தஞ்சாவூர்,மே12- தஞ்சை அருகே, பூதலூர் தாலுகாகிராமம் ஒன்றில் நிலவி வரும் குடிநீர்தட்டுப்பாட்டின் காரணமாக, தண்ணீர் கொண்டு வர பெண்களும், ஆண் களும் 4 கி.மீ., தூரத்திற்கு சென்றும் வரும் அவல நிலை உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால், பூதலூர் தாலுகா புதுக்குடி, ராயமுண்டான்பட்டி, திருவிழாப்பட்டி என 10க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்சனை அதிகளவில் நிலவி வருகிறது. அத்துடன் ஊராட்சியில் வழங்கப்படும் தண்ணீரும் குடிக்க முடியாத நிலையில் உப்புத் தன்மை அதிகளவில் உள்ளன. இந்நிலையில், ராயமுண்டான் பட்டி அருகேயுள்ள புதுத்தெரு கிராமத்தில், சுமார் 30க்கும் மேற்பட்டகுடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, புங்கனூர் கிராமத்தி லிருந்து காவிரி தண்ணீர் கொண்டு வர கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குழாய்கள் அமைக்கப்பட்டன. அப் போது சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் வந்தன. அதன் பிறகு இதுவரை 10 ஆண்டுகளாக காவிரி தண்ணீர் வரவில்லை. இதனால் குடிநீருக்கு அப்பகுதி மக்கள்மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் குடிநீர் கொண்டு வர 3 கி.மீ., தூர தொலைவில் உள்ள சேளாகம் பட்டிக்கும், 4 கி.மீ., தொலைவில் உள்ள திருச்சி மாவட்டம் திருநெடுங்குளத்திற்கும் டூவீலர், சைக்கிளில் ஆண்கள் தண்ணீர் கொண்டு வரவும், பெண்கள் ராயமுண்டான்பட்டிக்கு 2 கி.மீ., நடந்து சென்றும் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.இதுகுறித்து புதுத்தெரு கிரா மத்தை சேர்ந்த முருகேசன் கூறுகை யில், “எங்கள் பகுதி மேடானது, தண்ணீர் விநியோகிக்க காவிரி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அது பெயரளவில் மேலோட்டமாக பதிக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் வருவதில் சிக்கல் உள்ளன. இதனால் நாங்கள் தினம் காலை 7 மணிக்கு டூவீலர் அல்லது சைக்கிளில் கிளம்பி 4 கி.மீ., தூரத்திற்கு சென்று குடிக்க தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து விட்டு, அதன்பிறகு வேலைக்கு செல்ல வேண்டி நிலை உள்ளது. வயதானவர்களும் சைக்கிளை மிதித்துக் கொண்டு இரண்டு குடங்களில், தண்ணீரை எடுத்து சைக்கிளில் மாட்டிக் கொண்டு வரும் போது மிகவும் சிரமப்பட்டு வருவார்கள்” என்றார்.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பூதலூர் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் கூறுகையில், “இந்த கிராமத்தில் மட்டும் இல்லை, இந்தபகுதிகளில் உள்ள பல கிராமங்களில் இதே நிலை தான். நாங்களும் பல் வேறு போராட்டங்களையும் நடத்தி, அதிகாரிகளிடம் மனுக்களையும் அளித்துவிட்டோம். காவிரி தண்ணீர் வர இதுவரை எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை. மேலும் இப்பகுதியில் பஞ்சாயத்து குழாயில்வரும் தண்ணீர் உப்புத் தன்மை அதிகம் இருப்பதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதற்கு அரசு தீர்வுகாண வேண்டும்” என்றார்.மகமு என்ற பெண் கூறுகை யில், “எங்கள் பகுதியில் இரண்டுகிணறுகள் இருந்தன. 20 ஆண்டு களுக்கு முன்பு அதில் குடிக்க தண்ணீர்எடுத்துள்ளோம். இப்போது பராமரிப்பு இன்றியும், மழை இன்றியும் கிணறு வீணாகி விட்டன. இப்போது தண்ணீ ருக்காக இரண்டிலிருந்து, நான்கு கிலோ மீட்டர் குடங்களை தலையில் சுமந்து கொண்டு குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. எங்கள் கிராமம் தனித் தீவு போல இருப்பதால், அதிகாரிகளும் யாரும் இதுவரை வந்து எங்கள் பிரச்சனைகளை கேட்பது இல்லை. காலையில் தண்ணீர் எடுப்பதே மிகவும் சவாலான விசயமாக அமைந்துள்ளது” என்றார். இப்பகுதியில் நிலவும் குடி தண்ணீர் பிரச்சனையை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதேஇப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது. (ந.நி.)