தஞ்சாவூர், ஜூலை 20- தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாமந்தன் குளம், அய்யன் குளம், சிவகங்கை குளம் ஆகிய 3 குளங்கள் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தலைமையில் பணியாளர்கள் கடந்த வாரம் 15,000 சதுர அடி உடைய நாகை குட்டை குளத்தை சீரமைத்தனர். அதனை தொடர்ந்து ஆடக்கார தெருவில் மனோன்மணி நகரில் 500 ஆண்டு பழமையான குளம் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகளில் சிக்கி பயன்பாடற்ற நிலையில் இருந்தது. இதையடுத்து சனிக்கிழமை காலை அதிகாரிகள் ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு 18,000 சதுர அடி கொண்ட குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். இக்குளத்தை தூர்வாரும் நிலையில், இதில் 2.85 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். மேலும், தஞ்சையில் உள்ள அனைத்து குளங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும், பொது மக்கள் பங்களிப்புடனும் தூர்வாரப்படும். மழை காலத்திற்கு முன்ன தாகவே மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்டு புனரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.