பிறந்தது மராத்திய மண். வாழ்ந்தது கர்நாடக மாநிலம். கலை இலக்கிய ஈடுபாட்டால் புகழ்பெற்றது இந்தியா முழுவதும். மறைவுச் செய்தி அறிந்து வருந்துகிற உள்ளங்கள் உலகம் முழுவதும். அவர் நாடக ஆக்குநர், திரைப்பட நடிகர், எழுத்தாளர் கிரிஷ் கர்நாட். 81 வயதில் உடலின் பல்வேறு உறுப்பு கள் செயலிழப்பால் திங்களன்று (ஜூன் 10) காலையில் மரணமடைந்தார் அவர். ஆனால் பன்முகச் செயல்பாடுகள், அக்கறைகள், வெளிப்பாடுகள் மூலம் அவருக்குக் கிடைத்த அடையாளங்கள் மரணமில்லாதவை. 1938ல் அவர் பிறந்தது மகாராஷ்டிரா மாநிலத்தின் மாத்தேரென். பின்னர் வளர்ந்தது கர்நாடக மாநிலத்தின் சிர்சி, தர்வாத் பகுதிகள். இந்தக் கிராமங்களில் வளர்ந்த சிறுவயது நாட்களில் பாரம்பரியக் கூத்துகளையும், ஊர்விட்டு ஊர் செல்லும் நாடகக் குழுக்களின் தயாரிப்பு களையும் பார்த்து, மக்கள் முன் நேரடியாக நடித்துக் கதைகளைக் கூறுகிற நாடகங்கள் மீதும், நாடகக் கலைஞர்கள் மீதும் அவருக்கு ஒரு காதல் ஏற்பட்டது. அந்த காதல் பின்னர் அவரையே நாடக படைப்பாளியாக பரிண மிக்கச் செய்தது.
“கொங்கணியைத் தாய்மொழியாகக் கொண்ட அவர் கன்னடத்தில் ஆழ்ந்த புலமை பெற்றதோடு, சிறந்த நாடகங்களையும் நாவல்களையும் அந்த மொழியில் வழங்கி னார். அந்த நாடகங்கள் கர்நாடகத்தோடு நின்று விடாமல் இந்தியாவின் பல மொழிகளிலும் மறுபிறப்புப் பெற்றன. நவீன நாடகத்தின் புதிய எல்லைகளை அவருடைய படைப்புகள் உரு வாக்கின. ‘யயாதி’ என்ற அவருடைய முதல் நாடகமே (1961) ஒரு புதிய நாடக அலையை ஏற்படுத்தியது” என்று கூறுகிறார் தமிழின் முற்போக்கு நாடக அரங்கில் முன்னணிப் பாத்திரம் வகிப்பவரான பிரளயன். தொன்மங் களையும் வரலாற்றுப் பதிவுகளையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தும் ‘துக்ளக்’ என்ற நாடகத்தை 1964ல் தந்தார் கர்நாட். அதைத்தான் பின்னர் தமிழில் ‘முகமது பின் துக்ளக்’ என்று கொச்சையான வடிவில் கொடுத்தார் சோ. 1971ல் அவர் படைத்த ‘ஹயவதனா’ இருத்தலியல் தொடர்பான கேள்விகளை முன்வைத்த மிக முக்கியமான நாடகம் என்று சுட்டிக்காட்டுகிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரு மான பிரளயன். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு, பன்முகப் பண்பாட்டுக்கு எதிரான வெறுப்பு இவற்றைக் கேள்விக்கு உள்ளாக்குகிற ‘ஜலகண்டர்’ என்ற நாடகத்தை கர்நாட் உருவாக்கியதை நினைவுகூர்கிறார் பிரளயன். இந்தியச் சமுதாயத்தில் ஊறிப் போன சாதிய மேலாதிக்கம், எதிர்க்கேள்வி களை எழுப்பிய பசவண்ணா கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம் அது. இவ்வாறு நாடகங்களில் அழுத்தமான சாதனைகளை நிகழ்த்திய அவர், திரைப் படத்திலும் கால் பதித்தார். நாடகத்தைப் போலவே சினிமாவிலும் புதிய மாற்றங் களுக்கு அவருடைய திரைக்கதைகள் இட்டுச் சென்றன. நவ யதார்த்த சினிமா என்ற புதிய திரைக்கலைப் போக்கு இந்தியாவில் தழைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.
