tamilnadu

img

நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த உ.வாசுகி

தஞ்சாவூர், செப்.28- தஞ்சை பூதலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பெண்களை, அங்கேயே சென்று அனைத்திந்திய மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி கலந்துரையாடினார்.  அப்பொழுது மக்கள் பல்வேறு கோரிக்கைகளை கூறினார்கள். வெள்ளிக்கிழமை அன்று வேலை முடித்துவிட்டு வயதானவர்கள் சில பேர் வெயில் தாங்காமல் அங்கேயே துண்டை விரித்து படுத்து ஓய்வெடுத்து உள்ளனர். அப்போது அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், "போட்டோ எடுத்து வலைதளத்தில் போடுவேன். ஜாப்கார்டை பிடுங்கி விடுவோம்" என மிரட்டியதாக கவலையுடன் தெரிவித்தனர்.  மேலும் 2 கிலோ மீட்டர் தூரம் ரோட்டோரத்தில் உள்ள குப்பைகளை துப்புரவு செய்ய வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்கு மட்டும் எங்களுக்கு பிடிஓ தண்டனை கொடுக்கிறாரே. எங்களுக்கு செய்ய வேண்டியதை அரசாங்கம் செய்யவில்லையே என கவலையுடன் பேசினார்கள். விலையில்லா கோழி தருவதாக அரசு தரப்பில் 30 பேரை தேர்வு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் ரூபாய் 5000 செலவில் கோழி கூடாரம் அமைத்துள்ளனர். பல மாதங்கள் ஆகியும் அரசு பணம் கொடுக்கவில்லை. குடிமனைப் பட்டா கேட்டு பல வருடங்கள் ஆகியும் கிடைக்கவில்லை.  காவிரி குடிநீர் பல தெருக்களுக்கு கிடைக்கவில்லை. குப்பை தொட்டி ஆங்காங்கே வைக்க வேண்டும். மழைநீர் வடிகால் இல்லை. 100 நாள் வேலைக்கு ரூ 229- சம்பளத்தை முழுமையாக கொடுப்பதில்லை. கஜா புயல் பாதிப்பினால் 150 நாள் வேலையை அறிவித்தார்கள். ஆனால் 100 நாள் கூட வேலை கொடுப்பதில்லை. வீட்டிற்கு ஒருவருக்குதான் வேலை என்கிறார்கள். மாதம் ஒரு முறைகூட வேலை இல்லை. வீடு தருகிறோம் என பணம் வாங்கிக் கொண்டு வீடு கொடுக்கவில்லை. சாலைகள் மிகவும் பழுதாக உள்ளது. கட்டிய வீடுகளுக்கும் கழிவறைகளுக்கும் கூட பணம் தரவில்லை என பல்வேறு கோரிக்கைகளை மக்கள் தெரிவித்தனர். அனைத்தையும் கோரிக்கையாக எழுதி முதல் கட்டமாக அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபாவில் முறையிடுங்கள். இதன் பிறகும் கோரிக்கை நிறைவேறவில்லையெனில் போராட்டம் நடத்துவோம்" என மக்களுக்கு உ.வாசுகி ஆறுதல் தெரிவித்தார். இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலாளர் என்.வசந்தா மற்றும் பொருளாளர் வ.அஞ்சலிதேவி ஆகியோர் பங்கேற்றனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் ஒன்றியக்குழு உறுப்பினர் கே.ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.