ஹைதராபாத்
பிரபல தெலுங்கு நடிகராக இருப்பவர் சச்சின் ஜோஷி. இவர் தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும், தமிழில் ஒரு படத்திலும் (யார் இவன் - ரீமேக்) நடித்துள்ளார். நடிகர் மட்டுமின்றி கிங்ஸ் என்ற பெயரில் மதுபான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான வகையில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கடந்த மாதம் 80 குட்கா பெட்டிகள் கைப்பற்றப்பட்டன. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த குட்கா கடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் குதித்தனர். விசாரணை முடிவில் சச்சின் ஜோஷிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
ஆனால் சச்சின் ஜோஷி அப்போது துபாயில் இருந்தார். அவர் எப்போது இந்தியா வந்தாலும் கவன ஈர்ப்பு சுற்றறிக்கை (Look out circular) மூலம் கைது செய்யும் அறிக்கை விடப்பட்டிருந்தது. இன்று திடீரென ஹைதராபாத் வந்த சச்சின் ஜோஷியை விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர்.
ஏற்கெனவே பாலிவுட்டில் போதை மருந்து விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகில் குட்கா விவகாரம் துளிர் விட்டுள்ளது.