அரசுக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நிறைவு விழா
தஞ்சாவூர், பிப்.9- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட குழுமம் மற்றும் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கடந்த ஒரு வாரமாக இம்முகாம் நடை பெற்றது. நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனை வர் நா.தனராஜன் தலைமை வகித்தார். பேரா எஸ்.ஜமுனா வர வேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் சி. இராணி, முனைவர் நா.பழனிவேலு ஆகியோர் திட்ட அறிக்கை வாசித்தனர். நிறைவாக பேரா வி.வினோத்குமார் நன்றி கூறினார். இம்முகாமையொட்டி, பள்ளி, கோவில் வளாகத்தை சுத்தம் செய்தல், தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, மரம் வளர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
குறைதீர் முகாம்
தரங்கம்பாடி, பிப்.9- நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் குடிமை பொருள் வழங்கல் குறைதீர் முகாம் மாவட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி தலைமையில் நடை பெற்றது. குடும்ப அட்டைதாரர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் பிரான்சுவா கோரிக்கைகள் பலவற்றை உடனடியாக சரி செய்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியசாமி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், அலு வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: ரத்து செய்ய வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, பிப்.9- தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் தாஸ் தலைமை வகித்தார். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் முதன்மை கல்வி அலு வலர்கள் ஒரே நடைமுறையை கடைபிடிக்க வலியுறுத்தி பிப்ரவரி மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலை வர் நடராஜன், மாநிலப் பொருளாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.