tamilnadu

img

ரத்து செய்யப்பட வேண்டிய தேர்வு- ச.காவியா

ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவை எதிர்த்துப் போராடிவரும் நிலையில், உலகின் மருந்தகமாக அறியப்படும் இந்தியாவும் தொடர்ந்து அப்போராட் டத்திற்கு ஈடு கொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவ உள்கட்டமைப்பில் சிறந்து விளங்கும் தமிழகம் அப்போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறது. இங்கு அரசு மருத்துவமனையில் முன்னின்று களமாடும் அனுபவம் பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்கள் உள்ளிட்டோர் தொன்னூற்று எட்டு சதவீதம் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனை வரும் 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர், அதாவது நீட் தேர்வுக்கு முன்னர் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டியது.   தற்போது தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) வெளியிட்ட அறிவிப்பின்படி இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13 அன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே இருமுறை தள்ளி வைக்கப்பட்ட இத்தேர்வு பத்தாம் வகுப்பு மற்றும் கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது போல், ஏன் ரத்து செய்யப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு மட்டும் இருக்கிறது என்ற கேள்விக்கு மத்திய அரசோ தேசியத் தேர்வாணையமோ இன்னும் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை.  

முன்னதாக இந்திய மருத்துவக் குழும சட்டம் - 1956 இன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948 இன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது (நீட் தேர்வானது) அகில இந்திய அளவிலான, இந்திய அரசின் மத்திய சுகாதா ரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான (அனைத்திந் திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் (சிபிஎஸ்சி) தேர்வாகும். இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All india pre medical test (AIPMT) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது.  முன்னதாக, நீட் தேர்வுக்கு எதிராகத் தொடரப்பட்ட 115 வழக்குகளில், 2013-ஆம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் உச்சநீதிமன்றம் நீட் தேர்வுக்குத் தடை விதித்தது.

மேல் முறை யீட்டில், மீண்டும் 2016-ஆம் ஆண்டு ஏப்ரல்-11 அன்று உச்சநீதிமன்றம் நீட் தேர்வு மீதான தடையை விலக்கியது. அதன் பின், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ இடங்களில் 15 சதவிகித இடங்கள் 2016-2017 ஆண்டின் நீட் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என்று, 2016-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து நிரந்தரமாக நீட் தேர்வு நடத்தப்படுவதற்கான சட்டம் ஜூலை 19, 2016-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வுக்கு பல எதிர்ப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து எழுப் பப்பட்டு வரும் நிலையில், நீட் ஆதரவாளர்கள் சிலர் எழுப்பும் கேள்விகள் அபத்தமானவையாக உள்ளன. அத்தகைய கேள்விகளும்  விளக்கங்களும்:

