சேலம், மே. 5 - சேலம் மாவட்டம் கூடக்கல், இருப்பாளி ஆகிய நீரேற்றும் இடங்களில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த இளம்பிள்ளை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, இடங்கணசாலை, வீரபாண்டி, மகுடஞ்சாவடி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கூடக்கல் மற்றும் இருப்பாளி கூட்டுக் குடிநீர் திட்ட தலைமையிடத்தில் இருந்து பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நீரேற்றும் பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறுவதாலும், ஆற்றின் நீர்மட்டம் அளவு குறைந்துள்ளதாலும் கூடக்கல், இருப்பாளி தலைமையிடத்தில் இருந்து பம்பிங் செய்யும் குடிநீரின் அளவு குறைவாகவே வந்தவண்ணம் உள்ளது. ஆகவே, இக்காரணங்களால் மே 3- ம்தேதி முதல் வருகிற மே 21- ம் தேதி வரை 19 நாட்களுக்கு குடிநீர் குறைந்த அளவிலேயே வழங்கப்பட உள்ளதால் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்துமாறு இடங்கணசாலை மற்றும் இளம்பிள்ளை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.