tamilnadu

img

கிபி 11-ஆம் நூற்றாண்டு  புத்தர் சிலை கண்டுபிடிப்பு

 தஞ்சாவூர், ஆக.27–  அரியலுார் அருகே கி.பி.,11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உதவி பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பா.ஜம்புலிங்கம், இவர் சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பிள்ளைபா ளையம் கிராமத்தில், ஆய்வாளர்கள் ம.செல்வபாண்டியன், க.ரவிக்குமார் ஆகியோர் மூவரும் மேற்கொண்ட களப்பணியில் புத்தர் சிலையை கண்டு பிடித்துள்ளனர். இதுகுறித்து பா.ஜம்புலிங்கம் கூறியதாவது: பிள்ளைபாளையம் கிராமத்தில், அதிகம் சிதைந்த நிலையிலான புத்தர் சிலையினைக் காண முடிந்தது. கிராமத்து நடுவில் உள்ள பெரிய அரசமரத்தின் கீழ் இரு விநாயகர் சிலைகளுடன், இந்த புத்தர் சிலையினையும் மக்கள் வழிபடுகின்றார்கள்.  இடுப்புப்பகுதி வரை மட்டுமே உள்ள, 97 செ.மீ., உயரமுள்ள இச்சிலையினை 15 ஆண்டுகளுக்கு முன்னர் அண்மையில் உள்ள பாண்டியன் ஏரிக்குக் கரை கட்டும் போது கண்டதாகவும், அதனை தற்போது வழிபட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர். சுருள் முடியுடன் கூடிய தலையின் மேல் தீச்சுடர், சற்றே மூடிய கண்கள், மார்பில் ஆடை, நீண்டு வளர்ந்த காதுகள், பரந்த மார்புடன் உள்ள இச்சிலை இடுப்புப்பகுதி வரை மட்டுமே காணப்படுகிறது.  வலதுகை முற்றிலும், இடதுகை பாதிக்கு மேலும் உடைந்த நிலையிலும், தீச்சுடர், மூக்கு, உதடுகள் சிதைந்த நிலையிலும் உள்ளன. சிதைந்த நிலையிலும் இச்சிலையினை உள்ளூர் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.  கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்ற களப் பணியின் போது அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், கீழக்கொளத்துார், குழுமூர், சுத்தமல்லி, முத்துசேர்வைமடம், பெரிய திருக்கோணம், ராயம்புரம், விக்ரமங்கலம் ஆகிய இடங்களில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள புத்தர் சிலைகளைக் காண முடிந்தது. அவ்வகையில் இதன் அமைப்பினை நோக்கும்போது இதுவும் அமர்ந்த நிலையிலான சிலை என்பதை உறுதி செய்ய முடிகிறது. இது கி.பி.10-11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். சோழ நாட்டில் உள்ள புத்தர் சிலைகளைப் போலவே இச்சிலை உள்ளது. சோழ நாட்டில் பௌத்தம் தழைத்து வளர்ந்திருந்ததை உணர்த்தும் சான்றாக இந்த புத்தர் சிலை உள்ளது" என்றார்.