tamilnadu

img

சிறுவனாய் காணாமல் போய் இளைஞராய்  31 ஆண்டுக்கு பின் தாயை கண்டடைந்த நபர்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, ஒக்கநாடு மேலையூர் கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் நாகமுத்து- வளர்மதி தம்பதி. இவர்களின் மூத்த மகன் வெற்றிச்செல்வன் இவர் கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 6 வயதில் வீட்டை விட்டு திடீரென காணாமல் போய் விட்டார். காணாமல் போன தங்கள் மகனை, பெற்றோர்கள் பல இடங்களில் தேடி அலைந்தனர். முடிவாக வெற்றிச்செல்வன் இறந்திருக்கலாம் என்று பெற்றோர்கள் நினைத்திருந்தனர்.  இந்நிலையில் நாகமுத்துவும் இறந்துவிட்டார். இதனால் வளர்மதி தன் மற்ற குழந்தைகளோடு அவரது உறவினர் பிச்சைமுத்து என்பவரின் இல்லத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். கூலி வேலை செய்து வாழ்ந்து வந்த வளர்மதிக்கு திடீரென ஒரு கடிதம் வந்தது. அதில் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வெற்றிச்செல்வன் தனது தாய் தந்தையரை பார்க்க விரும்புவதாகவும், விசாரித்து உடனே ஏற்பாடு செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி தலைவர் மகாலிங்கம் மற்றும் சென்னை வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் சென்னை சென்று வெற்றி செல்வனை மீட்டு அழைத்து வந்தனர். 31 ஆண்டுகள் சமையல் வேலை செய்து வந்த வெற்றிச்செல்வன் சென்னை கொளத்தூர் சிவசக்தி நகரிலுள்ள சகாயமேரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். 31 ஆண்டுகளுக்குப் பின்பு தனது மகன் கிடைத்த ஆனந்த கண்ணீரில் வளர்மதி கதறி அழுதார். மேலும் தனது தந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் கண்ணீர் விட்டார்.