tamilnadu

img

சீறிப்பாயும் இளம் சிங்கம்! - சி.ஸ்ரீராமுலு

உலகிலேயே மிகப்பெரிய டென்னிஸ் அரங்கம். சுமார் 60,000 பேர் அமர்ந்திருக்கிறார்கள். முதன் முறையாக உள்ளே புகுந்த அந்த இளம் காளைக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. மறுபுறம் அரங்கமே அதிருகிறது. சந்தோசத்தில் பயமறியாத அந்த ‘இளம் கன்று’ சூறாவளியாய் சுழன்றடித்தது. மீண்டும் ஒருமுறை அரங்கம் அதிர்ந்தது.

சரவெடி...

கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்திற்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் உலக தரவரிசையில் 190-வது இடத்தில் இருந்த இந்திய இளம் வீரர் சுமித் நாகல் களம் இறங்கினார். எதிரில் நின்றவர் சாதாரண வீரர் அல்ல. உலகின் முன்னணி வீரரும் மூன்றாம் நிலை ஆட்டக்காரருமான ரோஜர் ஃபெடரர் என்பதால் வீறு கொண்டு எழுந்த இந்திய இளம் சிங்கம் சீறிப்பாய்ந்தது. சிறப்பான சர்வீஸ் மற்றும் எதிராட்டத்தால் முதல் செட்டை கைப்பற்றி சரித்திரம் படைத்தது. அது புது அனுபவமும்கூட. உலகின் முன்னணி ஆட்டக்காரரும் மூன்றாம் நிலை வீரருமான ரோஜர் பெடரர் தனக்கு இப்படி ஒரு கதி ஏற்படும் என்று ஒரு போதும் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்.

திக். திக்..திக்...

பிறகு என்ன? ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தனது முழு திறமையையும் அனுபவத்தையும் பயன்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார் பெடரர். வீறுகொண்டு இருந்ததால் இறுதி வெற்றி என்னவோ பெடரருக்குதான். இந்த வெற்றியை அவரால் சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை. ஏன் எனில்? நாகலுக்கு கிடைத்தது தோல்வி என்றாலும் விளையாட்டு உலகில் இன்னும் பல ஆண்டுகள் பேசும் ஆட்டமாகும்.

எழுச்சி...

கடந்த மாதம் இறுதி வாரத்தில் அர்ஜென்டினா நாட்டில் நடந்த ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில், துவக்க சுற்றில் இருந்து அதிரடியாக விளையாடி வெற்றிகளை குவித்தார். இறுதி ஆட்டத்தில் உள்ளூர் ஆட்டக்காரர் பாகுன்டோ பாக்னிஸ்சை செப்டம்பர் 30 ஆம் தேதி சொந்த மண்ணில் சந்தித்தார். 1 மணி நேரம் 45 நிமிடத்திற்கு ஆட்டம் நீடித்தாலும் மிக எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் கோப்பையையும் வென்றார். இதன்மூலம் உலக தரவரிசை பட்டியலில் 26 இடங்கள் முன்னேறி 135 ஆவது இடத்தை பிடித்திருக்கிறார். சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் டாப் 100 வரிசையை எட்டி இருப்பதன் மூலம் எந்த இலக்கையும் எட்ட முடியும் என்ற நம்பிக்கையும் கிடைத்திருக்கிறது.

இது அவருக்கு இரண்டாவது ஏடிபி பட்டமாகும். 2017இல் பெங்களூரில் நடந்த போட்டியில் முதல் முறையாக பட்டம் வென்றார். 2015ஆம் ஆண்டு நடந்த இளையோர் விம்பிள்டன் சாம்பியன் தொடரில் உலகின் பார்வையை தன் பக்கம் திரும்பிப் பார்க்க செய்தார்.  வியட்நாம் வீரருடன் இணைந்து இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 2016 ஆம் ஆண்டில் ஸ்பெயின் அணிக்கு எதிராக டேவிஸ் கோப்பையில் சீனியர் பிரிவில் முதன்முதலாக அறிமுகமாகி, அடுத்த ஆண்டில் பெங்களூர் ஓபனில் யூகி பாம்ப்ரி உள்ளிட்ட முன்னணி வீரர்களை சாய்த்து பட்டத்தை வென்று இந்திய டென்னிஸ் அரங்கில் தனக்கான இடத்தை நிலைநிறுத்திக் கொண்டார்.

