tamilnadu

img

சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல்... 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யாததால் விரக்தி....

தஞ்சாவூர்:
தஞ்சை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லை என குற்றம்சாட்டி சாலையில் நெல்லைக் கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய, 267 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாளென்றுக்கு ஆயிரம்மூட்டை கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கொள்முதல் நிலையங்களில் 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் தென்னங் குடி அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 3 நாட்களாக, நெல் கொள்முதல் செய்யப்படாததால், ஆயிரத்திற்கும் அதிகமான மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், இரவுபகல் முழுவதும் காத்திருந்த விவசாயிகள் விரக்தியடைந்து, திங்கட்கிழமை தஞ்சை – பூதலூர் சாலையில் நெல்லை கொட்டி, தேங்கிய நெல்லை கொள்முதல் செய்ய கோரி மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளப்பெரம்பூர் காவல்துறை ஆய்வாளர் பழனியப்பன், நிலைய கொள்முதல் அதிகாரி சரவணன் ஆகியோர், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், “தேங்கும் மூட்டைகளை அப்புறப்படுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால், மேற்கொண்டு நெல் கொள்முதல் செய்யவில்லை. இதனால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேங்கிய மூட்டைகளை அப்புறப்படுத்திய பிறகு நெல் கொள்முதல் தொடர்ந்து செய்யப்படும்” என்றனர்.