ஆய்வு செய்கிற ஒரு சமூக விஞ்ஞானமாகும். குறிப்பாக முதலாளித்துவ சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி, அதன் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து உலகிற்கு அளித்ததே மார்க்சின் சிறப்பான பங்களிப்பாகும்.மார்க்ஸ் தனது கல்லுரிக் காலத்தில் தத்துவ ஆய்வில் ஆர்வம் காட்டினார். அக்காலத்தில் பிரான்சில் ஹெகல் என்ற மகத்தான தத்துவ அறிஞருக்கு இளைய தலைமுறையினரிடையே ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தது, இவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் இளம் ஹெகலியர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஹெகலின் கொள்கைகளை மார்க்ஸ் தீவிரமாக பின்பற்றினார். அதே சமயம் ஹெகலின் சில கோட்பாடுகளில் முரண்பட்டார். உலகம் தொடர்நது இயங்கிக் கொண்டே இருக்கிறது; இயங்காதது எதுவும் இல்லை. எதுவும் நிலையானதும் இல்லை என்பதே ஹெகலின் இயங்கியல். மார்க்ஸ் இதை ஏற்றுக் கொண்டாலும் ஹெகலின் மற்றொரு வாதத்தை ஏற்க மறுத்தார். உலகில் எதுவுமே நிலையானது அல்ல; ஆனால் அதை ஆள்கிற பிரபுக்கள் மட்டும் நிலையானவர்கள் என்ற ஹெகலின் வாதத்தை மார்க்ஸ் முற்றாக நிராகரித்தார். எல்லாமே மாறும் என்றால் பிரபுக்களும், பிரபுத்துவ ஆட்சி முறையும் மாறும் என்பதுதானே விதியாக இருக்க முடியும் என்று வாதிட்டார்.

இயக்கவியலின் அடிநாதம்

ஹெகலுனுடனான இந்த முரண்பாடுதான் மார்க்சை சமூக, பொருளாதார, அரசியல், தத்துவார்த்த ஆய்வுக்குள் தீவிரமாக தள்ளியது. மார்க்ஸ் மேலும் ஒருபடி மேலே சென்று மனிதனுடைய அடிப்படைத் தேவையாக இருப்பது உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகளாகும். இவைகளை உற்பத்தி செய்கிற சமூக உற்பத்திதான் மனித வாழ்வின் அடிப்படை அம்சமாக இருக்க முடியும். இந்த சமூக அடிப்படையின் மீதே மனிதனுடைய அரசியல், தத்துவம், சட்டம் மற்றும் விதிகள் உள்ளிட்டவற்றை நிர்மாணிக்க முடியும் என்பதை உணர்ந்தவர் மனித சமூக உற்பத்தி, அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.இந்த ஆராய்ச்சியின் விளைவாக மனித சமூகத்தின் இயக்கவியலின் அடிநாதத்தை கண்டுபிடித்தார். மனிதகுல சமூகம் என்பது காலத்திற்கு காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. ஆதிப் பொதுவுடைமை சமூக கட்டமைப்பாக முதலில் இருந்தது; விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தி துவங்கிய பிறகு ஆண்டான் - அடிமைச் சமூகமாக மாறியது; வலுவுள்ளவர்கள், வலுவற்றவர்கள் இடையிலான மோதல் நீடித்த நிலையில், வலுவுள்ளவர்கள் கோலோச்சுகிற நிலபிரபுத்துவ சமூகமாக மாறி, பின்னர் முதலாளிகள்- தொழிலாளிகள் என்ற முரண் நிலவுகிற முதலாளித்துவ சமூகமாக மாறியது. இந்த வரலாறு நெடுகிலும் இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல் நடந்து கொண்டேயிருக்கிறது. இந்த வர்க்க மோதல் தான் சமூக மாற்றத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. எனவே சமூகம் தானாக மாறவில்லை. சமூகத்தை இயக்குகிற விதியாக வர்க்க மோதல் என்பது இருக்கிறது. எனவே மனிதகுலத்தின் இதுவரையான வரலாறு முழுவதும் வர்க்க போராட்டங்களின் வரலாறே என்று மானுட சமூகத்தின் புதிய விதியை உலகிற்கு பிரகடனம் செய்தார் மார்க்ஸ். இப்படித்தான் மார்க்ஸ், மார்க்சியத் தத்தவத்தை உருவாக்கும் பாதையை வந்தடைந்தார். வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற முறையில் வரலாற்றை ஆய்வு செய்ததுடன் மனித குல வரலாறு என்பது தனிநபர்கள், அரசர்கள், குருமார்கள் வந்து போன நிகழ்வுகளின் தொகுப்பல்ல; மாறாக இதுவரை இருந்துள்ள மனிதகுல வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறே என வரலாற்றுக்கு புதிய இலக்கணம் வகுத்தவர் மார்க்ஸ் அவர்களே.