கன்னடத்தின் மிக முக்கிய முற்போக்குப் படைப்பாளியான யு.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய ‘சமஸ்காரா’ நாடகத்திற்கு மிகச் சிறப்பான திரைக்கதை வடிவம் கொடுத்தார் கர்நாட். அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்தி ரத்தில் நடிக்கவும் செய்தார். ஷியாம் பெனகல் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகளோடு இணைந்து செயல்பட்டவர் அவர். பின்னர் இந்தித் திரையுலகிற்குச் சென்று ‘உத்ஸவ்’ என்ற திரை ரசிகர்களால் என்றென்றும் போற்றப்படுகிற படத்தை இயக்கினார். வங்காளம், தமிழ் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் ஷங்கர் இயக்கிய ‘காதலன்’ என்ற படத்தில் கதாநாயகியின் தந்தையாக வில்லன் ஆளுநராக நடித்தது பலருக்கும் நினைவிருக்கும். அப்படிப்பட்ட வணிகம் சார்ந்த திரைப்படங்களில் நடிப்பதற்கு அவர் தயங்கியதில்லை. அதன் மூலம் கிடைக்கிற வருவாயிலிருந்து மாற்று சினிமாக்களுக்கும் நாடக ஆக்கங்களுக்கும் இலக்கிய முயற்சிகளுக்கும் செலவிட முடிகிறதே என்று கருதினார் அவர்.
“கர்நாடக நாட்டுப்புற வகையைச் சேர்ந்த கதைகளை அடிப்படையாகக் கொண்டு, பழைய உலகத்திலிருந்து புதிய உலகத்திற் கான படிம வடிவிலான நாடகங்களைப் படைத்தவர் கிரிஷ் கர்நாட். மரபு சார்ந்த கதைகளைத் தேர்வு செய்து, இன்றைய நவீன மாற்றங்களுக்கான கண்ணோட்டங்களுக்கு ஏற்ற நாடகங்களாக உருவாக்கிக் கொடுத்த வர்,” என்று அவரது நாடகப் பங்களிப்பு பற்றியே முதலில் குறிப்பிடுகிறார் சாகித்ய அகாடமி விருதாளரான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். தமிழ் உள்ளிட்ட வெவ்வேறு மொழிகளில் நடித்தது மட்டுமல்ல, அந்த மொழிகளில் இலக்கியவாதிகள், கலைஞர்களோடு நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார் கர்நாட். அவர்களின் மூலமாக அந்த மொழி களில் கலை, இலக்கியங்கள் பற்றிய அறிவையும் ஈடுபாட்டோடு வளர்த்துக்கொண் டார். இதைக் குறிப்பிட்ட எஸ்ரா, தனக்கும் அவ ருக்கும் இருந்த நட்புறவைப் பெருமிதத் தோடு குறிப்பிட்டார். “ஒரு முறை மாற்று நாடகங்கள் பற்றி பேச்சு வந்தது. தமிழகத்தில் அத்தகைய நாடகங்கள் பெருமளவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய அளவிலான பார்வையாளர்கள் முன் நிகழ்த்தப்படுபவை யாகவே இருக்கின்றன என்று கூறியபோது, ஒரு கனத்த மனதோடு அதைக் கேட்டுக் கொண்டார் கர்நாட். ஏனென்றால், கர்நாட கத்தில் மட்டுமல்லாமல் மும்பை போன்ற நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் முன் அவருடைய நாடகங்கள் நடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. தமிழகத்தில் நாடக மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற தன் மனமார்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தி