தஞ்சாவூர், செப்.28- தஞ்சை மாவட்டம், அக்னியாறு வடிநிலக் கோட்டத்தில் ரூபாய் 4.28 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் குடிமராமத்து மற்றும் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளது எனப் பொதுப்பணித்துறை அக்னியாறு வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு மற்றும் பேராவூரணி வட்டங்களில் நடைபெற்றுள்ள திட்டப் பணிகளைப் பொதுப்பணித்துறை அலுவலர்கள் செய்தியாளர்களுடன் வியாழக்கிழமை அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஒரத்தநாடு வட்டம், முள்ளுர்பட்டிக்காடு கிராமத்தில் கல்லணைக் கால்வாய் கோட்டத்திற்குட்பட்ட முள்ளேரி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இதே போல பேராவூரணி வட்டம், வலையன்வயல் கிராமத்தில் கல்லணைக் கால்வாய் கோட்டத்திற்குட்பட்ட வலையன்வயல் ஏரி, ரூபாய் 38 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. அப்போது, வலையன்வயல் ஏரியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தண்ணீர் வராததால், மிகவும் சிரமத்திற்கு உள்ளானதாகவும், தற்போது ஏரி புனரமைக்கப்பட்டு, தண்ணீர் முழுக் கொள்ளளவையும் எட்டியுள்ளதால், சுமார் 25 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது" என அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, பேராவூரணி வட்டம், கெங்காதரபுரத்தில் அக்னியாறு வடிநிலக் கோட்டத்திற்குட்பட்ட கெங்காதரபுரம் அணைக் கட்டின் முன்பகுதி தூர்வாரும் பணி மற்றும் வரத்து வாய்க்காலினைச் சிமெண்ட் கற்களைக் கொண்டு புதுப்பிக்கும் பணி ரூ25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுவதையும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், அக்னியாறு வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர் திலீபன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- அக்னியாறு வடிநிலக் கோட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 2.05 கோடி மதிப்பீட்டில் 11 பணிகளும், சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டில் 17 பணிகளும் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் 47.85 கிமீ நீளம் தூர்வாரப்பட்டு, சுமார் 631.13 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது" என்றார். அப்போது, தஞ்சாவூர் மாவட்டச் செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு, உதவி செயற்பொறியாளர்கள் (கல்லணை கால்வாய் கோட்டம்) சண்முகவேலு, அன்பரசன், உதவிப் பொறியாளர்கள் சசிகலா, புஷ்பராணி மற்றும் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) அலுவலர்கள் உடன் இருந்தனர்.