சூட்சுமத்தை சொன்ன சூத்திரம்

தன்னுடைய ஆய்வில் முதலாளித்துவ சமூகத்தில் நடைபெறும் உற்பத்தி, மூலதனம், உழைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் பல ஆண்டுகள் ஆய்வுக்குப்பிறகு வகுத்துத் தந்தவர் காரல் மார்க்ஸ் ஆவார். முதலாளிகள் ஈட்டுகிற லாபம் மூலதனமாக குவிகிறது. அம்மூலதனம் மேலும் உழைப்பாளிகளை சுரண்ட உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகிறது. இவ்வாறு லாபத்தை குறியாக வைத்து இயங்குவதே முதலாளித்துவ சமூக அமைப்பு. லாபம் இல்லையென்றால் முதலாளித்துவ உற்பத்தி முறை இல்லை என்றே சொல்லலாம். அப்படியானால் லாபம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்து அதன் சூட்சுமத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் மார்க்ஸ்.முதலாளிகள் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விற்கிறார்கள். சந்தையில் அடக்க விலையை விட கூடுதலாக விலை வைத்து விற்பதுதான் லாபம் என கருதப்பட்டது. எனவே மோசடி சந்தையில்தான் தோன்றுகிறது என பல பொருளாதார அறிஞர்கள் கருதினார்கள். ஆனால் அடக்கவிலையை விட கூடுதல் விலை விற்காமல் அதே விலைக்கு விற்றாலும் முதலாளிக்கு லாபம் கிடைக்கும் என்பதை மார்க்ஸ் பகிரங்கமாக போட்டு உடைத்தார். மோசடி என்பது சந்தையில் துவங்கவில்லை; அது பொருள் உற்பத்தியிலேயே துவங்கி விடுகிறது என்பதை நிரூபித்துக் காட்டியவர் மார்க்ஸ். தொழிலாளி பொருள் உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட மணி நேரம் உழைப்பை செலுத்துகிறார். (உதாரணம் எட்டு மணி நேரம்) அதாவது பொருள் உற்பத்திக்காக தனது எட்டு மணி நேர உழைப்பு சக்தியை முதலாளிக்கு விற்கிறார். ஆனால் அவர் செலுத்தும் உழைப்பு சக்திக்கேற்ப அவருக்கு கூலி வழங்கப்படுகிறதா என்பதே கேள்வி. உற்பத்திக்கு தேவையான கச்சாப்பொருள், இயந்திரம் உள்ளிட்ட அனைத்திற்கும் அதற்கான விலையைக் கொடுத்த பிறகு உழைப்பு சக்திக்கு கொடுக்க வேண்டிய கூலியில் குறைத்துக் கொடுக்கப்படுவதே முதலாளிக்கு லாபமாகக் கிடைக்கிறது. அதாவது 8 மணி உழைப்பு சக்திக்கு 4 மணி நேர உழைப்பு சக்திக்கான கூலியைக் கொடுத்து விட்டு மீதி 4 மணி நேர உழைப்பு சக்தியை முதலாளி லாபமாக எடுத்துக் கொள்கிறார். இந்த லாபம்தான் உபரி மதிப்பாகுமென மார்க்ஸ் நிரூபித்துக் காட்டினார்.

உயிர் மூச்சே லாபவெறி தான்...

