tamilnadu

img

சுகாதார நிலையம் திறக்கப்படுமா?

கிருஷ்ணகிரி, ஜூலை 31- கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி அருகில்  பிச்ச கொண்ட பெத்தனப்பள்ளியில் 15 ஆண்டுகளுக்கு  முன் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இங்கு  ஜீனூர், சிக்காரிமேடு, கொல்லப்பட்டி, போலுப்பள்ளி, வசந்தப்பள்ளி, புளியரசி, சென்றாயகவுண்டனூர், கரிக்கல்நத்தம், சோமநாதபுரம், கங்கசந்திரம் ஆகிய  கிராம மக்கள் மருத்துவம் பார்த்து வந்தனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வரை வாரத்தில் ஒரு  சில நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டன. இதை தினசரி  திறக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் பல முறை மனு அளித்தனர். ஆனால்  தினசரி இயங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  அந்த சுகாதார மையம்  மூடப்பட்டது. இதனால் கிராம  மக்கள் 6 கி.மீ பயணம் செய்து குந்தாரப்பள்ளி, குரு பரதப் பள்ளி, அல்லது 8 கி.மீ தூரமுள்ள கிருஷ்ண கிரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே சுகாதார மையத்தை சீரமைத்து தினசரி  திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.