tamilnadu

img

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டாவில் விளைநிலங்களை பாழாக்கி வரும் சோப்பு தொழிற்சாலைகள்.....

தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்டவேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பகுதியில் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் வகையில் கடந்த சில மாதங்களாக சோப்பு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கடியில் உள்ள மீத்தேன், ஹைட்ரோகார்பன் ஆகியவற்றை எடுக்க எண்ணெய் நிறுவனங்கள் முயற்சிமேற்கொண்ட போது, டெல்டா மாவட்டங்களில் இந்த திட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்தினர்.விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் விளைநிலங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு தடைவிதித்தது. மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். இதற்கு டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பெரும் வரவேற்பளித்தனர்.

ஆனால் டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், பூமிக்கடியிலிருந்து கச்சா எண்ணெய்யை எடுக்கும் போது வெளியேறும் கேஸைக் கொண்டும், அதனுடன் சிலிக்கான்
மணலை மூலப்பொருளாக கொண்டு சோடியம்சிலிகேட் என்ற சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை கள் தனியாரால் தொடங்கப்பட்டுள்ளன.தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே தீபாம்பாள்புரத்தில் மட்டும் இரண்டு சோப்பு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு தொழிற்சாலை கடந்த 6 மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்து காற்றில் பரவும் பவுடர், அருகில் உள்ள வயல்களில் படர்ந்து நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களை வளர விடாமல் தடுத்து விவசாயத்தையும், நிலத்தையும் பாதித்து வருகிறது.

இதுகுறித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் கே.பக்கிரிசாமி கூறுகையில், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னர், தஞ்சாவூரில் 1, திருவாரூரில் 4, நாகையில் 8 இடங்களில் சலவை சோப்பு தயாரிக்கும் மூலப்பொருட்களுக்கான தொழிற்சாலைகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளன.ஏற்கெனவே கச்சா எண்ணெய் எடுப்பதால் விவசாய நிலங்கள் பாழ்பட்டு வரும் நிலையில், அதிலிருந்து கிடைக்கும் கேஸைகொண்டு சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படுவதால் விவசாய நிலங்களில் மகசூல் குறைந்து, நிலத்தின் வளம் பாதிக்கப்படுகிறது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்றார்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் கூறுகையில், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்கு விவசாயம் சார்ந்த வேறு எந்த தொழிற்சாலைகளையும் கொண்டு வரக்கூடாது. ஆனால் விவசாயத்தை நேரடியாக பாதிக்கக் கூடிய வகையில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் சோப்பு தொழிற்சாலைகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து தீபாம்பாள்புரம் விவசாயி வெற்றிக்கொண்டான் கூறுகையில், எங்களது ஊரில் எண்ணெய் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கேஸை மூலப்பொருளாக கொண்டு சோப்பு தயாரிக்கும் இரு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதிலிருந்து காற்றில் பரவும் நச்சு கலந்த பவுடர் விளைநிலங்களில் பரவி மகசூல் பாதிக்கிறது. விளைநிலமும் வளம் குறைந்து கொண்டு வருகிறது. வேறு வழியின்றி அதே இடத்தில் விவசாயத்தை மேற்கொள்கிறோம் என்றார்.இதுகுறித்து தனியார் சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தினர் கூறுகையில், பூமிக்கு அடியி லிருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் போது வெளியேறும் கேஸை, குழாய் மூலம் கொண்டு வந்து, சிலிக்கான் மணலோடு கலந்து சோப்பு தயாரிக்கும் மூலப்பொருளான சோடியம் சிலிகேட் தயாரித்து வருகிறோம். தற்போது கொரோனா காலம் என்பதால், சோப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது. எங்களது நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் அத்தியாவசியப் பொருட்களில் இடம் பெற்றுள்ளதால் நாங்கள் தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது நிறுவனங்களிலிருந்து கழிவுப் பொருள்கள் ஏதும் வெளியேறுவதில்லை. பாதுகாப்பாக உற்பத்தி நடைபெறுகிறது என்றனர்.

;