முதலாளித்துவத்தின் உயிர் மூச்சே லாப வெறிதான். இதனை கீழ்க்கண்டவாறு மார்க்ஸ் அழகாக விளக்குகிறார். 10 சதமான லாபம் கிடைக்குமெனில் முதலாளி புன்முறுவல் செய்வார். 50 சதமான லாபம் கிடைக்குமெனில் உற்சாகமாக குதிப்பார். 100 சதமானம் லாபம் கிடைக்குமெனில் எழுந்து பறப்பார். துக்குக் கயிற்றில் தொங்கினால் 300 சதமான லாபம் கிடைக்குமெனில் தான் இறந்து விடுவோம் என்பதையும் மற்ந்து அதற்கும் தயாராகி விடுவார். இத்தகைய லாபத்தை, அதாவது உபரி மதிப்பை அதிகரிப்பதற்கு காலம் காலமாக முதலாளித்துவம் எண்ணற்ற வழிமுறைகளை கையாண்டு வருகிறது. விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்படும் அதி நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இயந்திரமயம், ஆட்குறைப்பு, வேலைப்பளு போன்ற உத்திகளைக் கடைபிடித்து சுரண்டலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதற்காக தொடர்ந்து உற்பத்திக்கருவிகளை நவீனப்படுததுவது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது என்பதையும் மார்க்ஸ் எடுத்துக்காட்டினார்.

வளர்ச்சி யாருக்கு?

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, தொலைத்தொடர்பு வளர்ச்சி போன்றவைகளால் மனித சமூகத்தின் உற்பத்தி கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. விவசாய உற்பத்தி, தொழில் உற்பத்தி உள்ளிட்ட அனைத்தும் பலமடங்கு உயர்ந்துள்ள போதிலும், மக்களின் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு ஆலாய் பறக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான உலக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (எப்ஏஓ) கொள்கை தொடர்பான ஆய்வறிக்கை தெரிவித்துள்ள விவரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 2017ம் ஆண்டு 821 மில்லியன் மக்கள் மிக மோசமான உணவுப்பற்றாக்குறையால் பரிதவிப்பதாக கூறியுள்ளது. உலகின் மொத்த பெண்களில் 30.3 சதமான பெண்கள் போதிய உணவின்றி ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டுள்ளதே தவிர குறையவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியினால் உற்பத்தி பல மடங்கு உயர்ந்த பின்னரும் சாதாரண ஏழை, எளிய உழைப்பாளி மக்களின் வாழ்வு பசி, பட்டினியோடு பரிதவிப்பது முதலாளித்துவ சமூகத்தின் லாபவெறியின் பிரிக்க முடியாத அங்கம் என்பதை விளக்க வேண்டியதில்லை. அதேசமயம் உலகத்தில் முதலாளிகளின் லாபமும் சொத்துக்குவிப்பும் எவ்வளவு வேகமாக வளர்ந்துள்ளது என்பதை சமீபத்திய விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தாமஸ் பிக்கெட்டி என்ற பொருளாதார அறிஞர் உலக பொருளதார சமத்துவமின்மை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் 90 சதமான மக்களது வருமானம் ஆண்டுக்கு 2 சதமானம் மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் பணக்கார ஒரு சதமான மக்களின் வருமானம் 7 சதமானம் அளவிற்கு உயர்ந்துள்ளது. 2012ம் ஆண்டு கணக்குப்படி பணக்கார பத்து சதமான மக்கள் தொகையினர் வைத்துள்ள மொத்த சொத்தின் மதிப்பு 63 சதமானமாக உயர்ந்துள்ளது. ஆனால் அடித்தட்டில் உள்ள 50 சதமான 

