tamilnadu

img

பள்ளி வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றக் கூடாது - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவிப்பு

பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக மாணவர்களை ஏற்றக் கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், ”தனியார் பள்ளிகளின் வாகனங்களுக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். காப்பீடு உரிய காலத்தில் புதுப்பிக்கப்படுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். பள்ளி வாகனத்தின் முன்னும் பின்னும் பள்ளி வாகனம் என்று பெரிய எழுத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் வாகனத்தை இயக்கினால், பள்ளிப் பணிக்காக மட்டும் என வாகனத்தின் முன்னும் பின்னும் தெளிவாக எழுதியிருக்கவேண்டும். வாகனங்களில் பாதுகாப்பு கிரில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

மற்ற வாகனங்களிலிருந்து வேறுபாடாகத் தெரியும் வண்ணம் பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று, அதில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களுக்கு ஒரு தகுதியான உதவியாளர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். உதவியாளர் இல்லாமல் வாகனத்தை இயக்கக் கூடாது. ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் ஆசிரியர் நிலையில் ஒருவர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இருக்கவேண்டும். 

எந்தவொரு பள்ளி வாகனத்திலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றக் கூடாது. பள்ளியை ஒட்டியுள்ள சாலை, மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் வாகனங்களை நிறுத்திக் மாணவர்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. 

பள்ளி வாகனத்தில் வரும் மாணவர்களை, பாதுகாப்பாக அவரவர் வீட்டிற்குச் சென்றடைவதை உறுதி செய்வது பள்ளி நிர்வாகத்தின் தலையாய கடமையாகும். இதிலிருந்து தவறி கவனமின்மை காரணமாக ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதற்கு பள்ளி நிர்வாகமே முழு பொறுப்பேற்க நேரிடும்.” எவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.