துர்க்மெனிஸ்தான் நாட்டில் நடந்த ஆசிய உள்ளரங்கு  தற்காப்புக் கலை விளையாட்டில் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கத்தை தட்டினார். ஜூனியர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது சக நண்பரான அனுமன் தீப் சிங், ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து விளையாடினார். இறுதி ஆட்டத்தில் தங்கத்தை கோட்டை விட்டாலும் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

ஏணிப் படி...

சிறு வயதில் கிரிக்கெட் விளையாட வேண்டுமென்று ஆசைப்பட்ட  மகனை 7 வயதில் டென்னிஸ் பக்கம் திருப்பியதால் அதிலேயே மூழ்கிய சுமித் நகல், அரியானா மாநிலம் ஜெயித்பூர் கிராமத்தில் 1997 ஆம் ஆண்டு பிறந்தவர், டென்னிஸ் உலகில் எடுத்த உடனேயே நேரடியாக களத்தில் குதிக்கவில்லை. தடைகள் பல தாண்டி தான் வர வேண்டியிருந்தது. டென்னிஸ் விளையாடும் சிறுவர்களை தேர்வு செய்த மகேஷ் பூபதியின் நேர்காணலில் தேர்வாகி பெங்களூர் சென்று 2 வருடம் பயிற்சியை முடித்து சொந்த ஊர் திரும்பினாலும் தொடர்ந்து விளையாட முடியவில்லை. ஆசிரியரான இவரது தந்தை சுரேஷின் குறைந்த வருமானத்தை வைத்து கொண்டு தாய் கிருஷ்ணதேவி குடும்பத்தை நடத்தியதால் நிதி நெருக்கடி அதிகமானது. அந்த நிலைமையை அறிந்த மகேஷ் பூபதியிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்துள்ளது. பயணப்படி முதல் அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுக் கொண்டு திரும்பவும் பெங்களூர் அழைத்து சென்றுள்ளார். அப்போது வயது 11. அங்கிருந்து கனடா, ஜெர்மனி என வெளிநாடுகளுக்கும் சென்று இரண்டு ஆண்டு காலம் பயிற்சி எடுக்க உதவியிருக்கிறார்.

டென்னிஸ் விளையாட்டில் கால் பதித்தபோது ஆரம்பத்தில் நிறைய தொடர்களில் பங்கேற்க முடியவில்லை. காரணம் பெரும் பொருளாதார நெருக்கடியாகும். ஒருவரும் ஸ்பான்சர் செய்ய முன்வரவில்லை. தில்லியில் உள்ள ‘விராட் கோலி பவுண்டேஷன்’ சிறிது நிதி உதவி செய்திருக்கிறது. பிறகு தந்தையின் சொந்த செலவிலேயே வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

போராடும் குணம்...

தனது 19 வது வயதில் அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பை இந்திய அணியில் இடம்பிடித்த சுமித் நகல், ஒழுக்கக்கேடு பிரச்சனை காரணமாக கழற்றி விடப்பட்டார். ஆனால் அது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு, தன் மீது வேண்டுமென்றே பழி சுமத்தப்படுகிறது என்று ஆவேசப்பட்டார். சில ஆண்டுகள் ஒதுங்கி இருந்த அந்த இளம் வீரர் தான் இன்றைய தினம் அனைவராலும் பேசப்படும் டென்னிஸ் வீரராகவும் உலகம் முழுவதும் விளையாட்டு துறையால் பேசப்படும் நபராகவும் மாறியிருக்கிறார். பலராலும் அசைக்க முடியாத டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரையே ஆட்டம் காண வைத்ததும்  ஏடிபி சேலஞ்சர் தொடரில் பட்டம் வென்றதும் சுமித் நாகலின் போராடும் குணத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.