tamilnadu

img

ஆவின் நிறுவனத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முறைகேடு... உரிய நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் எஸ். எம். நாசர் பேட்டி

சேலம்:
 முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் பணி நியமனஆணை உள்ளிட்டு பல்வேறு வகைகளில் ஊழல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

குறிப்பாக தீபாவளி காலத்தில் அவருடைய இல்லத்திற்கு ஆவின் நிறுவனத்தில் இருந்து ஒன்றை டன் இனிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக அவர் எந்த பணமும் செலுத்தவில்லை. அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சர் எஸ். எம். நாசர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.சேலம் மாவட்டம் ஆவின் தலைமையகத்தில் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது பேசியஅவர் சேலம் சித்தனூர் தளவாய் பட்டியில் உள்ள சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 770 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினசரி சராசரியாக 5 லட்சத்து 28 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருவதாகவும், ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 59 தொகுப்பு பால் நிறுவனங்கள் இயங்கிவருவதாகவும் தெரிவித்தார். தமிழக அரசு உத்தரவின்படி பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது இதனால் கூடுதலாக தற்போது ஒரு லட்சத்து 86 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது எனவும், குறிப்பாக 234 பணியிடங்கள் இளநிலை நிலையில் தவறான முறையில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது எனவும்  தெரிவித்தார்.

இதேபோல் 460 பேர் மற்றும் அதிகாரிகள் நிலையில் 174 பேர் தவறான முறையில் பணி நியமனம்செய்யப்பட்டுள்ளனர்;  இடைத்தர கர்கள் உதவியுடன் இந்த பணி நியமனம் நடந்துள்ளது அவர்களுக்கு பணி நியமனம் ரத்து செய்யப்பட்டு புதிய அழைப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.ஆவின் நிறுவனத்தில் தொடர்ச்சியாக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பலர் ஆவின் கொள்முதல் நிலையங்களில் பால் கொள்முதல் செய்ய முன்வந்துள்ளனர். அவர்களின் பாலை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டேங்கர் லாரி வாடகை பிரச்சனை சரி செய்து ஆவின் பொருட்கள்சீராக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு பால் வழங்க தமிழக முதல்வர் ஆலோசித்து வருகிறார் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். ஆவின் நிலையங்களில் ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருட்கள் மட்டும் விற்பனை செய்ய வேண்டுமெனவும் மற்ற பொருட்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.  ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி இறந்த 48 பேரின் வாரிசுகளுக்கு வாரிசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழக பால்வளத்துறை நிர்வாக மேலாளர் கந்தசாமி ஐஏஎஸ், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ஆவின் பொது மேலாளர் நிர்மலாதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;