னார்,” என்று எஸ்ரா தெரிவித்தார். கிரிஷ் கர்நாட் பற்றி நினைவுகூரும் எல்லோருமே, அவர் மதவெறிக்கு எதிராக வும், கருத்துரிமைக்கு ஆதரவாகவும் வெளிப் படையாகக் களமிறங்கினார் என்ற தக வலைத் தவறாமல் குறிப்பிடுகிறார்கள். “நாடகம், சினிமா, எழுத்துபண்பாடு சார்ந்த பிரச்சனைகள் கர்நாடகத்தில் எழுந்தபோ பதெல்லாம் கர்நாட் தயக்கமே இல்லாமல் தன் குரலை ஒலித்துவந்திருக்கிறார். கல்புர்கி கொலை செய்யப்பட்டபோது தெருவில் இறங்கி நீதி கேட்டு கவுரி லங்கேஷ் போராடியபோது, அவேசத்தோடு அதில் பங்கேற்றார். பின்னர் கவுரி லங்கேஷ் குரல் துப்பாக்கியால் ஒடுக்கப்பட்டபோது, எந்த அளவுக்குக் கலங்கி நின்றாரோ, அதே அளவுக்குக் கண்டன இயக்கத்திற்கும் அணி திரட்டினார் கிரிஷ் கர்நாட்,” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் எஸ்ரா.
மால்குடி டேய்ஸ் உள்ளிட்ட சில தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்த கர்நாட், நாடகங்களின் வழியாக இலக்கிய உலகில் பயணித்து அதற்கான அங்கீகாரங்களையும் பெற்றார். இலக்கியத்திற்கான ஞானபீட விருது, நாடகத்திற்கான சங்கீத நாடக அகாடமி விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் அவரைத் தேடி வந்து, அவருடைய வாசகர்களையும் பார்வையாளர்களையும் பெருமைகொள்ளச் செய்தன. இந்திய திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி நிறுவன இயக்குநர், சங்கீத நாடக அகாடமி தலைவர், லண்டனில் உள்ள நேரு மைய இயக்குநர் போன்ற பொறுப்புகளிலும் திறம்படச் செயலாற்றியவர் கர்நாட்.
2017ல் சல்மான் கான் இயக்கிய ‘டைகர் ஜிந்தா ஹை’ என்ற திரைப்படம்தான் அவர் கடைசியாக நடித்தது. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்தப் படத்தின் முதல் பாகமாக 2012ல் வந்த படத்திலும் கர்நாட் நடித்திருந்தார். இவ்வாறு இலக்கியம், நாடகம், திரைப்படம், அரசியல், சமுதாயம் என இயங்கிக்கொண்டே இருந்தவரை ஓய்வெடுக்க வைத்தது வயது சார்ந்த உடல்நலச் சிக்கல்கள்தான். அவரது மறை வையொட்டி கர்நாடக மாநில அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கும் வகையில் திங்க ளன்று விடுமுறை அறிவித்தது. ஆயினும் அரசுமுறைப்படி இறுதி நிகழ்ச்சிகள் வேண்டாம் என்ற அவரது விருப்பத்தைக் குடும்பத்தினர் வலியுறுத்தியதால் அவரது குடும்பத்தினரும் கலை இலக்கிய நண்பர் களும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர். மாற்றங்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக்கொள்கிற கலை இலக்கியப் படைப்பாளிகளுக்கும் சமூகச் செயல்பாட்டா ளர்களுக்கும் தனது படைப்புகளின் வாயிலாக மட்டுமல்லாமல், தனது வெற்றிகளின் மூலமாகவும் நம்பிக்கை அளித்துக்கொண்டே இருப்பார் கிரிஷ் கர்நாட்.
- அ. குமரேசன்