எல்லோருக்குமான சமவாய்ப்பாகத் தானே நீட் தேர்வு உள்ளது?
சாதாரணமாக இக்கேள்வியை வாசிக்கிற எவருக்கும்  மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவதில் என்ன தவ றுள்ளது என்பதுபோலத் தான் தோன்றும். ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை என்பதற்கு கீழ்க்கண்ட உதாரணமே சான்று. கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் 17 ஆயி ரத்து 630 பேர். இந்த ஆண்டு அதில் பாதி பேர் கூட விண்ணப் பிக்கவில்லை. அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் 60 சதவீதம் குறைந்துள்ளனர். ஏன் அரசுப் பள்ளி மாணவர்க ளை மட்டும் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதற்கும் இதோ பதில் உள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற வர்களில் 66 சதவீதத்தினர் பலமுறை தேர்வு எழுதியவர்கள் ஆவர். தொடர்ந்து போட்டி போட பயந்தும் வருடங்கள் கடந்து குடும்ப பாரத்தைத் துறந்து தோல்விகளை சந்திக்க அஞ்சியும் பல மாணவர்கள் மருத்துவராகும் விருப்பத் தையே கைவிட்டு வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அரசு தரப்பிலும் நீட் பயிற்சி மையங்கள் நடத்தப்படுவதால் அரசுப் பள்ளி மாணவர்கள் அங்கு பயின்று தேர்வில் வெற்றி பெறலாமே?!!
தமிழகம் உண்மையில் கல்வியில் முன்மாதிரியாக இருந்தும் அரசுப் பள்ளியில் சேர்ப்பதில் நம் மக்களுக்கு நாட்டம் குறைவு. கடன் பெற்றாவது மெட்ரிக்குலேசன் பள்ளி யில் படிக்க வைத்து பிள்ளையை பெரியாளாக்குவேன் என்பதே நம் பெற்றோர்களின் கனவு, லட்சியம். உண்மை இவ்வாறு இருக்க அரசுத் தரப்பில் நடத்தப்படும் நீட் பயிற்சி மையங்களில் படிக்கும் “அனைவருக்கும்” நிச்சயம் மருத்துவக் கனவு நிறைவேறும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாததே ஆகும். அங்குமிங்கும் ஓரிரு மாணவர்கள் அவ்வாறு தேர்ச்சியடைவதை தமிழகத்தின் ஒட்டுமொத்த முடிவாக்குவதும் சரியல்ல. சரி, இந்த வருடக் கதைக்கு வருவோம்.. தமிழக அரசு நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை தயார்ப்படுத்த 412 பயிற்சி மையங்களை ஏற்படுத்தியது. ஆனால் இந்தாண்டு தேர்வுக்கு தயார்ப் படுத்துவதற்காக அதற்கான பயிற்சிகளை கடந்த ஆண்டு மிக காலதாமதமாக செப்டம்பர் மாதம் தான் செயல்பட ஆரம்பித்தது. ஒன்றிரண்டு வகுப்புகளே அங்குமிங்குமாக நடந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல், பொங்கல் ஆகிய வற்றால் பயிற்சி மையங்களின் செயல்பாடு முற்றிலும் தடைபட்டது. பொங்கல் முடிந்து தயாராவதற்குள் இறுதித் தேர்வு, அது முடிவதற்குள் ஊரடங்கு என்பதால் சமூகமே முடங்கி விட்டது. ஆனால் தேர்வு மட்டும் செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது.

இதே நெருக்கடிகள் அனைத்து தர மாணவர்களுக்கும் பொருந்தும் தானே?
நிச்சயம் இதே நிலை பொருந்தும் தான். நம் தமிழகம் நீட்டிற்கு எதிராக ஆரம்பத்தில் இருந்து போராடி வந்த போதும் வருடாவருடம் இத்தேர்வுக்கு போட்டி போடுப வர்களின் சதவீதம் அதிகரித்தது. ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மாறாக 17 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்க ளிலேயே கடைசி நேரத்தில் தேர்வுக்கு செல்லாமல் பின்வாங்கியவர்கள் 15 ஆயிரத்து 919 பேர். காரணம் முன்னமேயே சொன்னது போல் பலமுறை தேர்வெழுத மாணவர்கள் தயாராக வேண்டும். அதற்கு விட்டு விட்டுப் பெய்யும் மழை போல் கிடைக்கும் அரசு தரப்பு நீட் மையங்கள் மட்டும் போதாது. நிச்சயம் தனியார் பயிற்சி மையங்களை நாடிச் செல்ல வேண்டும் என்பதே உண்மை நிலை.  தற்போதைய நிலவரப்படி நீட் தனியார் பயிற்சி மையக் கட்டணமாக ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க பலமுறை இக்கட்டணத்தைக் கட்டித் தேர்வெழுத எந்த கடைநிலை மாணவரும் இங்கு இல்லை. ஆக முன்பு சொன்னது போல் நெருக்கடிகள் அனைவருக்கும் ஒன்று தான். ஆனால் இதனைக் கடந்து வரும் திறனுள்ளவர்கள் பணம் படைத்தவர்கள் தான் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

