tamilnadu

பொன்விழா கொண்டாடும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.... கட்டுரைகள் வரவேற்பு

சென்னை:
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் வெளிவர விருக்கும் சிறப்பு கட்டுரைத் தொகுப்பிற்கு தமிழறிஞர்கள், தமிழாய்வாளர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் 1968ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது பேரறிஞர் அண்ணாவின் பெருவிழைவால் பிரெஞ்சு மொழிக்கென்று உயராய்வு நிறுவனம் செயல்படுவதைப் போன்று தமிழுக்கென்று ஓர் உயராய்வு நிறுவனம் சென்னையில் தொடங்கப்பெற வேண்டும் என்ற விழுமிய எண்ணத்தின் விளைவாக 1970ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

இந்நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்ததை சிறப்பிக்கும் வகையில் 1997ஆம் ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடிய அவ்வமயம் வெள்ளி விழா நினைவுகளை என்றும் நினைவில் கொள்ளும் வகையில் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய வெள்ளிவிழா மலரை வெளியிட்டுள்ளது.50ஆம் ஆண்டான பொன்விழா ஆண்டில் (1970-2020) அடியெடுத்து வைத்துள்ளது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். வெள்ளி விழாவைக் கடந்து பொன்விழாவைக் கண்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் பொன்விழா கட்டுரைத் தொகுப்பினை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கட்டுரைகள் உலகத் தமிழர்களிடையே வரவேற்கப்படுகின்றன.

மொழி, இனம், மருத்துவம் தொன்மம், தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழ் வரலாறு என பன்முக ஆய்வுத் தளங்களிலும் இக்கால இலக்கியங்கள் பொருண்மைகளிலும் அமையலாம்.கட்டுரை தமிழிலும் அல்லது ஆங்கிலத்திலும் எழுதப்படலாம். தமிழில் அமையும் கட்டுரை ஒருங்குறி எழுத்துருவிலும். ஆங்கிலக் கட்டுரை எழுத்துருவிலும் அமைதல் வேண்டும்.கட்டுரை ஏ4 அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கட்டுரை நிறுவனத்திற்கு வந்து சேரவேண்டிய இறுதி நாள் 15.10.2020, மாலை 5.30 மணி வரை என வரையறுக்கப்பட்டுள்ளது.கட்டுரைகளை iitsgj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கட்டுரைகள் நிறுவனம் வெளியிடும் “பொன்விழா ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்” என்ற சிறப்பு கட்டுரைத் தொகுப்பில் இடம்பெறும்.மேலும், விவரங்களுக்கு இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113,தொலைபேசி - 044-22542992, 22542781 தொடர்புக் கொள்ளலாம்” என அந்த அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.