பிளல் 1 பாடத்திட்டத்தை குறைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கோவிட்-19 பரவல் காரணமாக தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 10-ஆம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதை அடுத்து, பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்களிடம் இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு புகார் வந்துள்ளன. பத்தாம் வகுப்புக்கு இன்னும் ரிசல்ட் வெளியிடப்படாத நிலையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று தற்போது பள்ளிக்கல்வித்துறை ஒரு தடை உத்தரவை பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த சூழலில், பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, இந்தக் கல்வியாண்டு முதல், பிளல் 1 பாடத்திட்டத்தில் உள்ள 6 பாடங்களை, 5 பாடங்களாகக் குறைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள 4 முதன்மைப் பாடங்களில் 3 பாடங்களை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி பாடத் தொகுப்பைத் தேர்வு செய்யப் பள்ளிகள் அறிவுறுத்த வேண்டும். இந்த புதிய பாடத்திட்ட முறையை 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், புதிய பாடத் தொகுப்புக்கு உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.