tamilnadu

img

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராமசபைக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றம்...

தஞ்சாவூர்:
விவசாயிகளுக்கு விரோதமான வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தமிழக அதிமுக அரசு, அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளன்று நடைபெறுகின்ற கிராமசபை கூட்டங்களை ரத்து செய்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதை தடுக்கவே மேற்கொண்டுள்ள இந்த செயலை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.

தமிழக அரசு கிராம சபை கூட்டங்களை ரத்து செய்த நிலையிலும் பல இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ஊராட்சியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆம்பூர் அடுத்த அரங்கள்தூர்கம் கிராமத்திலும் இராமநாதபுரம் மாவட்டம், மருதநல்லூர் கிராமத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கமுதி கிராம சபை கூட்டம் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூர் ஊராட்சி அலுவலகம் முன்பு தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரம் அருகே சுந்தரிபாளையம் கிராமத்திலும்  ராணிப்பேட்டை மாவட்டம், மோட்டூர் மற்றும் வன்னிவேடு கிராமங்களில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி அருகே கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தஞ்சையில் 50 கிராமங்களில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்திலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.