தஞ்சாவூர்,\:
இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் கொழுப்பு மற்றும் சுண்ணாம்பு அடைப்புகளை அதிர்வு அலைகள் மூலம் உடைக்கும் லித்தோட்ரிப்ஸி என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 61 வயது முதியவருக்கு இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சாதனை செய்துள்ளது.
இந்த நவீன முறை இந்தியாவில் மூன்று மாதங்களுக்கு முன்பு அறிமுகமானது. அடைப்புகளை அகற்ற தற்பொழுது பயன்படுத்தப்படும் முறைகளைவிட பாதுகாப்பானதாகவும், எளிமையானதாகவும் உள்ளது. இச்சிகிச்சை குறித்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் பி.கேசவமூர்த்தி, டாக்டர் அ.சீனிவாசன், டாக்டர் பி.சபரிகிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில், “முதுமை உடலின் ஒவ்வொரு உறுப்பையும் மூப்படையச் செய்கிறது. இளமையில் ரத்த நாளங்களில் கொழுப்பு சேருகிறது. நாட்பட நாட்பட அந்த கொழுப்பின் மீது சுண்ணாம்பு படியத்தொடங்குகிறது. சில முதியவர்களுக்கு ரத்த குழாய்கள் சுண்ணாம்புக் கற்களால் ஆன கற்கோட்டைகளை போல் கடினத்தன்மை உடையவையாக மாறி விடுகிறது. இதனால் மாரடைப்பு உட்பட பல இதய கோளாறுகள் ஏற்படுகின்றன.
இவர்களுக்கு பலூன் மூலம் விரிகுழாய் சிகிச்சை அளித்து ஸ்டெண்ட் பொருத்தும் போது இறுகிப்போன படிமங்களை அகற்ற வைரம் தீட்டப்பட்ட உடைப்பு கருவிகள் கடந்த இருபது வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரும்பான்மையானவர்க்கு வெற்றிகரமாக இருந்தாலும். இந்த கருவிகள் செயல்படும் போது ஏற்படும் வெப்பத்தாலும் சிதறும் துகள்களாலும் சிலருக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் சிறுநீரக கற்களை உடைக்க பயன்படுத்தப்படும் லித்தோடிரிப்ஸி தொழில்நுட்பத்தை இதயத்தின் ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை அகற்ற பயன்படுத்த முடியும் என்று சமீபத்தில் நிரூபணமானது. அதிர்வலைகள் கொண்டு உடைக்கும் இன்ட்ராவாஸ்குலர் லித்தோடிரிப்ஸி (Intravascular lithotripsy - சுருக்கமாக ஐ.வி.எல்) நுட்பம் மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகமானது. இந்த நுட்பத்தை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ள ஓரிரு மருத்துவமனைகளில் ஒன்றாக தஞ்சை மீனாட்சி மருத்துவமனை உருவாகியுள்ளது. ஐ.வி.எல் நுட்பத்தைக் கொண்டு ஆண்டப்பன் எனும் 61 வயது முதியவருக்கு இதய குழாய் அடைப்பை எளிதாக நீக்கி ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. இத்தொழில்நுட்பம் மிக எளிதானது எந்தவித பக்கவிளைவும் இல்லாதது, முதியவர்களுக்கு இது ஒரு பெரிய வரமாக அமைந்துள்ளது என்றனர்.