சிபிஎஸ்இ-யும் மற்ற பாடத்திட்டங்களைப் போல்  ஒரு பாடத்திட்டமாக மட்டும் இருக்கும் போது இதில் என்ன சாதிய வர்க்க பாகுபாட்டை நீங்கள் காண்கிறீர்கள் ?
இந்தக் கேள்வியை எழுப்புபவரிடமே இதிலிருந்து நாம் மற்றொரு கேள்வியை கேட்க வேண்டும். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்கள் மற்றும் இதர ஐசிஎஸ்இ போன்ற கல்வி வாரியங்களின் பாடத்திட்டங் களை எல்லாம் புறக்கணித்துவிட்டு சிபிஎஸ்இ-யின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டும் ‘நீட்’தேர்வை நடத்துவது ஏன்? என்பதே அதுவாகும். கடந்த 2016 ஆம் ஆண்டு அனைத்திந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் (AIMS) நடத்திய இந்தப் பொது நுழைவுத் தேர்வில் பங்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சம். இது அப்போது மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர் தொகையில் வெறும் பத்து சதவீதம்தான். அப்போது இந்தப் பொதுத்தேர்வு கட்டாயம் இல்லை என்ப தால் மற்ற 90 சதவீதம் மாணவர்களும் ‘நீட்’எழுதுவதில் ஆர்வம் காட்டவில்லை. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி யுற்று பல்வேறு படிப்புகளுக்கும் மேற்செல்கிறவர்களின் மொத்த எண்ணிக்கையுடன் இதை ஒப்பிட்டால் பொதுத் தேர்வை, அதாவது ‘நீட்’டை விருப்பப்பூர்வமாகத் தேர்வு செய்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதை விளக்க வேண்டியதில்லை.  சரி அப்படிப் பொது நுழைவுத் தேர்வைத் தேர்ந்தெடுத்த அந்தச் சிறு தொகை மாணவர்கள் யாரெனப் பார்த்தால், அவர்கள் சிபிஎஸ்இ போன்ற மத்தியக் கல்வி வாரியப் பாடத் திட்டங்களில் படித்தவர்கள் தான்.

தரமான போட்டி மூலமே திறமையான மருத்துவர்கள் உருவாக முடியும் என்பது பற்றி...
கடுமையான தரமான போட்டியின் மூலம் உருவாகும் மருத்துவர்களால்தான் நாட்டில் நிச்சயம் தரமான சேவை மனப்பான்மையுள்ள மருத்துவத்துறை மலரும் என்பதும், அதுவும் சிபிஎஸ்இ மூலம் தான் திறமை வாய்ந்த மருத்து வர்களை உருவாக்க முடியும் என்பதெல்லாம் தனியார் மயத்தின் லாப நோக்கமின்றி வேறல்ல. தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்படும் எனக்கூறி இந்தாண்டு நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்த அனுமதி அளித்து அவற்றை தள்ளிவைக்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், நீட் தேர்வால் மருத்துவராகும் தன் வாழ்நாள் கனவு சிதைக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ போன்றோரின் பட்டியல்களை மட்டும் கண்டு கொள்ளாமல் இருப்பது விசித்திரமாக உள்ளது. நாடு முழு வதும் ஆன்லைன் வகுப்புகளை மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி ஆதரித்து அதிலேயே தேர்வுகளையும் ஊக்குவித்து வரும் அதேநேரத்தில் நீட் தேர்வை மட்டும் ஆன்லைனில் நடத்தக்கூடாது என தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) கூறியிருப்பது, இதற்கு ஓர் உதாரணம் ஆகும்.  இதுதவிர நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்க ளுக்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு ஒதுக்குவதை உறுதி செய்வதை வரவேற்கும் அதே நேரத்தில், இத்தேர்வே கூடாது எனவும் நாம் உரத்துக் கூற வேண்டியுள்ளது.