tamilnadu

img

பேராவூரணி பள்ளி மைதானத்தில் இயங்கும் காய்கறிக் கடைகள் இடமாற்றம் செய்யப்படுமா?  

தஞ்சாவூர், மே 21- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி பகுதியில், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு காய்கறிக் கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.  தற்போது 60 நாட்களைக் கடந்த நிலையில், மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, ஓரளவு இயல்பு நிலை திரும்பி உள்ளது. கடைவீதியில் ஜவுளி, தேநீர் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு, அரசு விதிமுறைகளுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில், காய்கறிக்கடைகள் மட்டும் தொடர்ந்து, நகருக்கு வெளியே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலேயே இயங்கி வருகிறது. இதனால் நகரை விட்டு 3 கிமீ தூரம் சென்று காய்கறி வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ள னர். மேலும் அங்கு கழிப்பறைகள் இல்லாததால், பெண் வியாபாரிகள் இயற்கை உபாதைகளை போக்க, வழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.  மேலும், விளையாட்டு மைதானத்தில் காய்கறி வியாபாரிகள் ஆங்காங்கே கொட்டகை அமைப்பதற்காக குழி தோண்டி, மைதானத்தை சேதப்படுத்தி இருப்பதாகவும், காய்கறி கழிவுகள் கொட்டப்படுவதால் மைதானத்தில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், விளையாட்டு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, பள்ளி மைதானத்தில் இருந்து காய்கறிக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தி,  விளையாட்டுத் திடலை சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.