tamilnadu

img

கை கழுவ தண்ணீரே இல்லாத குடும்பங்களில் தனித்திருக்கச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம்?

சோப்பு போட்டு கைகளை குறைந்தது 40 விநாடிகளுக்கு நன்றாக கழுவ வேண்டும், வெளியே சென்று திரும்பிய பிறகு குளிக்க வேண்டும் – தினமும் சில முறையாவது இந்த வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம். கொரோனாவை எதிர்கொள்வது பற்றிய உரையாடல்களில் மந்திர சொல்லாக தண்ணீர் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையும் தமிழகமும் தண்ணீருக்காக வீதி வீதியாக அலைந்ததெல்லாம் இப்போது மங்கலான நினைவுகள். இப்போது நமது முக்கியத்துவமெல்லாம் தண்ணீர் இன்ன பிற விசயங்களை கொண்டு கொரோனாவை போரிட்டு அழிப்பதுதான்.

சரி இந்த தண்ணீர் என்னும் வசதி எத்தனை இந்தியர்களுக்கு வாய்த்திருக்கிறது? சுத்தமான தண்ணீருக்கான வாய்ப்பு இல்லாத காரணத்தால் கிட்டத்தட்ட 94 மில்லியன் இந்தியர்கள் கொரோனா தொற்றுக்கு கூடுதல் ஆபத்தில் இருக்கிறார்கள் என்கிறது IndiaSpend ஆய்வுக்கட்டுரை ஒன்று.

ஊரகப்பகுதிகளில் நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு சராசரியாக 40 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். கைகளை ஒரு முறை கழுவ மட்டுமே 2 லிட்டர் தேவைப்படும். இதில் எத்தனை குடும்பங்களுக்கு இந்த அளவுக்கு நீர் கிடைக்கும்? இந்தியாவின் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருக்கும் 48.3 சதவிகிதம் குடும்பங்களுக்கு தங்களுக்கென்று தண்ணீர் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

IndiaSpendன் ஆய்வு ஐந்து மாநிலங்களில் நடத்தப்பட்டது. இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட உத்திர பிரதேசம், மகராஷ்டிரா, பீஹார், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுத்தமான நீர் இல்லாத நிலை, நீருக்காக பல தொலைவுகள் நடக்க வேண்டிய சூழல், சுகாதாரமற்ற நிலை மற்றும் சரியாக கை கழுவ முடியாத சூழல் போன்ற காரணங்களால் கொரோனாவை தடுப்பது பெரிய சவாலாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 46 சதவிகிதம் பேர் இந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

இனி கிராமப்புற பகுதிகளில் அதிக தொற்று கண்டுபிடிக்கப்பட கூடுதல் வாய்ப்பு இருக்கும். அதற்கு இந்த காரணங்களே அடிப்படை.

கை கழுவ தண்ணீரே இல்லாத குடும்பங்களில் தனித்திருக்கச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம்? இந்த மக்கள்தான் உண்மையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட கூடியவர்கள். ஏற்கனவே பல இடங்களில் தண்ணீர் பிரச்னை மிக பெரியதாக இருக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக அதெல்லாம் வெளியே தெரிவிதில்லை

இதை விட பெரிய பிரச்னை பொது கழிப்பறைகள். சுகாதாரமும் தனித்திருத்தலும் வாய்க்காத பொதுக்கழிப்பறையை இன்னமும் மக்கள் பயன்படுத்த வேண்டிய நிலையிலேயே இருக்கிறார்கள்.

தரவுகளின் படி இந்தியாவில் 41 சதவிகிதம் குடும்பங்கள் பொது குளியலறைகளை பயன்படுத்துகிறார்கள். 11.2 சதவிகிதம் பொது கழிப்பறையை பயன்படுத்துகிறார்கள். 20.2 சதவிகிதம் குடும்பங்களுக்கு எவ்விதமான கழிப்பறை வசதியும் இல்லை.

இப்போதும் இந்த தேசம் கொரோனாவை போரிட்டு தோற்கடிக்க வேண்டியது பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. உண்மையில், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இன்னமும் மக்கள் வாழவேண்டியிருப்பதை, இன்று கொரோனாவுக்கு எதிரான போரில் அவர்கள் எல்லாம் ஆயுதங்கள் ஏதும் இன்றி நிற்க வேண்டிய அவலத்தை பேசத் தொடங்க வேண்டும். சமத்துவமற்ற அந்த போரில் அவர்கள் பெறும் தோல்வி ஒரு நாகரீக சமூகமாக நம் தோல்வி.

IndiaSpend ஆய்வை அடிப்படையாக கொண்டு ஸ்க்ரால் இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் இணைப்பு கீழே.

https://scroll.in/article/964427/94-million-indians-are-at-greater-risk-from-coronavirus-because-of-lack-of-access-to-clean-water?fbclid=IwAR1GcvuSP_pJICw7iwgCaN5F5oM3nNYUh30AW_xRAOBbVRMcD7t-u5KDfO0

தமிழில்:- பூவுலகு சுந்தர் ராஜன்