சென்னை:
அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையையும், கொரோனா கொள்முதல்கள் குறித்து தனியாக ஒரு வெள்ளை அறிக்கையையும் முதல் வர் பழனிசாமி வெளியிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கொரோனாவின் கொடூரமான பிடியில் சிக்கி, தொழில் முதலீடுகள் இன்றியும், வருமானத்தை இழந்தும், வேலைவாய்ப்புகள் இல்லாமலும் தடுமாறி, தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக, ‘தமிழக அரசு எடுத்த முயற்சிகளால் தமிழகம், நாட்டின் முக்கிய முதலீட்டு மையங்களில் ஒன்றாக மாறியுள்ளது’ என்று முதல்வர் பழனிசாமி உண்மை நிலையைத் திரித்து, தனக்குத் தானே ஒரு பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருப்பது கற்பனையை விஞ்சுவதாக இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளவர் களின் எண்ணிக்கை 6.46 லட்சத்தைத் தாண்டி விட்டது. அதிமுக ஆட்சியில், மாநிலத்தின் கடன் 4.56 லட்சம் கோடியைத் தாண்டி, இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பதாகச் செய்திகள் வெளி வருகின்றன.போதாக்குறைக்கு மவுனமாக இருந்து, சந்தையில் இன்னும் கடன் வாங்கிக் கொள்கிறோம் என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநிலத் தின் நிதி உரிமையை ‘சரண்டர்’ செய்திருக்கிறார் முதல்வர்.இதுவரை நடத்தப்பட்ட உலக முத
லீட்டாளர் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே இதுவரை மாநில மக்களுக்குத் தெரியவில்லை. அனைத்துத் திசைகளிலும் எல்லா துறைகளிலும் படுதோல்வி கண்டு,
மூழ்கும் கப்பலில் அமர்ந்து கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, ‘முதலீடுகளை ஈர்த்து விட்டோம்’, ‘புதிய தொழில்களைத் தொடங்கி விட்டோம்’ என்று தமிழக மக்களின் காதில் பூ சுற்றும் வேலையில் இறங்கியிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் இரண்டாவது மாநிலமாகத் தமிழகம். ஒட்டுமொத்த நாட்டில் இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களில் 77 சதவீதம் பேர், தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில்தான் இருக்கிறார்கள்.
கொரோனா சோதனை கணக்குகள் மாவட்ட அளவிலும் இல்லை, மாநில அளவில் அரசு சொல்லும் கணக்கிலும் உண் மைக்குப் பெரும் பஞ்சம்! கொரோனா நோயாளிகளுக்குத் தரமற்ற உணவு, கொரோனா தொற்றுக்குள் ளானவர்கள் வீட்டில் தகரம் அடிப்பதில் கூட பிரச்சினை. அதைக்கூட றையாகச் செய்யத் தவறி இப்போது நீதிமன்றத்தின் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது அதிமுக அரசு.
அரசு வகுத்துள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைக் காற்றில் பறக்க விடுவோர் அதிமுக அமைச்சர்களும், முதல் வரும்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!ஆகவே, தனது கொரோனா நிர்வாகத் தோல்வியைத் திசைதிருப்ப, முதல்வர் பழனிசாமி போடும் நாடகங்கள் எடுபடாது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு விட்டோம் என்று கூறி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று முதலீடுகளைக் கொண்டு வந்துவிட்டோம் என்று பொய்களை அள்ளி வீச முடியாது.கொரோனா காலப் பொருளாதாரத் தேக்க நிலைமை குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜனின் அறிக்கையையே வெளியிடத் துணிச்சல் இல்லாத முதல்வர் பழனிசாமி, உலக முதலீட்டாளர் மாநாடுகள் இரண்டிலும் போடப்பட்ட ஒப்பந் தங்களால் வந்த முதலீடுகள் எவ்வளவு? உருவாக்கிய வேலைவாய்ப்புகள் எவ்வளவு? என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட முடியாத முதல்வர், ‘தமிழகத்தை முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக மாற்றிவிட்டோம்’ என்று கூறுவது நல்ல வேடிக்கை. நான்காண்டு காலத்தில் தனது ஆட்சியின் தோல்வியை மறைக்கும் முயற்சி!ஆகவே, முதல்வருக்கு உள்ளபடியே தைரியமிருந்தால், இதுவரை அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஊழலின் சுரங்கமாக இருக்கும் கொரோனா கொள் முதல்கள் குறித்து தனியாக ஒரு வெள்ளை அறிக்கையை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.