tamilnadu

img

அரசு தாமதித்தால் நீதிமன்றமே மெரினாவிற்கு மக்கள் செல்ல அனுமதி வழங்கும் -உயர்நீதிமன்றம் கேள்வி

அரசு தாமதிக்கும் பட்சத்தில் நீதிமன்றமே மெரினாவிற்கு மக்கள் செல்ல அனுமதி வழங்கும் என சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. 
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது .இதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரைக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. தற்போது மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்துள்ளன.  இருப்பினும் தற்போதுவரை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கான தடை நீக்கப்படவில்லை. தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், தியேட்டர்களை திறப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. அது போல் கொரோனா  கட்டுப்பாடுகளுடன் மெரினா கடற்கரையையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது தொடர்பான பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நவம்பர் இறுதி வரை மெரினா கடற்கரை திறக்கப்படாது என சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.  இதை தொடர்ந்து, தமிழகத்தில் தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு  இடங்களும் திறக்கப்பட்டு விட்ட நிலையில் கடற்கரையை திறக்க தாமதம் காட்டுவது ஏன்? என்றும் அதில் என்ன சிரமம்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடாவிட்டால், நீதிமன்றமே மக்களுக்கு அனுமதி வழங்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.