தவிர்க்க முடியாத நெருக்கடி

எனவே முதலாளித்துவ சமூகத்தில் ஒருபக்கம், ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதும், வறுமை, வேலையின்மை, பசி, பட்டினி கொடுமைகள் அதிகரிப்பதும் தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இத்தகைய நிலைமையே ஏற்பட்டுள்ளது, மறுபக்கம் மக்களின் வறுமை, வேலையின்மை முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கே தடையாக அமைந்து விடுகிறது. பொருள்கள் தேக்கம், ஆலைகள் முடக்கம், மூடுவிழாக்கள் என முதலாளித்துவ நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திக்குமுக்காடுவதை காண முடிகிறது. 2008 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இன்னும் முழுமையாக மீண்ட பாடில்லை. பொருளாதார நெருக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முதலாளித்துவ நாடுகள் மேலும் மேலும் உழைப்பாளி மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. உலகமய- தாராளமயக் கொள்கைகளின் மூலம் தங்களது நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்ள மக்களது வாழ்வாதாரங்களை தட்டிப்பறிக்கும் முயற்சிகளை சிக்கன நடவடிக்கை என்ற பெயரால் உலகம் முழுவதும் மேற்கொள்வதை பார்க்க முடிகிறது. உலக முதலாளித்துவம் தனது நெருக்கடி நோய்களைத் தீர்த்துக் கொள்ள மேற்கொள்ளும் மருத்துவ நடவடிக்கைகள் விஷமாகவே மாறி மேலும் நெருக்கடிகளை தீவிரப்படுத்துவதையே பார்க்க முடிகிறது. இந்தத் தீவிர நெருக்கடியால் ஏகாதிபத்திய நாடுகளுக்குள் போட்டி, வர்த்தகக்கட்டுப்பாடுகள், முரண்பாடுகள் வெடித்துக் கிளம்புவதை காண முடிகிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்த்து அந்தந்த நாடுகளில் மக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபடுவதும், நீடித்த போராட்டங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது, இந்த அதிருப்திகளை இடதுசாரி பாதையில் அனுமதிக்காமல் வலதுசாரிகளின் கீழ் திரட்டுவதற்கு திட்டமிட்ட முயற்சிகளை முதலாளித்துவம் மேற்கொண்டு வருகிறது. இதில் சில வெற்றிகளும் இவர்கள் பெற்றுள்ளார்கள் என்பது கவலைக்குரியதாகும். ஆனால் இவ்வலதுசாரி ஆட்சியாளர்கள் கடைபிடிக்கும் அதே முதலாளித்துவ பாதையானது இம்மக்களை முதலாளித்துவத்தை எதிர்த்த பிரம்மாண்டமான கிளர்ச்சிகளில் பங்கேற்க வைக்கும் என்பது திண்ணம்.

மார்க்சியமே வெல்லும்

எனவே முதலாளித்துவ சமூகத்தை அழித்தொழித்து ஒரு சோசலிச சமூகத்தை அமைப்பதன் மூலமே உழைக்கும் மக்களின் நெருக்கடிகளுக்கும், ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் விடுதலை அளிக்கும் என்பதை ஆணித்தரமாக எடுத்து விளக்கியவர் காரல் மார்க்ஸ். இவரது தத்துவ ஞானத்தைத் தான் சோவியத் நாட்டின் நிலைமைகளுக்கேற்ப பொருத்தி சோசலிச புரட்சியை 1917ம் ஆண்டு தோழர் லெனின் தலைமை தாங்கி நடத்தினார். ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு மேல் உலக மனித சமூக வரலாற்றில் இல்லாத சாதனைகளை சோவியத் யூனிய்ன் அரங்கேற்றி இருந்தது. இன்றைக்கும் மக்கள் சீனமும் இதர நாடுகளும் இப்பாதையில் வரலாற்று சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. காரல் மார்க்சும் அவரது சக தோழருமான பிரடெரிக் ஏங்கல்சும் இணைந்து உருவாக்கிய மார்க்சியம் மட்டுமே மனித குல சமூகத்திற்கு முழு விடுதலை அளிக்க முடியும். எனவேதான் இதை நிறைவேற்ற உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், நாம் இழப்பதற்கு அடிமைச்சங்கிலிகளைத் தவிர வேறில்லை. ஆனால் அடையப்போவது ஒரு பொன்னுலகம் என காரல் மார்க்ஸ் விடுத்த அறைகூவலும் அவரது தத்துவார்த்த பணியும் மனிதகுலம் முழுவதும் நினைவிற் கொள்ள வேண்டியதாகும். 








;