tamilnadu

img

சிபிஎம் மூத்த தோழர்   சர்வேயர் ஆ.ஜெயராமன் காலமானார்

 தஞ்சாவூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சர்வேயர் ஆ.ஜெயராமன் (91)  வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை பட்டுக்கோட்டை கரிக்காடு தனது இல்லத்தில் காலமானார். மறைந்த தோழர் ஆ.ஜெயராமன், தியாகி வாட்டாகுடி இரணியனின் நெருங்கிய உறவினரும் சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் சு.கந்தசாமியின் சகோதரரும் ஆவார். கட்சியின் மீது தீவிர பற்றுடையவர். தனது வாழ்வின் இறுதி நாள் வரையிலும் தீக்கதிரின் தீவிர வாசகராக இருந்தார்.  மறைந்த தோழர் 1950 ஆம் ஆண்டிலேயே கட்சியின் மாணவர் அமைப்பில் இணைந்து செயல்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை பகுதியில் தலைமை சர்வேயராக பணியாற்றி தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். இவரது தந்தையார் ஆறுமுகம், பெரிய தந்தையார் கணேசன் ஆகியோர் 1938 ஆம் ஆண்டுகளிலேயே ஒருங்கிணைந்த கட்சியில் கிளைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றி உள்ளனர். இவர்களது குடும்பத்தினர் பாரம்பரியமாகவே கட்சியில் இருந்து பணியாற்றி வந்துள்ளனர். இவருக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.  அன்னாரது இறுதி நிகழ்வு வியாழக்கிழமை கரிக்காடு இல்லத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சி.பழனிவேலு, ஆர்.மனோகரன், கே.பக்கிரி சாமி, எஸ்.தமிழ்ச்செல்வி, மற்றும் மெரினா ஆறுமுகம், ஏ.கோவிந்தசாமி, முருக.சரவணன், மோரீஸ் அண்ணாதுரை மற்றும் அனைத்து கட்சியினர், வர்த்தக பிரமுகர்கள், கிராமத்தி னர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

;